*இலக்கிய வகைமைக்குள் மாற்றுத்திறனியத்தைக் கட்டமைத்தல்*
சே சரவணன்,
கௌரவ
விரிவுரையாளர்,
தமிழ்த் துறை,
மாநில கல்லூரி, சென்னை.
*முன்னுரை*
இலக்கியங்களை மனித வாழ்வை படம் பிடித்துக் காட்டும் கண்ணாடி என்பார்கள். இச்சொல்லாடலில் எனக்கு உடன்பாடு உண்டு என்றாலும், இதிலிருந்து நாம் அடுத்த கட்டத்திற்குச் செல்லவேண்டிய காலம் வந்து விட்டதாகவே கருதுகிறேன். அதாவது இலக்கியங்களை கண்ணாடி என்று குறிப்பிடுவதைக் காட்டிலும் மருந்து என்று கூறுவது சாலச் சிறந்ததாக இருக்கும். மனித இனம் எப்பொழுதெல்லாம் தன் உயிர்ப்பை இழக்கிறதோ அப்பொழுதெல்லாம் இலக்கியங்கள்தான் துணையாக வந்து மனித இனத்திற்கு சில படிப்பினைகளைக் கற்பிக்கிறது. மனித இனம் எண்ணற்றவற்றை தனது உருவாக்கத்தின் மூலம் படைத்திருந்தாலும் மனித இனத்தின் சிறந்த உருவாக்கம். இலக்கியங்கள்தான். மனித இனம் தன்னைத்தானே வளர்த்துக் கொள்ளவும் நெறிப்படுத்திக் கொள்ளவும் இலக்கியங்களையே பயன்படுத்தி இருக்கிறது.
இலக்கியம் என்பது எழுத்து மரபு தோன்றியதற்குப் பிறகு எழுந்த இலக்கியங்களை மட்டும் குறிக்காது. மாறாக எழுத்து மரபிற்கு முன்தோன்றிய வாய்மொழி மரபின் அடிப்படையில் எழுந்த வழக்காறுகளும் இலக்கியத்துக்குள் அடங்கும். பழமொழிகளாலும், விடுகதைகளினாலும், கதைகளினாலும், பாடல்களாலும்தான் மனித வாழ்வு ஒழுங்குபடுத்தப் பட்டன. மனிதர்களுக்குத் தேவையான அறிவுரையையும் விழிப்புணர்வையும் இவ்விலக்கியங்களே வழங்கின வாய்மொழி இலக்கியங்கள் மனித வாழ்வை நாகரிகமடையச் செய்தன என்றால் எழுத்திலக்கியமோ அந்த நாகரிகத்தை அடுத்தத் தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணியைச் செய்தன எனலாம். இலக்கியங்களில் பதிவு செய்யப்படும் மனித வாழ்க்கையானது அடுத்தத் தலைமுறைக்கு வாழ்வியல் விழுமியங்களாக மாறும் என்பதே யதார்த்தமான உண்மை.
இப்படி இருக்கையில் தமிழ் இலக்கியங்களில் மாற்றுத்திறனாளிகளை கருணைக்கு உரியவர்களாகவும் இரக்கத்திற்கு உரியவர்களாகவும் அனுதாபத்திற்கு உரியவர்களாகவும் செயல்திறன் அற்றவர்களாகவும் மற்றவர்கள் அரவணைப்பிலேயே வாழக் கூடியவர்களாகவும் பதிவு செய்ததனால் பல தலைமுறையினருக்கு மாற்றுத்திறனாளிகளைக் குறித்த தவறான புரிதலை இவ்விலக்கியங்கள் உருவாக்கி விட்டன. இதனால் சமூகத்தால் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கப்பட்டனர். சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் மதிப்பும் மாண்பும் மதிக்கப்படவில்லை. அவர்களின் உரிமைகள் நிலைநாட்டப் படவில்லை. மாற்றுத்திறனாளிகளும் சமூகத்தில் ஒர் அங்கம் என்பதனை சகமனிதர்கள் புரிந்து கொள்ளவில்லை. இத்தகையச் சூழல் மாற வேண்டும் எனின் இலக்கியங்களில் மாற்றுத்திறனாளிகளைப் பற்றிப் பதிவு செய்யப்பட்ட தவறானக் கருத்துகள் முதலில் உடைக்கப்பட வேண்டும். அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளின் திறமையையும் முயற்சியையும் வெளி உலகத்துக்கு வெளிப்படுத்தக் கூடிய வகையில் நேர்மறையான கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு மாற்றுத்திறனாளிகளைக் குறித்த பதிவுகளை படைப்பாக்கம் செய்யவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடம் உறுதி செய்யப்படும். சமூகத்தில் விளிம்பு நிலையில் இருக்கக்கூடிய தலித்துகளும் பெண்களும் தங்களுக்கென்று ஒரு இலக்கிய வகைமையை உருவாக்கி தங்களின் உரிமைக்குரலை உலகம் அறியச் செய்வதுபோல் மாற்றுத்திறனாளிகள் சமீபகாலங்களில் மாற்றுத்திறனியம் என்ற ஒரு இலக்கிய வகைமையை உருவாக்கி தங்களின் உரிமைக்குரலை இவ்வுலகில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இம்முயற்சி வரவேற்கத் தக்கது. இம்முயற்சியில் ஏனைய எழுத்தாளர்களும் தங்களை இணைத்துக் கொண்டு மாற்றுத்திறனாளிகளைக் குறித்த படைப்பாக்கங்களை மிகுதியாக படைக்க வேண்டும்.
*பழந்தமிழ் இலக்கியங்களும் மாற்றுத்திறனாளிகளும்*
தமிழ் இலக்கியங்களில் மாற்றுத்திறனாளிகளைக் குறித்தப் பதிவுகள் இடம் பெற்றிருக்கின்றன. அப்பதிவுகளை படிக்கும்பொழுது மாற்றுத்திறனாளிகள் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப் பட்டிருப்பதையும் அவர்களை சகமனிதர்கள் புரிந்து கொள்ள மறுத்ததையும் வெளிப்படையாகவே புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் மாற்றுத்திறனியப் பார்வையில் அப்பதிவுகளை அணுகும்பொழுது புதிய தரவுகள் கிடைக்கின்றன.அவற்றை வைத்து பார்க்கும்பொழுது மாற்றுத்திறனாளிகள் திறமை மிக்கவர்களாக இருந்தாலும் சமூகம் அவர்களை அங்கீகரிக்காமலேயே இருந்திருக்கிறது என்பதனை அறிய முடிகிறது.
*திருதராஷ்டிரருக்குத் தகுதி இல்லையா?*
மகாபாரதத்தை வியாசர் வடமொழியில் எழுதியிருந்தாலும் பழங்காலத்திலேயே அந்நூல் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டன. சங்க காலத்தில் வாழ்ந்த பெருந்தேவனார் என்ற புலவர் மகாபாரதத்தை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். எனவேதான் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்று இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாமர மக்களும் மகாபாரதக் கதையை அறிந்து வைத்திருப்பதிலிருந்து அக்கதையின் தாக்கத்தையும் பரவலாக்கத்தையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. இக்கதையில் ஒரு முக்கிய கதாபாத்திரம் திருதராஷ்டிரர். இவர் ஒரு பார்வைமாற்றுத் திறனாளி. திருதராஷ்டிரர் அரசர் விசித்ரவீர்யனின் மூத்த அரசி அம்பிகாவிற்கு பார்வைமாற்றுத் திறனாளியாகப் பிறந்தார். மூத்தவராக இருந்தபோதிலும் பார்வையின்மை காரணமாக அவருக்கு அரியணை மறுக்கப் பட்டது. அது அவரது இளைய ஒன்றுவிட்ட சகோதரர் பாண்டுவிற்குச் சென்றது.
திருதராஷ்டிரர் அரசாளும் உரிமை பெற்றிருந்த போதிலும் பார்வைமாற்றுத் திறனாளி என்பதனால் அவரது உரிமை மறுக்கப்பட்டது. இவருக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் குறித்து சமூகத்தில் யாரும் குரல் எழுப்பவில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு இழைக்கப்படும் உரிமை மீறல்களை சமூகம் மௌனமாகக் கடந்து செல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. மேலும் அவரது சகோதரர் பாண்டுவின் மரணத்திற்குப் பிறகு வேறு வழியில்லாமல் அரியணை திருதராஷ்டிரரிடம் செல்கிறது. ஒருவேளை மாற்றுத்திறனாளி அல்லாத ஒருவர் அத்தருணத்தில் அக்குடும்பத்தில் இருந்திருப்பாராயின் அரசபதவி. ஒரு பொழுதும் திருதராஷ்டிரரிடம் சென்றிருக்க வாய்ப்பில்லை.
·
காந்தாரியின் செயலும் மாற்றுத்திறன் அவமதிப்பும்*
மகாபாரதக்கதையைப் பேசும் பலரும் காந்தாரியின் செயலை மிக உயர்வாகப் பேசுவார்கள். மனைவி என்றால் காந்தாரியைப் போல் இருக்க வேண்டும். தன் கணவனுக்குப் பார்வையில்லை என்பதை உணர்ந்து அவரைப் போல் தானும் இருக்க வேண்டும். அவர் பார்க்காத உலகத்தை நாமும் இனிமேல் பார்க்கக் கூடாது என்று நினைத்து தன் கண்களைக் கட்டிக் கொண்டாள்.
“இனி யானொருவரையும் கண்ணாற் காணேனென்று
சமைத்த பட்டமொன்றினிற் பொதிபெதும்பை”
வில்லிபாரதம்
ஆதி பருவம்
சம்பவச்சருக்கம்
பாடல் 24
வரிகள் 1-2
தன் கணவனுக்கு இல்லாத எதுவும் தனக்கு வேண்டாம் என்று நினைக்கக் கூடியவள் என்று காந்தாரியைப் புகழ்ந்து தள்ளுகிறார்கள். காந்தாரியின் செயல் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறை என்பதை நாம் சிந்திக்கத் தவறிவிட்டோம். திருதராஷ்டிரருக்கு காந்தாரியின் செயல் மிகுந்தத் துயரத்தை ஏற்படுத்தியிருக்கும். பார்வை இல்லாத தனக்குத் துணையாக இருந்து வழிகாட்டுவாள் என்று நம்பியவருக்கு ஏமாற்றந்தான் மிஞ்சியது. காந்தாரி தன் கண்களைக் கட்டிக் கொண்டதன் மூலமாக திருதராஷ்டிரரின் பார்வையின்மையை கேலி செய்கிறாள். தன் பார்வை திருதராஷ்டிரனுக்கு எந்த விதத்திலும் பயன்படக்கூடாது என்று நினைக்கும் காந்தாரியின் மனதை மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக இருக்கும் சமூகத்தின் மனமாகவே கருத வேண்டும்.
*சிவனுக்காக தண்டி செய்ததும் தண்டிக்காக சிவன் செய்ததும்*
சைவ மரபில் தோன்றிய அறுபத்து மூவர் நாயன்மார்களில் ஒருவர் தண்டி நாயனார். திருவாரூரில் பிறந்த அவர் அவ்வூரிலேயே முக்தி அடைந்தார் என்று தலபுராணம் கூறுகிறது. பிறவியிலேயே மாற்றுத்திறனாளியான தண்டி நாயனார் சிவன்மீது ஆழமான பக்தி கொண்டிருந்தார். திருவாரூரில் குடி கொண்டுள்ள இறைவன்மீது பக்தி அதிகமாகவே அக்கோயிலின் திருக்குளத்தைச் செப்பனிடும் பணியில் ஈடுபட்டார். ஏனெனில் சமணர்களுடைய குடியிருப்பு குளத்தின் மேற்குப் பகுதியில் மிகுதியானதால் குளத்தின் அகலம் சுருங்கியது. மேலும் குளம் தூர்வாரப்படாமல் இருந்ததனால் ஆழமும் குறைந்திருந்தது. எனவேதான் குளத்தைச் செப்பனிடும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சிவத்தொண்டு செய்வது பெரும் பாக்கியம் என்று கருதியதனால் பார்வை இல்லாதபோதும் பல இடர்பாட்டையும் தாண்டி குளத்தைத் தூர்வாரும் பணியை மேற்கொண்டார். குளத்தின் நடுவே ஒரு கழியை நட்டு அதில் கயிற்றின் ஒரு முனையைக் கட்டினார். குளத்தின் கரையில் மற்றொரு கழியை நட்டு அதில் கயிற்றின் மற்றொரு முனையைக் கட்டினார். பிறகு கயிற்றைத் தடவிக் கொண்டு குளத்தில் வாரிய மண்ணை கரையில் வந்து கொட்டினார்.
அப்பொழுது சமணர்கள் தண்டியிடம் வந்து ”குளத்திலிருந்து மண்ணை வாராதே. அதில் இருக்கும் சிற்றுயிர்கள் இறந்து போய்விடும். உன் செயலை நிறுத்து” என்று கூறினார்கள். அதற்கு மறுமொழி உரைத்த தண்டி “இது சிவனுக்குச் செய்யும் தொண்டு. இதன் மேன்மை உங்களுக்குப் புரியாது” என்று கூறினார். சமணர்கள் தண்டியைப் பார்த்து “நாங்கள் சொல்லும் அறம் உனக்குக் கேட்கவில்லையே. உனக்குப் பார்வை மட்டும்தான் இல்லை என்று நினைத்தோம். செவியும் கேட்கவில்லையா” என்று கேலி செய்தனர். மேலும் தண்டி நட்டு வைத்திருந்த கயிற்றையும் கழியையும் பிடுங்கி எறிந்தனர். இதனால் தண்டி கரைக்கு வருவது கடினமாயிற்று.
“அருகர் அது கேட்டு உன் தெய்வத்து
அருளால் கண்நீ பெற்றாயேல்
பெருகும் இவ்வூரினில் நாங்கள்
பின்னை இருக்கிலோம் என்று
கருகு முருட்டுக் கைகளால் கொட்டை
வாங்கிக் கருத்தின் வழி
தருகைக்கயிறும் தறியும் உடன் பறித்தார்
தங்கள் தலை பறித்தார்”
(பெரியபுராணம்
வரிவண்டுச் சருக்கம்
தண்டியடிகள் புராணம்
பாடல் 10)
இக்கதையின் சாராம்சத்தை நாம் உற்றுக் கவனிக்க வேண்டும். ஒரு பார்வைமாற்றுத் திறனாளி ஒரு செயலைச் செய்வதற்கு எந்த அளவிற்கு முயற்சியை மேற்கொள்கிறார் என்பதை கவனிக்க வேண்டும். குளத்தைத் தூர்வாருதல் மற்றவர்களுக்கு சாதாரணப் பணி. மாற்றுத்திறனாளிக்கு அப்படி அல்ல. மாற்றுத்திறனாளியோடு இணைந்து ஒரு பணியைச் செய்வதற்கு பொதுச் சமூகத்தினருக்கு அன்றும் சரி, இன்றும் சரி மனமுதிர்ச்சி வரவில்லை. மேலும் தண்டி நாயனார் தனது வழி அடையாளத்திற்காக நட்டு வைத்திருந்தக் கழியை பிடுங்கி எறிந்தார்கள். சமணர்களின் இச்செயலை நாம் எப்படிப் புரிந்து கொள்வது? ஒரு பார்வைமாற்றுத் திறனாளியின் இயக்கத்தை முடக்கக்கூடிய வகையில் இச்செயல் அமைந்திருப்பதைப் பற்றி யாரும் பேசுவதில்லை. வழி தெரியாமல் அவர் எப்படி தடுமாறிப் போயிருப்பார் என்பதனை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சிற்றுயிர்களுக்குக்கூட தீங்கு விளைவிக்கக்கூடாது என்று வாழக்கூடிய நெறியை உடையவர்கள் சமணர்கள். அப்படிப்பட்டவர்கள்தான் இங்கு ஒரு பார்வைமாற்றுத் திறனாளியைக் காயப்படுத்தியிருக்கிறார்கள். இதிலிருந்து அறியப்படுவது யாதெனின் சிற்றுயிர்களைக்கூடக் காயப்படுத்திவிடக்கூடாது என்பதில் இருக்கும் கவனம் மாற்றுத்திறனாளிகள் என்று வரும்பொழுது காணாமல் போய் விடுகிறது. இதிலிருந்து சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை நம்மால் உணர முடிகிறது.
Lஇரட்டையர்களின் உலகம்
இரட்டையர்கள் சோழநாட்டில் கி.பி.14 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். பண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள் என்று சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றவர்கள். இரட்டையர்களில் மூத்தோரின் பெயர் முதுசூரியன். இவர் ஒரு இயக்கத்திறன் மாற்றுத்திறனாளி. இளையவரின் பெயர் இளஞ்சூரியன். இவர் ஒரு பார்வைமாற்றுத் திறனாளி. இவர்கள் இருவரும் இணைந்து தங்களின் தமிழ்ப்புலமையை வெளிப்படுத்தி பல நூல்கள் இயற்றி உள்ளார்கள். சைவத்தின்மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட இருவரும் நேரடியாகப் பலத் தலங்களுக்கும் சென்று சிவனின் பெருமைகளை பாடல்களாக இயற்றி உள்ளார்கள். இவர்களின் பாடல்களில் ஒரு கட்டமைப்புக் காணப் படும். ஒரு பாடலின் முதல் பாதியை பெரும்பாலும் முதுசூரியன் பாடுவார். பின்பகுதியை இளஞ்சூரியன் பாடுவார். இவர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று பாடல்களை இயற்றி உள்ளார்கள்.
இரட்டையர்கள் பயணம் செய்யும் முறையைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும். முதுசூரியனால் நடக்க முடியாது. எனவே அவர் இளஞ்சூரியனின் தோளின் மீது ஏறி அமர்ந்து கொள்வார். இளஞ்சூரியனால் பார்க்க முடியாது. எனவே அவரால் தனியாக நடந்து செல்ல முடியாது. இந்நிலையில்தான் முதுசூரியன் இளஞ்சூரியனின் தோள் மீது அமர்ந்தபடியே வழி சொல்லுவார். அவர் சொல்வதைக் கேட்டு அவரைச் சுமந்து கொண்டு இவர் நடந்து செல்வார். இப்படித்தான் இவர்களுடைய பயணம் அமைந்திருந்தது. தங்களின் வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்வதற்காகவும் சிவன்மீது பாடல்களைப் பாடுவதற்காகவும் பெரும்பாலும் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றனர். மாற்றுத்திறனாளிகளான இவர்கள் மிகவும் சிரமப்பட்டேப் பயணம் செய்திருக்கிறார்கள். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை எவ்வளவு நேரம் சுமந்து நடந்து செல்ல முடியும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். சமூகம் எந்தவிதத்திலும் இவர்களுடைய பயணங்களுக்கு உதவவில்லை. இருப்பினும் மற்றவர்களுடைய ஆதரவு கிடைக்கவில்லை என்று வீட்டில் முடங்கிக் கிடக்காமல் தங்களின் திறமையை சமூகத்திற்கு வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இவர்கள் இருவரும் ஒருமுறை பாண்டிய மன்னன் ஒருவனைச் சந்தித்துப் பரிசில் பெறுவதற்காக மேடு பள்ளம் நிறைந்த வழித்தடத்தில் நீண்ட தொலைவு பயணம் செய்து அரண்மனையை அடைந்தார்கள். அப்பொழுது பரிசில் பெறச் செல்கையில் அரசனின் அமைச்சர் இவர்கள் இருவரையும் தடுத்து விட்டார். இதற்குக் காரணம் அரசனை மாற்றுத்திறனாளிகள் நேருக்கு நேர் சந்திக்கக் கூடாது என்பதுதான். ஏனெனில் அரசர் மாற்றுத்திறனாளிகளைச் சந்தித்தால் அரசனுக்குத் தீங்கு விளையும் என அன்றைய சமூகத்தில் ஒரு மூட நம்பிக்கை பரவியிருந்ததுதான் காரணம். மாற்றுத்திறனாளி என்பதனால் சில நேரங்களில் சில இடங்களில் இரட்டையர்களுக்கான மதிப்பும் பரிசும் கிடைக்காமல் போயிருக்கிறது. மேலே குறிப்பிட்டது போல் பாண்டிய மன்னனின் அமைச்சர் இவர்களை அவமானப்படுத்தியதால் இவர்களுக்குக் கோபம் ஏற்பட்டது. அந்தக் கோபத்தைப் பாடலாக வெளிப்படுத்தினார்கள்.
அப்பாடல்
“புராதன மான கவிப்புல வீரிந்தப் புன்குரங்கு
மராமரம் விட்டிங்கு வந்ததென் வந்தவாறு சொல்வேன்
தராதல மன்னுந் தமிழ்மா றனையுந்தன் றம்பியையும்
இராகவ னென்று மிலக்குவ னென்றும்வந் தெய்தியதே.”
(தனிப்பாடல் திரட்டு)
அதாவது தமிழ்ப் புலவர்களைப் பார்த்து இரட்டையரில் ஒருவர் இப்படி கேள்வி கேட்கிறார். மராமரத்தில்(மாமரம்) இருக்கக் கூடிய புன்குரங்கு அரசவைக்கு எப்படி வந்தது என்று வினவ மற்றொருவர் பாண்டிய மன்னனையும் அவரது இளைய சகோதரரையும் புகழ் வாய்ந்த இராமன் இலக்குவன் என்று நினைத்து இந்தப் புன்குரங்கு வந்து இருந்தது என்று விடையளிக்கிறார்.
இப்பாடலை இரட்டையர்களின் ஏனைய பாடல்களில் ஒன்றாகக் கருதி விட முடியாது. இப்பாடலை ஒரு எதிர்ப்புக் குரலாகவே நாம் கருத வேண்டும். சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் இழிவுபடுத்தப் படுவதும் அதற்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்துவதும் எல்லாக் காலங்களிலும் இருந்து வருகிறது. இரட்டையர்கள் வாழ்ந்த காலம் கி.பி.பதினாலாம் நூற்றாண்டு. அதாவது விஜயநகரப் பேரரசு இஸ்லாமிய அரசு ஆகிய இரண்டும் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். அத்தகைய காலகட்டத்தில் தன்னிச்சையாக பயணம் செய்திருக்கிறார்கள். பதற்றம் நிறைந்தப் போர்ச்சூழலில் மாற்றுத்திறனாளிகளால் இயல்பாக நடமாட முடியாது. இதைக் கருத்தில் கொண்டால் இரட்டையர்களின் பயணம் சாதாரணப் பயணம் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். சமூகச் சூழலும் அரசியல் சூழலும் இவர்களுக்கு எதிராக இருந்த காலகட்டத்தில்தான் உடலியல் குறைபாட்டையும் மீறி இவர்கள் பயணம் செய்திருக்கிறார்கள். மாற்றுத்திறனாளிக்கு மாற்றுத்திறனாளிதான் ஆதரவு என்ற கருத்தினைச் சொல்லாமல் சொல்கிறது இவர்களது பயணம்.
*சிவசிதம்பரத்தின் பொருளும் அந்தகக்கவி வீரராகவமுதலியாரின் செயலும்*
கி.பி.பதினேழாம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்தில் பூதூர் என்னும் சிற்றூரில் வாழ்ந்தவர் வீரராகவர். இவர் ஒரு பார்வைமாற்றுத் திறனாளி. அந்தகன் என்றால் பார்வை இல்லாதவர் என்பது பொருள். எனவேதான் வீரராகவரை அந்தகக்கவி வீரராகவர் எனக் குறிப்பிட்டனர்.
சிற்றிலக்கிய நூல்கள் பலவற்றை படைத்துள்ளார். குறிப்பாக பிள்ளைத்தமிழ், உலா நூல்கள் எழுதுவதில் வல்லவராக இருந்துள்ளார். தமிழ்மொழியிலும் இலக்கண இலக்கியங்களிலும் புலமை மிக்க இவர் தனது வாழ்வாதாரத்திற்காக அரசர்களையும் செல்வந்தர்களையும் நாடிச் சென்று பாடல்களைப் பாடியிருக்கிறார். ஏனைய தமிழ்ப்புலவர்களும் இவ்வாறே வாழ்ந்தனர் என்பது நாம் அறிந்ததே. இருப்பினும் மற்ற புலவர்களைப் போல் மாற்றுத்திறனாளிப் புலவர்கள் நடத்தப்படவில்லை. மாற்றுத்திறனாளி என்பதனாலேயே அவமதிக்கப் பட்டிருக்கிறார்கள். அரசனோ, செல்வந்தனோ, யார் ஒருவர் மாற்றுத்திறனாளியை நேரிடையாகச் சந்தித்து உரையாடுகிறானோ அவன் வாழ்வில் தீங்கு ஏற்படும் என்றுத் தவறாகக் கற்பிக்கப் பட்டிருந்தது. அந்தக் கற்பிதம் சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. இந்தச் சமூகப் பின்னணியில்தான் வீரராகவர் கல்வி கற்றிருக்கிறார். கல்வி கற்ற இவரை இந்தச் சமூகம் எவ்வாறு அறிமுகம் செய்கிறது என்பதைப் பாருங்கள், அந்தகக்கவி வீரராகவர் என்று அவர் பெயரோடு சேர்த்து அவரின் குறைபாட்டையும் சொல்லக் காரணம் அவரை ஒதுக்குவதற்குத்தான். சமூகம் அவரை ஒதுக்கினாலும் தம் திறமைமீது அவர் வைத்திருநத நம்பிக்கையினாலும் சமூகத்தோடுத் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தினாலும் தனக்கு ஏற்பட்ட பல இடர்பாடுகளையும் இன்னல்களையும் கடந்து அவர் வாழ்ந்தார்.
வீரராகவர் தனக்கு ஏற்பட்ட வறுமை நிலையைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு இலங்கை மன்னன் பரராசசேகரனைச் சந்திக்கச் சென்றார். தன்னுடன் உதவிக்கு ஒரு மாணவரையும் அழைத்துச் சென்றிருந்தார்.பரராசசேகரின் அமைச்சர் அரசரிடம் நீங்கள் அந்தகக்கவி வீரராகவரை சந்திக்கக் கூடாது என்று தடுத்தார். ஆயினும் அரசர் வீரராகவரைச் சந்திக்க விரும்பியதனால் அமைச்சர் அதற்கு மாற்றுவழி செய்தார். அரசருக்கும் வீரராகவருக்கும் இடையே திரை தொங்கவிடப் பட்டது. வீரராகவருக்கு தன்முன் திரை இருப்பது தெரியாது. தன் ஆசிரியருக்கு திரைச்சீலை இருப்பதை உணர்த்த நினைத்த மாணவர் ‘சிவசிதம்பரம்’ என்று உச்சரித்தார். மாணவரின் குறிப்பை உணர்ந்த வீரராகவர் சினமுற்றார். உடனே ஒரு பாடலைப் பாடித் திரைச்சீலை எரிந்து விழும்படிச் செய்தார்.
அதனைத் தொடர்ந்து அரசரின் மனதில் இருந்த கேள்விகளுக்கு தன் பாடலின் வழியே விடை அளித்தார். பிறர் மனதில் இருப்பதைத் தானாகவே உணர்ந்து கொள்ளும் ஆற்றலுக்குப் பெயர் கண்டசுத்தி. இந்த ஆற்றலை வீரராகவர் பெற்றிருந்தார் என்பர். அரசருக்கு இவ்வாற்றலின் அடிப்படையிலேயே அவர் 7விடையளித்தார்.
இத்தகையத் திறமை மிக்க வீரராகவரை நேருக்கு நேர் சந்திக்கக்கூடாது என்று கூறிச் சமூகம் புறக்கணித்திருக்கிறது. கடல் கடந்து சென்றாலும் மாற்றுத்திறனாளிகளின் சமூகநிலையில் எந்த மாற்றமும் இல்லை. மாற்றுத்திறனாளிகளை நேருக்கு நேர் சந்தித்தால் தீங்கு விளையும் என்ற கருத்தானது மாற்றுத் திறனாளிகளை சமூகத்தில் இருந்துப் புறக்கணிக்கும் செயல் மட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகளை வேரோடு அழிக்கும் செயலாகவும் அமைகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். வீரராகவர் திரைச்சீலைகளை எரித்தச் செயல்பாட்டை மாற்றுத்திறனாளிகள் குறித்தத் தவறான சித்திரத்தை உருவாக்கும் மூடநம்பிக்கையின் மீது அவர் வைத்த நெருப்பாகவே பார்க்கப்பட வேண்டும். வீரராகவர் திரைச்சீலை எரிந்துவிழும்படி பாடினார் என்ற தகவல் செவிவழித் தகவலாக இருந்தபோதிலும் இது சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் மிகப் பெரியது. எனவேதான் இக்கருத்தைப் பற்றி இங்கு பேசப்பட்டுள்ளது.
*லண்டன் திரைப்படமும் மாற்றுத்திறனாளிகளைக் குறித்தத் தவறான புரிதலும்*
11.02.2005 ஆம் ஆண்டு திரு.சுந்தர்.சி. அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் லண்டன் ஆகும். இப்படத்தைக் கோடிக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள். நகைச்சுவையின் மூலம் பலரையும் சிரிக்க வைத்த இந்தத் திரைப்படம் பார்வைமாற்றுத் திறனாளிகளை மட்டும் வருந்தச் செய்து விட்டது என்றால் அது மிகையல்ல. கதையின்படி செல்வந்தர்களான பார்வைமாற்றுத் திறனாளி இணையர்கள் வெளிநாட்டில் இருக்கும் தங்களின் பேரன் வருவதாகக் கூறியிருந்ததனால் பேரன் வரும் நாட்களை எதிர்நோக்கி இருந்தனர். எதிர்பாராத சூழலினால் வெளிநாட்டிலிருக்கும் பேரன் அங்கேயே இறந்து விடுகிறார். இச்செய்தியை அறிந்து கொண்ட சிவராமன் ( நடிகர் பிரசாந்த்) கதிர் (நடிகர் பாண்டியராஜன்) இவர்கள் இருவரும் தாம் அறிந்த செய்தியை பார்வைமாற்றுத் திறனாளி இணையருக்கு முறைப்படித் தெரிவிக்காமல் பணத்திற்காக தாங்களே பேரனாக நடிக்கத் தொடங்குகிறார்கள். பார்வைமாற்றுத் திறனாளிகளான ராஜசேகர் (நடிகர் விஜயகுமார்) பார்வதி (நடிகை ஸ்ரீவித்யா) ஆகிய இருவராலும் தங்களின் எதிரில் இருப்பவர்களைப் பார்க்க முடியாது.எதையும் தொட்டுத்தான் உணர முடியும். இந்நிலையில்தான் தங்கள் வீட்டிற்குள் தங்கள் பேரனாக இருவர் வந்திருப்பதை அறியாமல் ஏமாற்றப்படுகிறார்கள். அதாவது ராஜசேகர் சிவராமனின் கையைப் பிடித்துக்கொண்டு பேசும்போது சிவராமன் வாயைத் திறந்து பேசாமல் இருக்க, அவருக்குப் பின்னால் சற்றுத் தொலைவிலிருக்கும் கதிர் பேசுவார். உடலால் ஒருவர் பேரனாகவும் குரலால் மற்றொருவர் பேரனாகவும் நடித்துக் கொண்டிருப்பார். பார்வைமாற்றுத் திறனாளி இணையர்களால் கண்டுபிடிக்க முடியாது. இப்படியாக அந்தப் படம் நகர்ந்து செல்லும்.
சிந்திக்கும் ஆற்றல் உடைய எவரும் இப்படியான கருத்தை ஆதரிக்கமாட்டார்கள். இந்தப்படம் மாற்றுத் திறனாளிகளைக் குறித்து எந்த மாதிரியான சித்திரத்தை உருவாக்குகிறது என்றால் பார்வைமாற்றுத் திறனாளிகளை எளிதில் ஏமாற்றி விடலாம், அவர்கள் ஒரு ஏமாளி, முட்டாள் என்றுதான். ஒரு பார்வைமாற்றுத் திறனாளியால் தன்னைச் சுற்றி நிகழும் செயல்களைப் புரிந்து கொள்ள முடியாது என்று சொல்வதுபோல் இப்படம் அமைந்துள்ளது. உண்மையில் சொல்லப்போனால் தன்னைச் சுற்றி நிகழும் செயல்களை மிக நுணுக்கமாக புரிந்து கொள்ளும் ஆற்றல் உடையவர்கள் பார்வைமாற்றுத் திறனாளிகள். இப்படத்தில் காட்டப்பட்டுள்ள காட்சிகள் இயல்புக்கு மாறானவை. தவறான கருத்துப்பதிவு என்பதை இங்கு பதிவு செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளிகளைப் பற்றி எவ்விதப் புரிதலும் இல்லாமல் மாற்றுத்திறனாளிகளின் ஆளுமையைச் சிதைக்கும் வண்ணம் காட்சிகளை அமைத்திருக்கிறார்கள்.
மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களை பார்க்கக் கூடிய பொதுமக்கள் படத்தில் காட்டப்படுவதையே உண்மை என்று நம்புகிறார்கள். எனவே தன்னோடு இணைந்து வாழும் மாற்றுத்திறனாளிகளை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. மக்கள் மாற்றுத்திறனாளிகளை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் இது போன்ற கருத்துகள் திரைப்படங்களில் தடுக்கப்பட வேண்டும்.
மேலும் இப்படத்தில் நாம் கவனிக்க வேண்டிய மற்றொரு கருத்தும் இருக்கிறது. இணையர் இருவரையும் பார்வைமாற்றுத் திறனாளிகளாகக் காட்டியிருக்கும் குறியீட்டை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஒருவர் எவ்விதக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறாரோ அதே குறைபாடு உடையவரைத்தான் அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலை சமூகத்தில் காணப்படுகிறது. இது மாதிரியான சூழல் உருவாவதற்கு இது போன்ற திரைப்படங்களும் ஒரு காரணமாக அமைகிறது. மாற்றுத்திறனாளி அல்லாத ஒருவர் ஒரு மாற்றுத்திறனாளியைத் திருமணம் செய்தால் வாழ்க்கை சிறப்பானதாகவே இருக்கும் என்று திரைப்படங்கள் காட்ட வேண்டும்.
*முடிவுரை*
இக்கட்டுரையின் நோக்கம் தமிழ் இலக்கிய வகைகளில் மாற்றுத்திறனியம் வேண்டும் என்பதுதான். அதாவது நவீன இலக்கியத்தில் மார்க்ஸியம், தலித்தியம், பெண்ணியம், அரவானியம் போன்ற கருத்தியலில் கவிதை, சிறுகதை, புதினம், கட்டுரை போன்றவைகள் படைக்கப் படுவதைப் போலவே இனி மாற்றுத்திறனிய கருத்தியலிலும் படைப்புகள் படைக்கப் படவேண்டும். சமீப காலங்களில் ஒரளவிற்கு மாற்றுத்திறனியம் சார்ந்த படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. ஜெயகாந்தனின் வாய்ச்சொற்கள் (சிறுகதை), ராஜநாராயணனின் கோமதி (சிறுகதை), ஏம்வி.வெங்கட்ராமின் காதுகள் (புதினம்), ஜெயமோகனின் ஏழாம் உலகம் (புதினம்), நிர்மலின் சகாக்கள் வேறானவர்கள் ஆனால் நிகரானவர்கள் (கட்டுரை), சரவணனின் எங்கே எனது ஒளி (சிறுகதை), தேனி சீருடையானின் நிறங்களின் உலகம் (புதினம்), முருகேசனின் கூண்டில் ஏற்றப்படாத குற்றவாளிகள் (கட்டுரை), ரமேஷின் வேடிக்கை பார்க்கும் இருள் (கவிதை). இப்படைப்புகளால் மாற்றுத்திறனியம் குறித்து பொதுச்சமூகமும் ஓரளவிற்கு அறிய ஆரம்பித்திருக்கிறது. இன்னமும் மிகுதியான படைப்புகள் மாற்றுத்திறனாளிகளைக் குறித்து படைக்கப்பட வேண்டும். அவ்வாறு படைக்கப்பட்ட படைப்புகளின் மீது கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு நடத்துவதன் மூலம் மாணவர்களிடையே மாற்றுத்திறனியம் குறித்தப் புரிதலை உருவாக்க முடியும்.
*துணைநூல் பட்டியல்*
1.வில்லிப்புத்தூராரின் வில்லிபாரதம்.
2.சேக்கிழாரின் பெரியபுராணம்.
3.தனிப்பாடல் திரட்டு