Friday, 13 September 2024

உரிமை யுத்தம்.

உரிமை யுத்தம்.

முனைவர். இரா. பெரியதுரை.

 தமிழர்களின் தலைவிதியை, நீட்டியும், மாற்றியும், சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றார் போல் திருத்தியும், எழுதக்கூடிய வானளாவிய அதிகாரம் படைத்த சென்னை பெருநகரம்; அன்றைய அதிகாலைப் பொழுதில் மாசுகள் நிறைந்த சுப தினத்தில் கண்விழிக்க தொடங்கியிருந்தது.

 வார விடுமுறையை முடித்த நானும், ஓரளவே மாசுகளை கொண்டிருக்கும் நெல்லையிலிருந்து அந்த பொதிகை விரைவு ரயிலை விட்டு இறங்கியவனாய், என் முகத்தை துடைத்துக் கொண்டு அந்த எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி இருந்தேன்.

 காட்சி தொடர்பியலில் முதுகலை பட்டப் படிப்பை முடித்த எனக்கு, தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் நல்ல வேலையும் கிடைத்திருந்தது. மூத்த செய்தியாளர்களில் நானும் ஒருவனாக அறியப்பட்டு இருந்தேன்.. கடந்த 12 ஆண்டுகளில் சென்னையின் கடினமான தருணங்களையும் பேரிடர் காலங்களையும், அரசியல் மாற்றங்களையும் துயரம் நிறைந்த பிரபலங்களின் மரணங்களையும், பல சுவாரசியங்களையும் நேரில் பார்க்கும் அனுபவங்களையும் பெற்று இருக்கிறேன். அதே ரயிலில் இருந்து ஒரு பத்து பதினைந்து பார்வை இழந்தவர்களும், இறங்கி இருந்தார்கள் அனேகமாக அவர்கள் எல்லோருமே அந்த வழியில் இருந்த வெவ்வேறு ரயில் நிலையங்களில் ஏறி இருக்க கூடும் என்று நினைக்கிறேன். அவர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொருவரின் பெயரையும் சொல்லி அழைத்து அவர்களின் வருகையை உறுதி செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தோளிலும், முதுகிலும், ஒருவரை ஒருவர் தட்டிக் கொடுத்துக் கொண்டு பேசியபடியே; மடக்கி வைத்திருந்த வெள்ளை நிற கம்பை பயன்படுத்தி, தடைகளை தட்டி உணர்ந்தபடி ஒருவர் வழிகாட்ட ஒருவர் ஒருவரை தொட்டுக் கொண்டே என்னை தாண்டி ரயில் நிலையத்துக்கு வெளியே சென்று கொண்டிருந்தார்கள்.

 ரயில் நிலையத்தை விட்டு அவர்கள் வெளியே வரவுமே; காவல்துறையை சார்ந்த இருவர் தங்கள் வாக்கிடாக்கியை அணைத்துவிட்டு அவர்கள் பேசுவதை கவனித்து கொண்டே அவர்களை பின்தொடர்வதை நான் பார்த்தேன். பார்வையற்றோர் என்ன சமூகவிரோதிகளா? அவர்களைப் பின் தொடர்வதன் காரணம் எனக்கு புரியவில்லை. நான் அங்கு நடப்பதை தெரிந்து கொள்ள முயற்சித்தபோது, அந்தக் காவல்துறையினர் இருவரும் என்னை பார்த்து விட்டனர். நிச்சயமாக நான் ஒரு ஊடகவியலாளன் என்பதை அவர்கள் தெரிந்து இருக்க வேண்டும். அவர்கள் இருவருமே எனக்கு வணக்கம் வைப்பதை வைத்து நான் அதை புரிந்து கொண்டேன். மேலும் சில காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து ஒரு வாகனத்தில் ஏற்றினர். உடனே நான் எனது சக செய்தியாளர்களுக்கு தகவலை கொடுத்துவிட்டு செய்திகளை சேகரிக்குமாறு கூறினேன். நான் வீட்டுக்கு சென்று என் வேலையை முடித்துவிட்டு அலுவலகம் திரும்பி இருந்தபோது. பார்வையற்றோர் பத்தாம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சில நாட்களாக போராட்டம் நடத்தி வருவதை நான் அறிந்தேன்.

 அவர்களின் கோரிக்கைகளை எல்லாம் படித்துப் பார்க்கும்போது நியாயமானவைகளாகவே எனக்குப் பட்டன ஒரு மனசாட்சி உள்ள மனிதனாக. முன்னணி ஊடகங்கள் எல்லாம்

 நினைத்திருந்தால் இவர்களின் செய்திகளை இன்னும் வீரியம் உள்ளதாக மக்கள் முன் கொண்டு சென்றிருக்க முடியும். என்னால் மட்டும் என்ன செய்து விட முடியும்? இருந்த போதிலும்; நான் இவர்களின் பிரச்சனைகளை ஒரு பெரும் செய்தி தொகுப்பாக மக்கள் முன் கொண்டு செல்ல விரும்பினேன்.. எனது செய்தி குழுவோடு இணைந்து அவர்களின் பிரச்சனைகளைப் பற்றிய தரவுகளை சேகரிக்கத் தொடங்கினோம். அப்போதுதான் பார்வையற்றோர் வாழ்வியல் குறித்த பல சிக்கல்களை எங்களால் தெரிந்து கொள்ள முடிந்தது.. எவ்வளவு பிரச்சனைகளை எதிர் கொண்டு மகிழ்ச்சியுள்ள மனிதர்களாய் இவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்? குடும்பத்தினரின் புறக்கணிப்பு, கல்வியை பெறுவதில் உள்ள சிக்கல்கள், அவற்றையெல்லாம் முறியடித்து வெளியே வந்தாலும் பணி வாய்ப்பினை பெறுவதில் உள்ள சவால்கள், இவற்றை விட பெரிய கொடுமை என்னவென்றால்? இவர்களை அரவணைக்க வேண்டிய அரசாங்கமே; அவர்களைத் தந்திரமாக ஏமாற்றி, அலை கழிப்பது தான்..

 போராட்டக் களத்தில் அவர்கள் களமாடிய விதம் ஆச்சரியமாகவும், சுவாரசியமாகவும் அதே வேளையில் வேதனை தருவதாகவும் இருந்தது. ஏராளமான கல்லூரி மாணவ மாணவியரும், வேலையில்லா பட்டதாரிகளும் அங்கே இருந்தார்கள். சிலரோ சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தையும் மேற்கொண்டு இருந்தார்கள். எம் ஏ பி எட், பி எச் டி; விக்கிறதோ! ஊதுபத்தி. இந்த வரி என்னவோ கவித்துவமாக இருந்தாலும்; இது அவர்களின் துயரம் தந்த உச்சம் என்பதை என்னால் உணர முடிந்தது. அந்த இடத்தில் சில காதல் ஜோடிகளும் இருந்தார்கள். நான் ஒரு ஜோடியிடம் பேசிய போது அவர்கள் சொன்னார்கள், தாங்கள் 10 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், இருவருமே கல்லூரி பேராசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், ' எங்கள் இருவரில் ஒருவருக்கு வேலை கிடைத்தால் கூட போதும், நாங்கள் திருமணம் செய்து கொள்வோம் என்று " ' இளமை எல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம். தெளிவும் அறியாது, முடிவும் தெரியாது, மயங்குது எதிர்காலம். " இனிமையான குரலில் பாடினார்கள் ஒரு அக்கா. அவர்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக தெரிந்தார்கள். அவர்கள் சேலை கட்டி இருந்த விதம் மிகவும் நேர்த்தியாக இருந்தது. நாங்கள் பேசிக் கொண்டிருந்த சூழலுக்கு ஏற்ப உடனே அவர்களால் பாடலை எப்படி பாட முடிந்தது? சில இடங்களில் அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டிருந்தார்கள்.. அவர்களை அப்புறப்படுத்துவதில் காவல்துறைக்கு மிகுந்த சிரமமும் ஏற்பட்டிருந்தது. சில பார்வையற்ற நண்பர்கள் சன்னமான குரலில் பெண் காவலர்களை கலாய்த்துக் கொண்டும் இருந்தார்கள் அவர்களுக்குள்ளேயே.. நான் ஒரு பார்வையற்ற இளைஞரிடம் பேசியபோது; அவர் சொன்னார் நாங்கள் படித்த படிப்பு எங்களை பிச்சை எடுக்கவும் அனுமதிப்பதில்லை தன்மானம் எங்களுக்கு மட்டும் இல்லையா என்ன? அரசு எங்களை கருணை கொலை செய்து விடட்டும் என்று அழுதே விட்டார். அவரின் கண்ணீர் நான் அவரிடம் நீட்டி இருந்த மைக்கை நனைத்ததோடு மட்டுமல்லாமல் என் இதயத்தையும் நனைத்து இருந்தது.

 ஐயா நீங்கள் சாலையை மரிப்பதால்; பொதுமக்களுக்கு நிறைய இடையூறுகள் ஏற்படுகிறது. நீங்கள் இந்த இடத்தை விட்டு கலைந்து போகவில்லை என்றால் நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும். என்று காவல்துறை கண்காணிப்பாளர் பேசியது போலவே; அதுவும் அவர் குரலிலேயே; அந்தப் போராட்ட களத்தில் இருந்த ஒரு பார்வையற்ற நண்பர் பேசியதை கேட்டு அவர்களே ஏமாந்ததோடு மட்டுமல்லாமல், அந்தக் காவல்துறை அதிகாரிக்கு எதிராக பார்வையற்றோரே எதிர்வினையும் ஆற்றத் தொடங்கிவிட்டனர். அதைக் கேட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கே சிரிப்பு வந்துவிட்டது. ஐயா நான் அப்படி சொல்லல உங்க ஆளு ஒருத்தர் தான் என்ன மாதிரியே பேசினார் என்று சொன்னார். அதிலும் ஒரு காவல்துறை உயர் அதிகாரி எங்களிடம் தனியாக பேசிக் கொண்டிருக்கும் போது சொன்ன விஷயம் தான் எங்களை ஆச்சரியப்படுத்தியது.. பார்வை இழந்த இவர்களால் எப்படி போராட்டத்தை ஒருங்கிணைக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் சாலையை மறித்து விடுகிறார்கள். நாங்களும் எவ்வளவோ இவர்களை கண்காணித்து இருந்த போதிலும்., எங்கள் கண்களிலேயே மண்ணைத் தூவி விடுவது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் இதைக் கேட்டு நாங்களே அதிர்ந்து போனோம் காவல்துறையினர் செய்த சில அடக்குமுறைகளையும் பார்வேற்ற நண்பர்கள் எங்களிடம் பகிர்ந்து கொள்ள தான் செய்தார்கள். பார்வையற்றோரை நள்ளிரவில் சுடுகாட்டில் கொண்டு இறக்கி விடுவது, வீட்டு சொந்தக்காரர்களை வைத்து வாடகை வீட்டில் இருப்பவர்களை காலி செய்ய சொல்வது. பார்வையற்ற கல்லூரி மாணவர்களை அவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளிலேயே போய் நள்ளிரவில் கைது செய்வது, பார்வையற்ற பெண்களை ஆண் காவலர்களே கையாளுவது, விளக்கை அணைத்துவிட்டு கூட பார்வையற்றோரை தாக்கியதாக கூட சொல்கிறார்கள். இவை எல்லாமே அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் இல்லையா?. 15 நாட்கள் 5 6 பார்வை இழந்தவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு இருந்தது தான் எங்களை அச்சப்பட செய்திருந்தது. இவர்களுக்கு ஆதரவாக பல மாவட்டங்களில் உள்ள பார்வை இழந்தவர்களும் சங்கு ஊதி போராடியது உட்பட பல நூதனமான போராட்டங்களையும் மேற்கொண்டிருந்தனர். சமூக ஊடகங்களில் அவர்கள் ஆற்றிய எதிர்வினை இருக்கிறதே அரசுக்கு எதிராக அப்பப்பா. கவிதைகள், ஆய்வு கட்டுரைகள், மீம்ஸ்கள் இன்னும் அவை அனைத்தும் போராட்டங்களின் கதைகளை சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றன.

 அவர்கள் கைது செய்து வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபங்களிலும் கூட அவர்களின் போராட்ட உணர்வு சற்றும் குறைந்து இருக்க வில்லை. அதே நேரத்தில் அந்த இடத்தை ஒரு மகிழ்ச்சியான சூழ்நிலைக்கு கொண்டு சென்றிருந்தார்கள். கொள்கை பாடல்கள் திரைப்படம் எட்டில் கல் மனதையும் கரைத்து விடும் வகையில் இருந்தன., அவர்களின் நகைச்சுவை அரட்டைகள் இருக்கிறதே திரைப்படங்களையும் மிஞ்சிவிடும். தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் அவர்கள் போராட்டம் குறித்து; சக அமைச்சர்களோடு அலட்சியமாக பேசுவதைப் போல; அவர்களில் ஒருவர் பேசியதை கேட்கும் போது வெளியில் நாகரீகமாகவும், நியாயமாகவும், பேசும்  அமைச்சர்கள் தங்களுக்குள் இப்படித்தானே பேசிக் கொள்வார்கள்? என்றுதான் நமக்கும் என்ன தோன்றியது.. அவர்கள் எங்களைப் போன்ற ஊடகங்களையும் கலாய்க்கத் தவறியதில்லை.. நேரலையில் கள நிலவரத்தை செய்தியாளர் ஒருவர் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவரிடம் விவரிப்பதைப் போலவே; ஒருவர் விவரித்தார். அதிலும் என் குரலிலேயே ' நிச்சயமாக காளியம்மாள் நாம் இப்பொழுது போராட்ட களத்தில் தான் இருக்கிறோம். சாப்பிட்டீங்களா காளியம்மா? உங்க குரல் மற்ற நாளை விட இன்னைக்கு நல்லாவே இருக்கு ஆனால் உங்க மேக்கப் தான் இன்னைக்கு கொஞ்சம் ஓவரா இருக்கு. நாம மற்றதை தனியா பேசிக்கலாம் காளியம்மாள்.

 கண்டிப்பா இதை நான் சொல்லித்தான் ஆகணும் போராட்டம் பற்றி. 15 நாட்களாக போராடிக் கொண்டிருக்கும் பார்வையற்றவர்களின் கோரிக்கை என்பவை மிக கவனிக்கத்தக்கவை. தமிழ்நாடு அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் இவற்றில் பார்வையற்றோர் மட்டுமே; ஆசிரியர்களாகவும், தலைமை ஆசிரியர்கள் ஆகவும், பணி அமர்த்தப்பட வேண்டும். அப்படி பார்வையற்றவங்க யாரும் அரசு கிட்ட கேட்கல. அவர்களுக்கான ஒரு விழுக்காடு அரசு ஆணையத்தால் முறைப்படி செயல்படுத்த சொல்றாங்க. அரசு அலுவலகங்களில் பார்வையற்றோர் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் அப்படியும் அவங்க கேட்கல. பார்வையற்றோருக்கான அரசு ஆணை என்ன இருக்கிறதோ அதைத்தான் அவர்கள் செயல்படுத்த சொல்றாங்க. பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும், முழு பார்வை இழந்தவர்களை மட்டுமே துணை வேந்தர்களாகவும் முதல்வர்களாகவும், நியமிக்கணும் அப்படியும் சத்தியமா அவங்க கேட்கல. தமிழக அரசு என்ன சொல்லுச்சோ அதைத்தான் செயல்படுத்த சொல்றாங்க. தேர்வு எழுதுவதில் இருந்து பார்வையற்ற மாணவர்களுக்கு விதிவிலக்கு வேண்டுமென்று அவர்கள் கேட்கல. அவர்களுக்கு நியாயமாய் கிடைக்க வேண்டிய உதவித்தொகை போன்ற சலுகைகளை தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். காளியம்மாள் ஒன்னே ஒன்னு நாம இங்க கவனிக்கணும். வேலையில்லாத பார்வையற்றோருக்கு குளிர்சாதனத்தோடு கூடிய பெரிய பங்களா வேணும், மாதாந்திர உதவித் தொகையாக 2 லட்ச ரூபாய் கண்டிப்பா தமிழக அரசு கொடுத்து தான் ஆகணும். இதுதான் பார்வையற்றோர் வைத்திருக்க கோரிக்கைகளிலேயே மிகவும் முக்கியமானது காளியம்மாள்.. அப்படித்தான் அரசு நெனச்சி அவங்க கிட்ட பேச்சுவார்த்தை நடத்த முன் வரல. அரசின் ஊதுகுழல் தொலைக்காட்சிக்காக,; போராட்டக் களத்தில் இருந்து நான் தமிழரசன். என்னோடு நமது ஒளிப்பதிவாளர் இருளாகி.

 இப்படியே கண்ணீரிலும் பட்டினியிலும், அவர்கள் மகிழ்ச்சியாகவே காணப்பட்டனர்.. இவர்களின் இந்த நியாயமான போராட்டத்தை நீர்த்துப் போக செய்வதற்காக; பார்வையற்றோருக்கு உள்ளேயும் சில யூதாசுகளும் இருந்ததாக ஒரு பார்வையற்ற நண்பர் என்னிடத்தில் பகிர்ந்து கொண்டார்.

 இவர்களுக்காக அரசால் போடப்பட்ட அரசு ஆணைகளையே; இவை எல்லாம் தப்பான அரசு ஆணைகள் என்று சொன்ன அதிகாரிகளின் அறியாமையை நாம் என்ன சொல்வது? பார்வையற்றோரில் சட்டம் தெரிந்தவர்களும் இருந்தார்கள், சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவர்களும்

 இருந்தார்கள். நாம் அங்கே சந்தித்த பார்வையற்றோர் எல்லோருமே; அரசு பணியை பெறுவதற்கு தகுதியானவர்களாகவே எனக்கு தெரிந்தார்கள். படித்தவர்களுக்காக மட்டுமே பார்வையற்றோர் போராடவில்லை. வேலை செய்ய முடியாத பார்வையற்றோருக்காகவும் அவர்கள் போராடத்தான் செய்தார்கள். அரசு ஊடகங்களுக்கு பொய்யான தகவல்களை கொடுப்பதை நாங்களும் அறிந்திருக்க தான் செய்தோம். எங்களுக்கு போராட்டம் பற்றி பேட்டி கொடுத்த அமைச்சரின் அறியாமையையும் நாங்கள் அறியத்தான் செய்திருந்தோம். எங்களால் மட்டும் என்ன செய்து விட முடியும்? முன்னணி ஊடகங்களை நடத்திக் கொண்டு இருப்பவர்கள் எல்லாம் அரசியல்வாதிகள். எதிர்க்கட்சியாக இருக்கும்போது இவர்களுக்காக குரல் கொடுத்தவர்கள், இப்போது ஆளும் கட்சிக் கூட்டணியில் இருப்பதால்; அவர்களின் அறிக்கைகளும், ஆதரவுகளும், வெறும் சம்பிரதாயங்களாகவே இருக்கின்றன. ஒவ்வொரு கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வரும்போது எல்லாம் இதே நிலைதான் தொடர்கின்றன. ஆனால் பார்வையற்றோரின் கோரிக்கைகள் மட்டும் மைதானத்தில் உதைப்படும் கால்பந்துகளாகவே; அங்கும் இங்கும் உதைப்பட்டு கொண்டே இருக்கின்றன. ஒரு நாள் அந்த பந்துகள் பலமாக உதைக்கப்படும். அப்போது கோரிக்கை பந்துகள் எல்லைக்கோட்டை தாண்டி நிச்சயமாக வெளியேறும்.

 முற்றும்.

 உரிமையுத்தம் நிச்சயமாக தொடரும்

தொடர்புக்கு,

9442715777 

No comments:

Post a Comment