அவள் எப்படி இருந்திருப்பாள்?
முனைவர். இரா. பெரியதுரை
இந்த வாழ்க்கை தான்
எவ்வளவு அழகானது! பல சுவாரசியங்களையும், பல கசப்பான அனுபவங்களையும், பல திருப்பங்களையும் கொண்டு இருக்கிறது?
வாழ்க்கை என்பது
இயற்கையோ இறைவனோ அவரவர் விருப்பப்படி வைத்துக் கொள்ளுங்கள். மனிதனுக்கு
கொடுக்கப்பட்ட யாசகம் என்று தான் நான் சொல்வேன்.
நான் சொல்லப்
போகும் இந்த அனுபவத்தை சுவாரசியமாக எடுத்துக் கொண்டாலும் சரி, பரிதாபமாக
பார்த்தாலும் பரவாயில்லை, இல்லை நீங்கள்
முகம் சுழித்தாலும் என்னால் என்ன செய்ய முடியும்? முடிவு செய்யும் பொறுப்பை உங்களிடம் கொடுத்து
விடுகிறேன்.
எல்லா அதிகாலைப்
பொழுதுகளும் மிகவும் அழகானவை தான் என் இளமையைப் போல.
காரணம் எனது
கல்லூரி காலம் அது. நிறைசூலியை போல எங்களை தன் வயிற்றில் திணித்துக் கொண்டு எனது
கல்லூரி வழியாகத்தான் தென்காசி செல்லும் பேருந்துகள் நெல்லை புதிய பேருந்து
நிலையத்திலிருந்து செல்லும்.
ஒவ்வொரு காலைப்
பொழுதிலும் பேருந்துகளில் இடம் பிடிப்பதற்காக முண்டியடித்து ஓடும் மாணவர்கள்
மத்தியில் நான் மட்டும் பரிதாபமாக நிற்க மாட்டேன்.
பேருந்தில்
நெருக்கி நிற்க மட்டும் இடம் கிடைத்தால் போதும் என்ற தாராள மனசு எனக்கு. அதற்காக
நான் ரொம்ப நல்லவன் என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல
பேருந்தின் முன்
வாசல் வழியே ஏறி, பின்னால் உள்ள
மூன்றாவது வரிசை இருக்கை, அல்லது நான்காவது
வரிசை இருக்கை அருகில் நிற்பது தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அட ஏன்னு தான்
கேளுங்களேன்? உங்களுக்கு அதில்
விருப்பமில்லை என்றாலும் நான் சொல்லத்தான் செய்வேன்.
அந்த இடத்தில்தான்
மெட்டில்டா,, ப்ரீத்தி, ஐசு, வைஷு, ஏன்? இசக்கியம்மாள், மாரியம்மாள்
சுப்புத்தாய் கூட்டங்கள் நிரம்பி வழியும்.
அவர்கள் கூந்தலில்
இருந்து வரும் நறுமண எண்ணைகளின் வாசனை, மல்லி, பிச்சி, நறு மனங்களிலும், அவர்கள் உடலில் பூசியிருக்கும் வாசனை திரவிய நறுமணத்திலும், நான் சுகமாய்
நிலை குலைந்து தான் போவேன்.
அந்தக் கூட்டத்தில்
யாரோ ஒருத்தியின் உடலில் இருந்து வரும் வேர்வை நாற்றம் கூட, இல்லை வேர்வை
வாசனை கூட அந்த நாட்களில் எனக்கு மிகவும் பிடித்துப் போயிருந்தது.
பேருந்தில் சிலர்
தம்மை அன்னை தெரசாக்களாகவும், விவேகானந்தர்களாகவும், கூட்டத்தினருக்கு காட்டிக்கொள்ள தங்கள் இருக்கைகளை எனக்கு
பகிர்ந்து நான் நிற்கும் இடத்தை அபகரிப்பதும் உண்டு.
நான் பேருந்தில்
நிற்பதில் சிரமப்படுவதாக உணர்ந்து தங்கள் இருக்கைகளை பகிர்ந்து கொண்ட உண்மை
தியாகிகளையும் நான் நன்கு அறிந்து வைத்திருந்தேன்.
நான் பேருந்தில்
நின்று பயணிக்கத் தான் விரும்புகிறேன் என்ற உண்மை காரணத்தை எனது மனசாட்சியை தவிர
அவர்கள் யாரும் அறிந்திருக்க நியாயம் இல்லை தான்.
அந்தப் பேருந்து
நறுமணத் தேவதைகளின் உரசல்களில் இருந்து, என்னை விடுவித்து, தங்கள் இருக்கைகளை பகிர்ந்த அனைவருமே எனக்கு அந்த நாட்களில்
எதிரிகள் தான்.
_
நானும் சில
நேரங்களில் அவர்கள் எல்லாரையும் விட ஒரு படி மேலே போய் என்னை
ஒரு தியாகியாய் நிரூபிக்க முயற்சித்து தோற்றுப் போன
தருணங்களும் உண்டு.
நான் அந்தக்
கல்லூரியில் சேர்ந்த முதல் ஆண்டிலேயே என்னுடைய இருத்தலையும், என்னுடைய
திறமைகளையும், முன்னிலைப்படுத்தி, எல்லாருடைய
மனதிலும் உயர்ந்த இடத்தை பிடிப்பதில் ஆர்வமாய் இருந்தேன்.
அதிலும் குறிப்பாக
பெண்களின் இதயங்களில். எனது ஆங்கில வழிப் பள்ளி படிப்பு ஓரளவு நான் ஆங்கிலத்தில்
பேசுவதற்கு உதவியாக இருந்தது. இதனால் ஆசிரியர்களுக்கும் என்னை பிடித்துப்
போயிருந்தது.
குரலை மெருகேற்றிப்
பேசுவது, மொழிகளை நன்கு
உச்சரிப்பது, ஒற்றை வரியில்
உடனடிக் கவிதை எழுதுவதில்,
எனக்கு இருந்த
திறமை பெண்களை மிகவும் கவர்ந்து போயிருந்தது.
குறிப்பாக நான்
பாடுவதும், ஓரளவு கிடார்
வாசிப்பதும், ஹரிணிக்கும்
செண்பகவல்லிக்கு பிடித்துப் போய் என்னுடைய ரசிகைகளாக மாறியது,
பெண் தோழியரின்
கணக்கை என் இதய புத்தகத்தில் திறப்பதற்கு உதவியாக இருந்தது என்றுதான் நான்
சொல்வேன்.
எங்கள் வகுப்பில்
ஏழு ஆண்களும், 12 பெண்களும்
இருந்தார்கள்.
இதனால் என்னை
தவிர்த்து அந்த ஆறு பேருக்கும் தங்கள் இணையரை தேடுவதில் போட்டி இருந்ததாக
தெரியவில்லை.
நாளுக்கு நாள் நான்
வீட்டுப் பாடங்களை செய்வதில் சிலவழித்த நேரத்தை விட, என்னுடைய வகுப்பு பிள்ளைகளில் ஒருத்தியை என்
வசப்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன்.
இதற்காக என்னைப்
பற்றிய மதிப்பீடுகளை கேள்விகளாய் கேட்டு அவர்களின் பதில்களுக்காக காத்திருந்தேன்.
அதே வேளையில் என்னுடைய படிப்பிலும் நாம் கவனமாக இருந்தேன்.
காலம் மிதமான வேகத்தில் ஓடி எங்களை கல்லூரியின் மூன்றாம்
ஆண்டில் நிறுத்தி இருந்தது. சிலருக்கு காதல் கைகூடி இருந்தது. சிலரோ காதலையும்
தாண்டி அடுத்த நிலைக்கு சென்று இருந்தனர். யாருடைய காதலாவது திருமணத்தில் முடியும்
என்று நானும், ஏன்? காதலிப்பவர்களும்
கூட அதை எதிர்பார்த்து இருக்க வில்லை.
.
எனக்கு வயதுக்கான
தேவை அதிகரித்துக் கொண்டே போனது. அதையும் கடந்து, என்னுடன் கல்லூரியில் படித்தவளை கரம் பிடிக்க
வேண்டும் என்ற எண்ணம், சீமை கருவேலம்
செடியை போல என் இதயத்தை முழுமையாய் ஆக்கிரமித்து இருந்தது. என் காதல் மட்டும்
நிச்சயமாய் முழுமை பெற்று விடும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருந்தது.
காரணம் படிப்பிலும், உலக அறிவிலும், கலைதுறையிலும்,
நான் சிறந்த
இளைஞனாக கல்லூரி முழுவதும் பரவலாக அறியப்பட்டிருந்தேன். இது எனக்கு உற்சாகத்தை
தருவதற்கு பதிலாக தலைக்கனத்தை தந்தது என்றே நான் சொல்ல வேண்டும். இந்த இடத்தில்
ஒன்றை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எந்த இடத்திலும், எந்த
சூழ்நிலையிலும், யாரிடத்திலும், என்னுடைய
பார்வையின்மையை முதலீடு செய்து, ஆதாயம் பெற விரும்பியதே கிடையாது. இதன் நிமித்தமாக பல
நண்பர்களை, பல சலுகைகளை, நான் இழந்து
இருக்கிறேன்.
இந்த
சூழ்நிலையில்தான் என்னை ஓரளவு கற்றுதேர்ந்தவளாய் செண்பகவல்லி இருந்தாள். அவளை
மட்டுமே எனக்கும் பிடித்திருந்தது. அவள் இவ்வளவு தூரம் என் நெஞ்சம் நெருங்கியவளாய்
இருப்பதற்கு, நான்
எடுத்துக் கொண்ட முயற்சிகள் இருக்கின்றனவே,! அப்பப்பா சொல்லி
முடியாது. அவளைப் பற்றிய கவிதையை சொல்வேன், அவள் விரும்பிய பாடல்களைப் பாடுவேன், அவளுக்காக
சேக்ஸ்பியரின் உவமைகளை சொல்லி இருக்கிறேன், செல்லியின் குளுமையான வரிகளைச் சொல்லி அவளை
குளிர்வித்திருக்கிறேன், இப்படி
மேலைநாட்டு அறிஞர்கள் பலரை துணைக்கு அழைத்து இருக்கிறேன் அவளை மகிழ்விக்க..
இத்தோடு நான் நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை ஒரு படி மேலே போய் நான் பார்த்திராத
அவளின் அழகை வர்ணித்து இருக்கிறேன்.
இந்த இடத்தில்
செண்பகவள்ளியைப் பற்றி நான் சொல்லாவிட்டால் வரலாற்றுப் பிழையாகிவிடும். நான்
விரும்பிய மாதிரி அவளுக்கு அழகான குரல் எல்லாம் இல்லை. பெண் குரல் தான்.. ஆனால், இரட்டைக் குரல்.
ஆங்கிலத்தில், டபுள் ரீட்
வாய்ஸ் என்று சொல்வார்களே அப்படித்தான். என்னை விட கொஞ்சம் உயரமானவள். சராசரி உடல்
கட்டு, கட்டையான கூந்தல், நிறமோ
கருப்புதான். நிறம் மட்டும் அவளிடம் நான் கேட்டு தெரிந்து கொண்டது.
இன்னும் நான்
செண்பகவள்ளியை ரசிப்பதற்கு அவளிடம் நிறைய சொல்லத் தெரியாத விடயங்கள் இருக்கவே
செய்தன. அவளுக்காக நான் செய்த பைத்தியக்காரத்தனமான தியாகங்களை இங்கே பட்டியலிட
முடியாது. இப்படி பழகி, ரசித்து, மகிழ்ந்த, பசுமையான நாட்கள்
முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன. அதுதான் இறுதிப் பருவ தேர்வு. இனி நான்
எப்படியும் என் காதலை சொல்லி ஆக வேண்டிய நிர்ப்பந்தமும் என்னை பாடாய்படுத்திக்
கொண்டிருந்தது. இறுதிப் பருவத் தேர்வுக்கு முந்தைய விடுமுறையில் நாங்கள்
இருந்தாலும், படிப்பதற்காக
கல்லூரி நூலகத்துக்கு வந்து கொண்டு தான் இருந்தோம்.
அது ஒரு கோடைகால
சித்திரை மாதம். கத்திரி வெயில் மங்கி இருந்த ஒரு மாலைப் பொழுது. கல்லூரி
வளாகத்தில் உள்ள மரங்கள் இலைகளை உதிர்த்து நிற்கதியாய் வசந்தத்தை எதிர்நோக்கி
நின்று கொண்டிருந்தன என்னைப்போலவே. தூரத்து மரத்தில் இருந்த அக்கா குருவி ஒன்று
கரகரத்த சோகக் குரலில் யாரையோ எதிர்பார்த்து பரிதாபமாய் கத்திக் கொண்டிருந்தது. சக
மாணவர்களின் நட்பு அரட்டைகளும் ஆங்காங்கே சுற்றி இருந்த மரங்களின் அடியில் களைகட்ட
தொடங்கியிருந்தன..
கல்லூரி உணவகத்தில்
இருந்து சில வடைகளை வாங்கி வந்த எங்கள் வகுப்பு தோழன் ஹரி கிருஷ்ணா, நானும்
செண்பகவல்லியும் அந்த மரத்தடியில் இருப்பதை பார்த்துவிட்டு எங்களிடமும் ஆளுக்கு
ஒரு வடையை கொடுத்துவிட்டு,
செண்பகவள்ளியை
பார்த்து ' செண்பகவல்லி
இன்னைக்கு நீ ரொம்ப அழகா இருக்க, ஆளுதான் வீங்கி கிட்டே போற, பாவம் நீ கட்டிக்க போறவன். உன்ன தூக்க மூச்சு
வாங்குவான் இல்ல? " செண்பகவல்லி அவனை
முறைத்து விட்டு, கையில்
வைத்திருந்த தண்ணீர் டப்பாவை கொண்டு செல்லமாய் அவனுக்கு ஒரு அடி கொடுத்தால்.
கிருஷ்ணா நான் எப்படிடா இருக்கிறேன்? என நான் கேட்டதற்கு, நீ,
யுனிவர்சிட்டிக்கு
கதாநாயகன் மாப்பிள்ளை. உடனே நான் அவனுக்கு கை கொடுத்தேன் செண்பகவல்லி; நீ அடிக்கிற, என் மாப்பிள்ளை
பாரு எனக்கு கை கொடுக்கிறான். என் கன்னத்தில் தட்டிக் கொடுத்து, நண்பேன்டா, என
சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
நான் செண்பகவல்லி
இடம் காதலை சொல்லும் நேரம்,
மாலை சரியாக 5 மணி ஏன்? சில வினாடிகள்
கூட கடந்திருக்கும், இதை என் பேசும்
கைக்கடிகாரம் தான் உறுதி செய்தது. செண்பகவல்லி, நான் சொல்றது, எனக்கு சரின்னு தோணுது, உனக்கு சரின்னு தான் படும் என நான் நினைக்கிறேன். என்னடா
புதுசா சொல்ல போற?? என, செண்பகவல்லி
ஆர்வமாய் கேட்டாள். என்னை பதற்றம் தொட்டிக்கொண்டது, மூச்சு வாங்கியது, ஏன்? சில தொழில்
கண்ணீர் கூட சூடாய் என் கையில் விழுந்தது. என் அசாதாரண சூழ்நிலையை உணர்ந்த
செண்பகவல்லி, டேய் என்னாச்சுடா
உனக்கு? நான் இருக்கேன்
டா உன் கூட சொல்ல வந்ததை சொல்லு. நான் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, செண்பகவல்லி, நாம ரெண்டு
பேரும் ஏன் கல்யாணம் செஞ்சுக்க கூடாது? உன்ன விட என்ன முழுமையா புரிஞ்சுகிட்ட பொண்ணு யாருமில்லை? உன்னைய விட என்னை, இவ்வளவு அக்கறையா
கவனிச்சுக்க யாராலயும் முடியாது, என சொல்லி முடிக்க, பக்கத்து தென்னை மரத்திலிருந்து ஒரு காய்ந்த ஓலை, அடித்த சிறிய
காற்றில் தும் என கீழே விழுந்தது. மரத்தடியில் உதிர்ந்த கிடந்த சில காய்ந்த
சருகுகள், காற்றில்
சரசரத்துக் கொண்டு நாலாபுரமும் பரவி, சிதறி ஓடியது.
காற்றின் வேகம்
மெல்ல குறைய, சிதறி ஓடிய இலை
சருகுகள், தாம் சரசரத்துக்
கொண்டிருந்த ஒளியை நிறுத்திய படியே, போகும் திசை அறியாமல் அந்தந்த இடத்திலேயே முடங்கிக் கொண்டன.
நிராகரிக்கப்பட்ட என் காதலைப் போல.
இந்த சம்பவம், ஒன்றே ஒன்றை
மட்டும் எனக்கு புரிய வைத்தது. எனக்குக் கண் தெரியாது என்பது எல்லாருக்கும்
தெரியும். ஆனால்! காதலுக்கு கண்கள் நன்றாக தெரியும் என்பது,, என்
போன்றவர்களுக்கு மட்டுமே தெரியும்
என்றாலும் நான் என்
நம்பிக்கையை கைவிடவில்லை. காத்திருந்தேன் அடுத்த தென்றலுக்காக., ஆம்! தென்றலும்
வீசியது, வசந்தமும்
வரத்தான் செய்தது.
முகநூல் அறிமுகமாய்
இருந்த காலம் அது. இளந்தென்றல் என்ற பெயரில் முகநூலில் நானும் ஒரு கணக்கை
தொடங்கியிருந்தேன். தொழில்நுட்ப வளர்ச்சியால், தொடுதிரை அலைபேசியை நன்றாக பயன்படுத்த கற்றுக்
கொண்டிருந்தேன். இது எனக்கு முகநூலில் எழுதவும், செய்திகளை அனுப்பவும், மிகவும்
சாதகமாகவே இருந்தது.
முகநூல்
பக்கங்களில் நிறைய கவிதைகள்,
கட்டுரைகள், கதைகள், விமர்சனங்களை
எழுதிக் கொண்டிருந்தேன். இதனால் நட்பு கோரிக்கைகளும் நிறைய வந்து கொண்டிருந்தன.
என்னுடைய நட்பு வட்டமும் விரிவடையத் தொடங்கியது. நானும் என்னுடைய பழைய நண்பர்களை
எல்லாம் முகநூலில் தேடிக் கொண்டிருந்தேன்.
அப்படி தேடிக்
கொண்டிருந்தபோது, ரோசலின் பொன்மலர்
என்ற பெயரை காட்டியது. அனுப்பினேன் கோரிக்கையை. நல்லவேளை அவளும் இணைப்பில்
இருந்திருக்கிறாள் போலும்,
10 நிமிடத்திற்குப் பிறகு நட்பை ஏற்றுக் கொண்டதாக செய்தி வந்தது. முகநூலில்
அவளின் அறிமுக பக்கத்தை படித்தேன்
கிறித்தவ மத
நம்பிக்கையும், இலக்கிய அறிவும், உலக அறிவும்
கொண்டவளாக புரிய முடிந்தது.
நான் கிறிஸ்தவ
பள்ளியில் படித்திருந்ததால்,
கிறித்தவம்
விவிலியம் பற்றி ஓரளவு
தெரிந்து வைத்திருந்தேன். இவை எனக்கு மதம் பற்றி அவளோடு
செய்திகளை பகிர்வதற்கு உதவியாக இருந்தது. இந்தப் பகிர்வு அப்படியே படிப்படியாக
விரிவடைந்து, இலக்கியம், தத்துவம், உலக அரசியல், ஏன் பாலியல்
செய்திகள் வரை பகிரத் தொடங்கியிருந்தோம். இந்த நட்பு உடையாமல் இருக்க நான் மிகவும்
கவனமாக நடந்து கொண்டேன்,
எனது இந்த
அணுகுமுறை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது அவளைப் பற்றிய எல்லா செய்திகளையும்
என்னிடத்தில் பகிர்ந்து கொண்டிருந்தாள். நானும் திறந்த மனதோடு என்னைப் பற்றி
எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள தொடங்கினேன்.
அவள் காதலி
தோற்றவள் என்றும், இதன் காரணமாக
வாழ்க்கையை வெறுத்து,, பெண் துறவியர்
சபையில் சேர்ந்து, அங்கு இருக்கவும்
பிடிக்காமல் வீட்டிற்க்கே வந்து விட்டதாக சொல்லி இருந்தாள்.
. அலைபேசியிலும்
நிறைய நேரத்தை செலவிட்டு கொண்டே இருந்தோம். என்னுடைய திறமைகளை எல்லாம் போர்க்கால
அடிப்படையில் அவள் மனதில் கொட்டி, அவளுக்கு நிறைய ஆறுதல் சொன்னேன். ஒரு கட்டத்தில் நான்தான்
அவளின் உலகம் என்று ஆகிப்போனது..
என்னை நேரில்
சந்திப்பதில் அவள் மிகுந்த ஆர்வமாய் இருந்தாள்.
நேரில் சந்திக்கும்
ஆர்வம் யாருக்கு தான் இருக்காது? தொலைபேசியில் எவ்வளவு நாள் தான் பேசிக் கொண்டிருக்க
முடியும்? இந்த விடயத்தில்
அவளை விட நான் மிகுந்த ஆர்வம் உள்ளவனாய் இருந்தேன். திருநெல்வேலியில் ஒரு
குறிப்பிட்ட இடத்தில் சந்திக்கலாம் என நான் கேட்டதற்கு, அவளும் அதை
ஒத்துக்கொண்டு மறுப்பு ஏதும் சொல்லாமல் முழு சம்மதம் தெரிவித்தால். என்ன நிற
ஆடையில் வரட்டும் என்று அவள் என்னிடத்தில் கேட்டதற்கு, பச்சை நிறம்
என்று ஒற்றை வார்த்தையில் சொல்லி முடித்தேன்.. நான் நிறங்களை ரசிப்பதற்கு
பிறப்பால் தடை செய்யப்பட்டவன் என்பது அவளுக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை தான்.
நான் என்னுடைய நிலையை திட்டமிட்டு அவளிடம் மறைக்கவில்லை. ஒருவேளை நான் அதை சொல்லி
இருந்தால் எனக்கு வாழ்க்கை கொடுத்த தியாகியாய் அவள் தன்னைக் கருதிக் கொள்ளலாம்.
இல்லை அவள் என்னை நிராகரிக்கவும் செய்யலாம். ஒருவேளை தனித்துவம் வாய்ந்தவளாய்
இருந்து, என்னுடைய
பார்வையின்மையை ஒரு பொருட்டாக கருதாமல், என்னை இதயபூர்வமாய் அங்கீகரிக்க கூட செய்யலாம்.. அவள் என்னை
நேரில் பார்த்து முடிவு செய்யட்டும் என்பது மட்டும்தான் காரணம்.
அவளை சந்திக்கும்
நாள் நெருங்க நெருங்க, மகிழ்ச்சியும்
ஆர்வமும் என்னை பாடாய்படுத்தியது. என்னைப் பார்த்தவுடன் அவள் எப்படி உணர்வாள்? என் கையைப்
பிடித்து நடப்பாளா? தோளில் கை போட்டு
நடப்பாளா? இல்லை தொட்டு
தொட்டு தான் பேசுவாளா? என்ன நறுமணத்தில்
வருவாள்? இப்படி ஆயிரம்
கேள்விகள் என்னை தொலைத்தெடுக்க தொடங்கியது..
அப்பாடி ஒரு
வழியாய் அந்த நாளும் வந்தது. பேருந்தை விட்டு இறங்கியவள் அலைபேசியில் நான்
காத்திருக்கும் இடத்தை கேட்டு என் அருகிலேயே வந்து விட்டாள். என் பெயரை சொல்லி
அழைத்த அவள் குரலில் மகிழ்ச்சி இருந்ததை நான் உணர்ந்து கொண்டேன்.
இந்த மூஞ்சி தான்
இவ்வளவு பேசிச்சா அவள் என்னைப் பார்த்து
கேட்க, இந்த மூஞ்சிக்கு என்ன குறைச்சல் என்று நானும் அவளிடம்
கேட்டேன்.
உனக்கு கண்ணு
தெரியாததை மட்டும் ஏன் என்கிட்ட சொல்லல?
இது என்ன நம்
காதலுக்கு தடையாகவா இருக்கப் போகிறது? அப்படி நினைச்சு தான் உன்கிட்ட சொல்லல. அப்படின்னு அவகிட்ட
நான் சொன்னேன்.
நான் பேசுவதை
கேக்குறியா? என அவள் என்
பதிலுக்கு காத்திருக்காமல்,
தொடர்ந்து பேசத்
தொடங்கினாள். நீ பெரிய அறிவு ஜீவி தான், நீ சிறந்த ஆளுமை தான், உன்னுடைய குரல் கூட ரொம்ப அழகா இருக்கு உன்னால எல்லாமே
முடியும், நானும் படிச்சவள்
தான், நயன பரிமாற்றம்
பற்றி தெரியுமா உனக்கு? அதுதான் கண்ணால
பேசிக்கிறது என நான் இடையில் குறுக்கிட்டு அவளுக்கு பதில் சொன்னேன்.
என்னை காதலிக்கிற
எல்லா தகுதிகளும் உனக்கு இருக்கு. ஆனால், என் அழகைப் பார்த்து உன்னால ரசிக்க முடியுமா? ஆராதிக்க தான்
அழகு, எனக்கு நிறைய
விருப்பங்கள் இருக்கு, நிறைய ஆசைகள்
இருக்கு, வாழ்க்கையை
குறித்து தேடல்கள் நிறையவே இருக்கு.. இருண்டு போன என் வாழ்க்கைக்கு வெளிச்சம்
கிடைக்கும் என நினைச்சு தான் உன்கிட்ட பழகினேன். உன்கிட்ட இருந்து எல்லாமே எனக்கு
கிடைச்சது என் வாழ்க்கைக்கு வெளிச்சத்தை தவிர.
இறைவா; ஏன் என்னை
கைவிட்டாய்? அப்படி பல நேரம்
கடவுளை நான் கேட்டிருக்கிறேன்.
' நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை; உன்னை கை
விடுவதுமில்லை. " உனக்கு நினைவிருக்கிறதா? நீ எனக்கு அப்படி ஒரு செய்தியை அனுப்பியது? அதை கடவுள்
சொன்னதாகத்தான் நான் உணர்ந்தேன். இப்படி என் இதயம் எழுப்பிய பல கேள்விகளுக்கு, பொருத்தமான
பதில்களையே நீ எனக்கு அனுப்பி இருக்க. உன்னை எண்ணி, பல நேரங்களில் நான் வியந்து போய் இருக்கிறேன்.
உன்ன கல்யாணம் பண்ணி, நமக்குள்ள
புரிதல் இல்லாம போச்சுன்னா?
நீ ரொம்ப உடைஞ்சு
போயிடுவ. நான் என் விருப்பப்படி வாழக்கூடிய பொண்ணு.
நான் சுத்தி வளச்சி
பேச விரும்பல எல்லாம் உன்னால முடியும், ஆனால்! என் ஆடையை, என் அழகை, என் சிரிப்பை என் அசைவுகளை, என் முகமறிந்து என்னோட தேவைகளை, இத எல்லாத்தையும்
பார்வை வழியா மட்டும் தான் பரிமாற முடியும்.
ப்ளீஸ் நமக்குள்ள
காதல் கல்யாணம் வேண்டாமே. இப்பவே உன் முகம் இப்படி வெளுத்துப் போச்சே! என்
பார்வையால் தான் இதைக் கூட நான் பார்த்து சொல்லிக்கிட்டு இருக்கிறேன்.
ஒரு வழியா சொல்ல
வந்ததை சொல்லி முடித்தே விட்டால். எங்கள் இருவருக்கும் இடையில் சில நிமிடங்கள்
மௌனம் முகாம் இட்டுக் கொண்டிருந்தது. நீர் நிரப்பிய தீயணைப்பு வாகனம் ஒன்று அபாய
ஒலி எழுப்பிக் கொண்டு, அந்த வழியே
வேகமாய் சென்றது.
வாசித்து
முடித்தவர்களுக்கு, நான் சொல்ல
விரும்புவது, என் உலகம் என்பது
மிகவும் தனித்துவம் வாய்ந்தது. நீங்கள் பார்க்கக்கூடிய இந்த புறவுலக காட்சிகள், என் உலகத்தில்
தனித்தனி இடத்தில், அழகாக அடுக்கி
வைக்கப்பட்டு இருக்கின்றன. பல அழகிய வண்ணங்கள் பூசப்பட்டு.
நீங்கள் பார்க்கும்
புறவுலகத்தின் ஒலிகள் மட்டும், பின்னணி இசையாக இருக்கும். என் உலகத்தில்.
என் உலகத்தை
யாருக்கும் புரிய வைக்க முயற்சிக்க மாட்டேன்.
உங்கள் உலகத்தில் பார்வை ஆதிக்கம் செய்வது போல,. என் உலகத்தில்
கற்பனை மட்டுமே ஆதிக்கம் செய்யும்.
' பரஸ்பரம் முழு புரிதலோடு, இந்த சமூகத்தில்
யாரும் வாழவில்லை. பிரச்சனைகளை சந்திக்க துணிச்சல் இல்லாமல் ஒத்துப் போகிறோம்.
அவ்வளவுதான் "
ஜெயகாந்தன்.
இவ்வளவு பேசிய, ரோசலின் பொன்மலர்
எப்படி இருந்திருப்பார்?
முற்றும்
தொடர்புக்கு,
9442715777
No comments:
Post a Comment