Saturday, 14 September 2024

கண் தெரியாதவனும், கடவுளின் மனைவியும்.

கண் தெரியாதவனும், கடவுளின் மனைவியும்.

முனைவர். இரா. பெரியதுரை.

வற்றாத உயிர் நதி என்று சொல்லக்கூடிய தாமிரபரணி நதி, வயல் வளர்த்து வயிறு நிரப்பி உயிர்ப்பிக்கும் வேலையோடு தன் முலைப் பாலை நிறுத்திக் கொள்ளாமல், ஆன்மாவை வளப்படுத்தும் ஆலயங்கள் பல கொண்டு நோய் நீக்கும் மூலிகைகள் பல தந்து, திருநெல்வேலி சீமையை உலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் வைத்திருப்பதை அறியாதவர் யார் இருக்க முடியும்? அந்த நதிக்கரையில் தான் கிராமமும் இல்லாமல், நகரமும் இல்லாமல், ரெண்டும் கெட்டான் நிலையில் அமைந்தது தான் எங்கள் ஊர் சேரன்மகாதேவி. இங்கே இயற்கையின் எழில் கொலுவிருக்கும் அமைதியும் உண்டு, செயற்கையின் ஆர்ப்பாட்டம் தடாதடக்கும் இரைச்சலும் உண்டு. அந்த ஊரின் ஆற்றங்கரையில் சாந்தமே உருவான பூங்குழலி அம்மன் கோவில் ஒன்று உண்டு. எந்த காலத்தில் யார் கட்டினார்களோ? தெரியாது. மார்த்தாண்ட வர்மன் கட்டியதாகவும்? சிவனும் உமையாளும் தீர்த்தமாடி இளைப்பாறியதாகவும், அக்ரஹாரத்து ஐயன்மார்களும், எங்கள் ஊர் பெருசுகளும் சொல்கிறார்கள். அம்பாள் இருக்கிறார்களோ இல்லையோ அது எனக்கு தெரியாது. ஆனால் அந்தக் கோயிலில் எப்போதும் அமைதி இருந்தது. அந்த இடம் என் நெஞ்சுக்கு நெருக்கமானதாய் எப்போதும் இருந்திருக்கிறது. ஆற்றை நோக்கியபடி வலது புறமும் இடது புறமும் இரண்டு பெரிய கல் மண்டபங்கள், மிதமான வேகத்தில் ஒருவர் ஆலயத்தை சுற்றி ஒரு வளையம் வருவது என்றால்; குறைந்தது அரை மணி நேரம் தேவைப்படும்.. கோயிலின் வெளிப்பிரகாரம் எவ்வளவு சுற்றளவு இருக்கும் என்று புரிந்து கொள்ளுங்கள்.. மருத மரங்கள் நிறைந்த சோலை, நூற்றுக்கணக்கிலான தென்னை மரங்களைக் கொண்ட தோப்பு, இப்போது அந்த அளவிலான தென்னை மரங்கள் அங்கே இல்லை. காற்றில் நறுமணத்தை உலாவ விடும் தாழை மலர் பண்ணைகள், தாளை அடிப்பண்ணை பக்கத்தில் பாம்புகள் அதிகம் இருப்பதாக என் ஆச்சி அடிக்கடி சொல்லி என்னை அச்சுறுத்துக் கொண்டே இருப்பாள். ஆனாலும் நான் அங்கே போவதை நிறுத்திக் கொள்ளவில்லை. அர்ச்சனை பூக்களுக்காக பல மலர் செடிகளை கொண்ட ஒரு நந்தவனமும் அங்கே இருந்தது. கோயிலின் நிர்வாக செலவுக்காக நிறைய கனவான்கள் தங்கள் வயல் காடுகளையும் கோயிலுக்காக எழுதி வைத்திருந்தார்கள்.. அந்த அம்பாளுக்கு மூன்று கால பூஜை பாப்பா ஐயர் வாரிசுகளால் இன்று வரை எந்த சிக்கல்களும் இல்லாமல் நடந்து வருகின்றன. என் வீட்டில் இருந்து 20 நிமிடம் நடக்கும் தூரத்தில் தான் அந்தக் கோயில் இருக்கிறது... அந்தக் கோயிலுக்கு செல்லும் செம்மண் சாலை இரண்டடி அகலம் தான் இருக்கும். சாலையின் இருபுறமும் இருக்கும் வயல்வெளிகள் கோயிலுக்கு போகும்போதும் வரும்போதும், உடலில் குளுமையை பூசி தான் வழி அனுப்பி வைக்கும்.

மதுரையில் என் கல்லூரி படிப்பை முடித்த நான் வேலையில்லாமல் வீட்டில் முடங்கிக் கிடந்த காலம் அது. முதுகலை பட்டதாரி என்ற கௌரவம் மற்ற பார்வை இழந்தவர்களைப் போல ஏதாவது வியாபாரம் செய்து பிழைக்க வேண்டும் என்ற என் எண்ணத்தை முடமாக்கி போட்டு இருந்தது. கடினமான வேலைகளை செய்து பிழைக்கும் மனிதர்களின் துயரமான பொழுதுகளை விட, வேலை எதுவும் கிடைக்காமல் கடந்து செல்லும் திங்கட்கிழமைகள் எவ்வளவு கொடுமையானவை? என்பது அனுபவித்து பார்த்த என் போன்ற பார்வையற்ற இளைஞர்களுக்கு தான் தெரியும். என்ன படித்து என்ன புண்ணியம்? கண்ணோட, காலோட இருக்கிற எங்களுக்கே வேல இல்ல. உனக்கெல்லாம் என்ன வேலை கிடைக்கும்? உங்கள மாதிரி பட்டவங்களுக்கு தான் கவர்மெண்ட் சலுகை கொடுத்து இருக்காங்களே வேலை உனக்கு சீக்கிரம் கிடைச்சிடும்.. இப்படியே அவர் அவர் மன ஓட்டத்திற்கு ஏற்றபடி பேசிக் கழிக்கும் என் ஊர் காரர்கள், ஒருபுறம். இல்லாமை இயலாமை தனிமை மற்றொருபுறம் என்னை தவணை முறையில் கொன்று தின்று கொண்டு தான் இருந்தன. இருந்த போதிலும்; நான் ஏதாவது ஒரு வேலையை பெற்று விட வேண்டும் என்ற என் முயற்சியை கைவிடவே இல்லை. சாப்பாட்டுக்கு எந்த சிக்கலும் எனக்கு இதுவரை இருந்ததில்லை. ஆனால் என் வயதுக்கு ஏற்ற தேவைகள் மட்டும் எனக்கு இருக்கத்தான் செய்தன. இத்தகைய கடினமான தருணங்களில் அமைதியை நான் அதிகமாகவே விரும்பினேன். காலை உணவை முடித்த நான் எனது மதிய உணவு நேரம் வரும் வரையிலும், மாலை தேநீரை முடித்த நான் இருள் கவியும் வரையிலும், அந்தப் பூங்குழலி அம்மன் கோவில் மண்டபத்தில் தான் என் பொழுதுகளை கழித்துக் கொண்டிருந்தேன்.. அந்த இயற்கையின் அரவணைப்பிலிருந்த என்னால் எனது கற்பனை குதிரையில் ஏறி நீங்கள் யாரும் இதுவரை சென்றிருக்காது எல்லா உலகங்களுக்கும் என்னால் செல்ல முடிந்தது.. என்ன துரை ஆபீஸ்க்கு கிளம்பியாச்சா? என்று போகிற போக்கில் சிலர் என்னை கிண்டல் செய்வதும் உண்டு.. சில நேரங்களில் ஆடு மாடு மேய்க்கும் ஆண் பெண் இருபாலருமே என்னிடம் பேசிக் கொண்டிருப்பதும் உண்டு. அவர்கள் எல்லாம் சொல்வதைப் போல அந்தக் கோயில் மண்டபம் தான் என்னுடைய அலுவலகமாய் மாறிப் போயிருந்தது. இதற்கிடையில், நாசமாய் போன காதல் ஒன்றும் அந்த ஸ்ரீ தேவியோடு எனக்கு ஏற்பட்டிருந்தது.. அவளுக்கும் கண்ணு தெரியாது. மதுரையில் உள்ள பார்வையற்றோருக்கான ஒரு வாசிப்பு மையத்தில்தான் அவள் குரலைக் கேட்டு அதில் நான் மயங்கி விழுந்து இருந்தேன்.. அது மட்டுமா? தம்மடிக்கவும் எங்க ஊரு மிலிட்டரி மாமா எனக்கு கற்றுக் கொடுத்திருந்தார். மொத்தத்தில் கணிசமான அளவில் நான் கெட்டு குட்டி சுவரா தான் போயிருந்தேன் அந்த காலகட்டத்தில். வெள்ளி செவ்வாய்க்கிழமைகளிலும், மற்ற சிறப்பு நாட்களிலும், பக்கத்து கிராமங்களில் இருந்து ஏராளமான ஆண்களும் பெண்களும் அந்த கோவிலுக்கு வருவார்கள் காலையும் மாலையும்.

எனது இல்லாமையை உணர்ந்த எனது அக்காவும் எனது அம்மாவும் சில நேரங்களில் செலவுக்கு பணம் கொடுக்க தான் செய்திருந்தார்கள். பணத்தை வாங்குவதில் எனக்கு கூச்சமாகத்தான் இருந்தது அதே வேளையில், எனது கை பணத்தைப் பெறுவதில் முந்திக் கொள்ளும். எங்கள் கிராமத்தில் உள்ள பலரின் கையில் அலைபேசிகள் இருந்தன. அந்த நாட்களில் என்னுடைய பார்வை இழந்த நண்பர்கள் பலரும் அலைபேசிகளை வைத்திருந்தனர். வேலை வெட்டி இல்லாத நான் அலைபேசியை விரும்புவது பேராசையாகவே பலருக்கு தெரிந்திருக்கலாம். அது சமூகத் தொடர்புக்கு மிகவும் முக்கியம் என்பதை அந்த நாட்களில் என் பெற்றோருக்கு என்னால் புரிய வைக்க முடியவில்லை. நியாயமான எனது அந்த ஆசையையும், வேறு வழி இல்லாமல் பழக்கமில்லாத இடத்தில் மாட்டிக் கொண்டு, அவசரமாக உணரும் இயற்கை உவாதைகளை அடக்கிக் கொள்ளும் பார்வையற்றவனாய், அந்த அலைபேசி ஆசையை அடக்கி வைத்துக் கொண்டேன் எனக்குள்.. ஆனால் எனது இந்த விருப்பத்தை நியாயமானது என்று அரசு உணர்ந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.. அரசின் பார்வையற்றோருக்கு அலைபேசி வழங்கும் திட்டத்தின் கீழ் ஒரு வழியாக போராடி ஒரு அலைபேசியும் நான் பெற்றுக் கொண்டேன். எனது தனிமையை விரட்டுவதில் அந்த அலைபேசி எனக்கு பெரிதும் உதவியாக இருந்தது. அந்த அலைபேசியை இயக்குவதில் பல சவால்களையும் நான் சந்திக்க வேண்டி இருந்தது. சில நேரங்களில் பேசும் செயலி செயல்படாமல் நின்று விடும். மற்ற செயலிகளை எப்படி இயக்குவது என்று பார்வை உள்ளவர்களால் எனக்கு கற்றுக் கொடுக்க தெரியவில்லை. பார்வை உள்ளவர்களை விட என் போன்ற பார்வையற்றோரே சிறந்த ஆசான்களா இருந்து அதை இயக்க எனக்கு கற்றுக் கொடுத்திருந்தார்கள்..

அது ஒரு தசரா பூசை காலம். 10 நாட்களும் அந்தக் கோயில் மக்கள் வெள்ளத்தால் நிறைந்து விழா கோலம் கொண்டிருக்கும். பத்து நாட்களும் அந்த பூங்குழலி அம்பாள் ஒவ்வொரு வெவ்வேறு அவதாரத்திலும் பக்தர்களுக்கு காட்சி தருவாள். பலவித நறுமணங்களிலும், பெண்கள் பாடும் பக்தி பாடல்களிலும், அந்தக் கொழுமண்டபம் தெய்வீக உணர்வை பெற்றிருக்கும். அன்றைய நாட்களில் வழங்கப்படும் பிரசாதங்களில் சுவை இருக்கின்றனவே அப்பப்பா நினைத்தாலே நாக்கில் நீர் சொட்டும். தினமும் இரவு 12 மணி வரை நடக்கும் மக்களின் ஆர்ப்பரிப்பில் அந்த தாமிரபரணி நதி கூட பாய்ந்து ஓட முடியாமல் திணறித்தான் போகும். அப்படியான ஒரு நாள் மாலை நேரத்தில் தான் பார்வதி எனக்கு அறிமுகம் ஆனால். அவளுக்கு நல்ல வீணை வாசிக்க தெரிந்திருந்தது. நல்ல சரீரத்தோடு பாடும் அவளின் குரல் எனக்கு மிகவும் இனிமையாய் இருந்தது. பூசை நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் அவள் என்னோடு பேசிக்கொண்டே இருந்தால். என் மூலமாக அவளுக்கு வேறு சில தேவைகளும் இருந்திருக்கின்றன. அந்த அம்பாள் தான் என்னை அவளுக்கு காட்டியதாகவும் சொல்லியிருந்தால்.. பகல் பொழுதுகளிலும் பார்வதி என்னுடன் பேசுவதற்காக அந்த கோயிலுக்கு வந்து கொண்டே இருந்தாள்.. அவள் அந்தக் கோயிலில் பூசை செய்யும் குருக்களின் உறவுக்கார பெண் என்றும் என்னிடம் அறிமுகம் செய்திருந்தால். டெல்லியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் அவள், தசரா விடுமுறைக்காக அவள் இங்கே வந்திருக்கிறாள். அவள் பார்வையற்றோர் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்யப் போவதாகவும், பார்வையற்றோர் பற்றிய பல தகவல்கள் அவளுக்கு தேவைப்படுவதாகவும் என்னிடத்தில் கேட்டுக் கொண்டிருந்தால். ஆ ஊ என்றால் எல்லோரும் பார்வையற்றோர் பற்றிய ஆய்வு செய்ய கிளம்பி விடுவீர்களா? நீங்கள் பார்வையற்றோரைப் பற்றி ஆய்வு செய்வதால் பார்வையற்றோருக்கு என்ன நடந்து விடப் போகிறது என்றும் நான் அவளிடம் கேட்டேன். அதற்கு அவளிடம் எந்தப் பதிலும் இருந்திருக்கவில்லை. கடைசியில் பார்வையற்றோரின் பிரச்சினைகள் சமூகத்துக்கு தெரிய வருவது நல்லது தானே என்று நானும் ஒத்துக் கொண்டேன்..

நிச்சயமாக அவள் அழகாகத் தான் இருக்க வேண்டும் என்பது என்னுடைய புரிதல். ஒருவேளை மற்றவர்களின் பார்வையில் அவள் அழகில்லாதவளாய் இருந்திருக்கலாம் அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. எப்போதும் அவள் நறுமண மலர்களை அவளின் கூந்தலில் சூடி இருந்தால். கஸ்தூரி மஞ்சளின் வாசனையும், நெற்றியில் அணிந்திருந்த குங்குமத்தின் நறுமணமும், அவளை நான் எனக்குள் சுகமாய் சுவிகரித்துக் கொண்டிருந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். அவளின் கைகளை மட்டுமே என்னால் தொற்றுணற முடிந்திருந்தது. உடலின் உரசல்களை அவள் தவிர்த்தே வந்து கொண்டிருந்தாள்.. நான் அறிந்த மொழிகளிலே அவள் பேசிய மொழியை நான் இதுவரை அறிந்திருக்கவில்லை. அது அந்நிய பாசை போலவே இருந்தது. அவள் செயற்கைக்கோல் அலைபேசியையும் வைத்திருந்தால். நான் என்னுடைய அலைபேசியில் அவள் பெயரை பாரு என்று சேமித்து வைத்திருந்தேன். அவள் என்னிடத்தில் அலைபேசியில் பேசும் போது அந்த குரலில் நான் கிறங்கித் தான் போயிருந்தேன். பல நேரங்களில் அவள் ஒரு பெரிய ஞானி போல ஆன்மீகமும் பேசினாள். இந்த பொது சமூகத்தோடு நெருங்கி பழக முடியாமல் அன்னியப்பட்டு தனித்து இருப்பதாகவே அவளை நான் உணர்ந்தேன். பார்வையற்றோர் இருக்கும் பல இடங்களுக்கு நான் அவளை அழைத்துச் சென்றேன். பார்வையற்றோரின் பிரச்சினை குறித்து பல கேள்விகளை பார்வையற்றவர்களிடம் அவள் கேட்டுக் கொண்டே இருந்தாள். பார்வையற்றோரின் பிரச்சினைகளைக் கேட்டு அவள் இறக்கப்படும்போது அவளின் தாய்மையை என்னால் உணர முடிந்தது..

பார்வையற்றோர் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நொடிப்பொழுதுகளும் சிக்கல்கள் நிறைந்தவையாகவே இருந்திருக்கின்றன என்பதை நேரில் காட்டியும் வார்த்தைகளால் விவரித்தும் அவளிடம் சொல்லிக் கொண்டே இருந்தேன். ஒரு நாள் மதிய வேளை அவள் என்னை ஒரு பெரிய உணவு விடுதிக்கு அழைத்துச் சென்று இருந்தால்.. உணவுப் பட்டியல் அடங்கிய ஒரு அட்டை என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அதை என் கையில் வைத்துக் கொண்டு என்னால் என்ன செய்ய முடியும்? இதனை கவனித்த பார்வதி, உங்களுக்கான எழுத்து மொழியில் ஏன் இல்லை என்று அவள் என்னிடத்தில் கேட்டால். நானும் அவளும் ஒரு நாள் பேருந்தில் சென்று கொண்டிருந்தோம். பெண்கள் இருக்கும் ஒரு இருக்கையில் அவள் அமர்ந்து கொண்டாள். நானும் நின்று கொண்டே வந்தேன். எனக்கு முன்னால் உள்ள ஒரு இறுக்கை காலியாகவே இருந்திருக்கிறது அது எனக்கு எப்படி தெரியும்? அங்கே ஒரு சீட்டு இருக்கிறது என்பதை மட்டும் எல்லோருமே சொல்லிக் கொண்டிருந்தார்கள் யாரும் எனக்கு அதை காட்டவில்லை. எத்தனை முறை பேருந்தின் எண்களை படித்து சொல்ல ஆளில்லாமல் பேருந்துகளை தவற விட்டிருக்கிறேன் என்பதை நான் அவளிடம் சொல்லி இருந்தேன்.

என்னுடைய பள்ளி நண்பன் சொரிமுத்துவும் பார்வதி இடம் ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டான். ' அதாவது மேடம், கதையை நல்ல கேளுங்க. நானும் என் மனைவியும் ஒரு நாள் ஜவுளி கடைக்கு போயிருந்தோம். கடையில் இருந்த விற்பனையாளர் அழகான சேலைகளை எல்லாம் எடுத்துப் போட்டுக் கொண்டே இருந்தார். என் மனைவிக்கோ, எல்லாமே புடிச்சிருந்தது. எதை எடுப்பது என்று அவளும் குழம்பித்தான் போயிருந்தாள். எனக்கோ ரொம்பவும் கடுப்பாகவே இருந்தது அவள் செய்த செயலை பார்த்து. அவளின் கையைப் பிடித்து அழுத்தி எதையாவது ஒன்றை எடுத்து தொலை நேரமாகிறது என்று சொன்னேன். என் கன்னத்தில் ஒரு அடி விழுந்தது. அப்போதுதான் எனக்குத் தெரிந்தது நான் பிடித்தது என்னுடைய மனைவியின் கையை இல்லை என்று. என் மனைவி கொஞ்சம் விலகி அடுத்த வரிசையில் இருக்கும் சேலையை பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறாள்.. அந்த சைக்கிள் கேப்ல வேறொருவரின் மனைவி என் மனைவி நின்றிருந்த இடத்தில் நின்றிருக்கிறாள்.. நான் என்ன செய்யட்டும்? என் மனைவியால் எனக்கு கொடுக்க முடியாததை வேறொருவரின் மனைவி கொடுத்து விட்டால் " இதைக் கேட்ட பார்வதி விழுந்து விழுந்து சிரித்தாள்.

பார்வை இழந்த தம்பதியர் குழந்தை வளர்ப்பதில் உள்ள சிக்கல்களையும் அவளிடம் பகிர்ந்து கொண்டனர். நாங்கள் பெற்ற குழந்தையின் முகத்தைக் கூட எங்களால் பார்க்க முடியாது என்பது எவ்வளவு பெரிய கொடுமை தெரியுமா? மலஜலங்களை எங்கேயாவது கழித்து விடுவார்கள் அதை குழந்தைகளுக்கு சொல்லத் தெரியாது. அதை மூக்கால் மோப்பம் பிடித்துக் கொண்டே, தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். மழைக்காலங்களில் வீட்டுக்குள் பூச்சி வண்டுகள் வந்துவிடும். அந்தத் தொல்லைகளில் இருந்தும் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். உங்களைவிட வாழ்ந்து முடிக்க பல மடங்கு சவால்களை நாங்கள்தான் எதிர்கொள்ள வேண்டும்.. புதிய புதிய கண்டுபிடிப்புகள் எல்லாம் உங்கள் வாழ்க்கையை எளிதாக்கி இருக்கின்றன இல்லையா? என்று பார்வதி என்னிடத்தில் கேட்டால். பழைய நிலைமையிலிருந்து எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன என்பதை மறுப்பதற்கு இல்லை என்று நான் அவளிடம் சொன்னேன். என்னுடைய நண்பர்கள் சிலர் பணத்தைக் கையாளுவதில் எழும் சிக்கல்களைப் பற்றியும் அவளிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அதை சமாளிப்பதில் சில செயலிகள் இருப்பதையும் அவர்கள் சொல்லத்தான் செய்தார்கள்.. ஆனால் அவசரக் கதியில் அதை செயல்படுத்த முடியாது என்று நான் அவளிடம் சொன்னேன்.. ஒரு நாள் நானும் பார்வதியும் பேருந்துக்காக நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தோம்.. எதிர்பாராத நேரத்தில் திடீரென பெரிய பெரிய மழைத்துளிகள் விழத் தொடங்கியது எல்லோருமே மழையில் இருந்து தப்பிக்க ஆளுக்கு ஒரு திசையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார்கள்.. அங்கே ஊதுபத்தி விற்கக்கூடிய ஒரு இளைஞர் மழையில் நனைந்து கொண்டே நிதானமாய் நடந்து வந்து கொண்டிருந்தார். ஓடி ஒதுங்க அவர் உடலில் ஆற்றல் இருந்த போதிலும், அவர் அப்படி செய்யவில்லை. பார்வதி அவரை கூர்மையாய் கவனித்து விட்டு அவருக்கு கண் தெரியாது என்பதை எல்லோரிடத்திலும் சொன்னாள். மழையில் நனைய வேண்டும் என்பது அவரின் விருப்பமில்லை. பாவம் அது அவரின் இயலாமை என்று எல்லோருமே அவர்களுக்குள்ளேயே சொல்லிக் கொண்டனர்.

பொதுவாக தொடர் மழை காலங்கள் பார்வையற்றோரின் இயக்கத்தை முடக்கித்தான் போட்டு விடும். நடக்கும் பாதைகளில் சேரும் சகதியும், குண்டும் குழிகளுமாய் கிடக்கும். இந்த தடைகளை எப்படி எங்களால் கடந்து செல்ல முடியும்? என்று நான் அவளிடம் கேட்டேன். இது இப்படி இருக்க, கிராமங்களில் வசிக்கும் பார்வையற்றோரின் பிரச்சினைகள் வேறு விதமாக இருக்கும். செல்லும் பாதைகளில் நாய்களும் கால்நடைகளும் படுத்து கிடக்கும். அவைகளை தெரியாமல் மிதிக்கும் போது என்ன நடக்கும்? என்பதை யோசித்துப் பார் என்று நான் அவளிடம் சொன்னேன். நான் சொன்னது கொஞ்சம் இன்னும் நிறையவே இருக்கின்றன பிரச்சனைகள். பார்வதி நீ கோடிக்கணக்கான பார்வையற்றோர்களை சந்தித்து பிரச்சினைகளை கேட்டுப் பார். நான் சொல்லாத கோடி பிரச்சனைகளை அவர்கள் உன்னிடம் சொல்வார்கள். படிப்பதில் பிரச்சனை, வேலை கிடைப்பதில் பிரச்சனை, கிடைத்த வேலையை பாதுகாப்பதில் பிரச்சனை, போக்குவரத்தில் பிரச்சனை, பொருளாதாரத்தில் பிரச்சனை, குடும்பத்தில் பிரச்சனை, ஏன்? பார்வையற்றோருக்கு திருமணம் ஆவதில் கூட பிரச்சினை இருக்கிறது. இது மாதிரியான பிரச்சனைகள் எல்லோருக்கும் தானே இருக்கின்றன? பார்வதியின் இடத்தில் திருப்பி கேட்டால். அவளின் கேள்விக்கு நான் ஆழமாக யோசித்து விட்டு, அவளுக்கு செயல்முறை தேர்வின் வழியாகத்தான் புரிய வைக்க முடியும் என்று முடிவு செய்தேன். ஒரு மணி நேரம் கண்களை கட்டிக்கொண்டு என் கையைப் பிடிக்காமல், என்னோடு அவள் நடக்க வேண்டும் இதுதான் அந்த செயல்முறை தேர்வு. அவளும் அதற்கு ஒத்துக்கொண்டால். அவளும் என் கையைப் பிடிக்காமல் நடக்கத்தான் செய்தாள்.. எட்டு மாத குழந்தை ஒன்று எட்டு எடுத்து வைத்து நடப்பது போல.

 

தாழக்கட்டுக்குள் தாளம் தப்பாமல் நடந்த அவளின் கொலுசொலி, தப்பு தாளம் போட்டு தடுமாறத் தொடங்கியது. பத்து நிமிடம் கூட அவளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அந்த ஆற்று மணல் மேடு தட்டி இடறி விழப்போன அவள், என்னை கட்டிப்பிடித்தவளாய் தன்னை நிலைநிறுத்திக் கொண்டால். அப்போதுதான் நான் முதன் முறையாக அவளின் தளிர் மேனியின் குழு மயையும், அவள் உடலின் நறுமணத்தையும் என் உடலின் நான்கு புலன்களாலும், சுதந்திரமாய் அங்கீகரித்து மயங்கிப் போயிருந்தேன். சில நிமிடங்களுக்குப் பிறகு அவளின் கண்களைக் கட்டி இருந்த திரையை அகற்றிவிட்டு என்னை திரும்பிப் பார்த்தால். நான் அந்த செயல்முறை தேர்வை அவளின் சம்மதத்தோடு தானே நடத்தினேன்? அதனால் அவளால் என்னை ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவள் என்னிடத்தில் கேட்டால் உங்களின் உரிமையை நிலை நிறுத்திக் கொள்ள சட்டங்கள் இருக்கின்றனவா இல்லையா? நான் அவளுக்கு சொன்னேன், இருக்கின்றன. ஆனால் இல்லை. என்று. என்னை அவள் குழப்பாமல் சொல்லச் சொன்னால். ஏட்டளவில் சட்டங்கள் இருக்கின்றன. செயல் அளவில் சட்டங்கள் இல்லை. குழப்பம் தீர்ந்ததா? என்று அவளிடம் நான் கேட்டேன். அவள் அந்த மயக்கத்தில் இருந்து இன்னும் வெளியே வரவில்லை போலும். அவள் எதுவும் சொல்லாமல் மௌனமாகவே இருந்தாள். கடவுளைப் பற்றி என்ன சொல்ல விரும்புகிறாய்? என்று அவள் என்னிடத்தில் கேட்டால். கடவுளின் படைப்பே குழப்பம் தானே? ஒருவன் நான் முற்பிறவியில் செய்த பாவம் என்கிறான். ஒரு மதம் சொல்கிறது அவன் செய்த பாவமோ அவன் பெற்றோர் செய்த பாவமோ கிடையாது என்று.

கடவுளிடம் நீ என்ன கேட்க விரும்புகிறாய் என்று அவள் என்னிடத்தில் கேட்டால். ஆமாம் நான் கேட்டதை உடனே அவரு கொடுத்து கிழிச்சிடுவாரு. இருந்தாலும் நீ கேட்கிற நான் சொல்றேன். எல்லா பொறுப்புகளையும் என் கையில கொடுத்துட்டு கடவுள் கொஞ்ச நாளைக்கு கம்முன்னு இருக்கணும். எங்கள மாதிரி கண்ணு தெரியாத ஒரு வாழ்க்கையை அவர் வாழ்ந்து பார்க்கணும். உன்ன மாதிரி ஒரு அழகான பொண்ணு எப்பவும் என் கூடவே இருக்கணும். இந்த வார்த்தைகளை கேட்டதும் அவள் அதிர்ந்து தான் போனால். என்னது நானா உன்கூடவா? அது மட்டும் முடியவே முடியாது. ஏன் முடியாது? என்று நான் கேட்டேன். நான் விடல எனக்கு நல்ல கோபம் அவள் மேல. கண்ணு தெரியாதவங்க என்ன உன்ன மாதிரி பொண்ணுங்களுக்கு ரொம்ப இளக்காரமா தெரியுதா? இவ்வளவு தடைகள் எங்களுக்கு எதிராக இருந்தும் அவற்றைத் தாண்டி நாங்கள் வாழ்ந்து கொண்டு தானே இருக்கிறோம்? மரியாதையா என்ன கல்யாணம் பண்ற வழிய பாரு. நான் சொன்னதைக் கேட்டு பார்வதியும் கடுப்பாகித்தான் போயிருந்தாள். நிறுத்துடா! நான் யார் தெரியுமா? நீ கோரிக்கை வச்சியே இவ்வளவு நேரம் அந்தக் கடவுளோட பொண்டாட்டிடா நான்..

 என்னது? நீ கடவுளோட பொண்டாட்டியா?

 அந்த நேரத்தில் என்னுடைய அலைபேசி அதிர்வதைக் கேட்டு நான் விழித்துக் கொண்டேன். ஸ்ரீதேவி தான் அழைத்திருக்கிறாள்.. என்னது? நான் கண்டது கனவா? ஸ்ரீதேவி என்னிடத்தில் கேட்டால் என்ன கனவு டா கண்ட?

தொடர்புக்கு,

9442715777

 


  

No comments:

Post a Comment