குருவி காத்தான் ஓடை.
முனைவர். இரா.
பெரியதுரை.
வயல்வெளிகளுக்கிடையே பருவப் பெண்ணை போல குழுமையை
சுமந்து கொண்டு; செடி கொடிகளை
தழுவிய படியே எந்த சலனமும் இன்றி, தவழ்ந்து
செல்லும் அந்த நீரோடையை தான்; குருவி காத்தான்
ஓடை என்று சொல்வார்கள். தாமிரபரணி ஆற்றில் இருந்து அந்தப் பரந்த வயல்வெளியை
விளைவிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், தன் இரு கறைகளிலும் உள்ள எண்ணற்ற மரங்களையும், நாணல் புல்வெளிகளையும், மலர்ச்சோலைகளையும், அரவணைத்து வாழ்விப்பதில் ஒரு பவித்திரமான தாய் தான் அந்த நீரோடை. அங்குள்ள
மரங்களில் வசந்த ஊஞ்சலாடும் தூக்க நாம் குருவிக்கூடுகள், அந்தக் கூடுகளில் காதல் ஒத்திகை நடத்தும் ஜோடி குருவிகள்,,
வண்ணப் பறவைகளும் வண்டிணங்களும் சேர்ந்து
இசைக்கும் வசந்த ராகங்களும் அந்தக் கடவுளை கூட கை தொழ செய்து விடும்.
அதை வெறும்
நீரோடையாய் நான் பார்த்து ரசித்து என் இதயத்தில் இருந்து கடத்தி விட
விரும்பவில்லை. தத்துவங்களும், இலக்கியங்களும்,
உளவியல் கோட்பாடுகளும், கற்றுத்தந்திராத; வாழ்க்கை புரிதலை ஞானத்தை, அந்த நீரோடையின்
முளை பாலில் இருந்து நான் பருகி வந்திருக்கிறேன். அந்த அழகான அறுவடை நாளில் தான்
அந்த ஓடையின் ஓரமாய் நின்றிருந்த புன்னை மர நிழலில்; என்னை என் அம்மா சுமந்தது போதும் என்று புறம் தள்ளி
இருக்கிறாள். அதன் காரணமாகத்தான் என்னவோ; அந்த நீரோடை என் நெஞ்சுக்கு நெருக்கமான ஆசான் ஆகிப் போனது. ஒவ்வொரு எனது அழகான
காலைப் பொழுதுகளும், அந்த நீரோடையின்
குதூகலத்தில் தான் தொடங்கும். என்னுடைய இனிமையான மாலைப்பொழுதுகளோ; அந்த நீரோடையின் மரங்களில் இருந்து, ஆரவாரிக்கும் பறவைகளின் இசையோடு தான் முடியும்.
அந்த நீரோடையை ஒட்டியே எங்களுக்கு ஒரு வயல் இருந்தது. வருடத்தில் இரண்டு போகம்
நெல் விளையும். கோடைக்காலத்தில் மட்டும் உளுந்து, எள்ளு போன்ற தானியங்களை பயிரிடுவோம். அருகில் இருந்த
வயல்காரர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு சாதிய பின்னணியை கொண்டிருந்தாலும்; ஒருவருக்கொருவர் ஒத்தாசையாய் தான் இருந்து
வந்திருக்கிறோம். நான் பெண் பிள்ளை என்பதால்; நடவின்போது முதல் நாற்றை நான்தான் நடுவேன்.. அதேபோல
அறுவடையின் போதும்; என்னைத்தான்
வயலில் இறங்கி முதல் கதிரை அறுக்க சொல்வார்கள். பெண் பிள்ளைகள் இல்லாத பக்கத்து
வயல்காரர்களும் கூட, இந்த புனிதமான
வேலையை என்னை தான் செய்யச் சொல்வார்கள். கவனித்துக் கொள்ளுங்கள் பெண் வளமையின்
தொடக்கம். பெண் வளமையின் குறியீடு. பள்ளிப்படிப்பை பொருத்தவரை நான் ஓரளவு தான்..
ஆனால் நான் புத்தகங்களில் உள்ள கருத்துக்களில் இருந்து விலகியே இருந்தேன். என்
வயதுக்கு ஏற்ற கேள்விகளும் என்னை துரத்திக் கொண்டே தான் இருந்தன. அதிலும்
குறிப்பாக சமூகவியல் வரலாற்றுப் பாடங்களில் தான் என்னுடைய தேடல்கள் இருந்தன. நான்
தான் எங்கள் வீட்டில் மூத்த பெண். எனக்கு அடுத்து ஒரு தம்பியும், ஒரு தங்கையும் இருந்தார்கள்.
என் அம்மா தான்; எங்களுக்கெல்லாம் சுமைதாங்கி. நாங்கள் அடம் பிடித்தால்;
ஆளுக்கு ஒரு அடியையும், நாங்கள் சமத்தா
இருந்தால் ஆளுக்கு ஒரு முத்தமும் கொடுத்து
எங்களை பாசத்தை கொட்டி வளர்த்து வந்தால். ஊருக்கு நடுவில் இருந்த அந்த பெருமாள்
கோயில் தான் அப்பாவின் உலகமாய் இருந்தது. ஈஸ்வர ஐயர் தான் அந்த ஊரில் எல்லாம்
அதுதான் எங்கள் அப்பா. அப்பாவுக்கு சோதிடமும் வேத மந்திரங்களும் ஓரளவு
தெரிந்திருந்ததால்; பக்கத்து
ஊர்க்காரர்களும் கூட அப்பாவை தேடி வந்த வண்ணம் இருப்பார்கள். எனது பனிரெண்டாவது
வயதில்தான் நான் பூப்படைந்திருந்தேன். அது இரண்டாம் போகம் அறுவடை தொடங்கும் தருணம்
கோடை காலமும் கூட. நான் தானே வயலில் இறங்கி முதல் கதிரை அறுக்க வேண்டும்? கதிரரைக்கும் பெண் பிள்ளைகளுக்கு தேங்காய் பழம்,
மஞ்சள் குங்குமம், வெற்றிலையோடு கொஞ்சம் பணமும் தருவார்கள் தட்சணையாக. அந்த
நாளில் நான் குளித்து தயார் நிலையில் இருந்தேன். என் இடத்தை நிரப்ப என் தங்கை
சென்று இருந்தால். காரணம் நான் தீட்டுக்காரியாம். நான் வளமையின் தொடக்கத்தில்
இருந்து முடித்து வைக்கப்பட்டிருந்ததாகவே உணர்ந்தேன். அந்த நாட்களில். பூப்படைவது,
மாத சுழற்சி காலம் இவை எல்லாமே வளமையின்
தொடக்கம் தானே? மனித வித்துக்களை
உருவாக்கும் சுப சகுனம் தானே அது? என்னுடைய இந்த
கேள்விகளுக்கெல்லாம் யாரிடமும் பதில் இல்லை அந்த நாட்களில். அதன் பிறகு அந்த
மூன்று நாட்களைத் தவிர, மற்ற நாட்களில்
நான் வயலுக்குப் போகவும் அந்த குருவி காத்தான் ஓடையை தரிசிக்கவும்
அனுமதிக்கப்பட்டிருந்தேன்.. நான் மனதளவிலும், உடல் அளவிலும், பெரிய அளவில் மாற்றத்தை உணரத் தொடங்கியிருந்தேன்.. என் உடல் பசியை தூண்டு
வகையில்; நான் கண்டிருந்த இயற்கை
நிகழ்வுகள் இருந்தன. ஜோடி மைனாக்கள் கொஞ்சும் போது மனிதர்கள் கொஞ்சுவது போலையே
இருந்தது எனக்கு. பறவைகள் இணைந்தே இருப்பதும், வண்டிணங்கள் இணை சேர்வதும், பூக்களில் மோதும் தேனீக்களை பார்த்தும், நான் ஒரு விதமான போதையில் கிறங்கியே; போயிருந்தேன். அந்தத் தலையணை கூட, முன்ன எப்போதும் இல்லாத சுகத்தை எனக்கு
தந்திருந்தது இருந்த போதிலும்; நான் எனக்குள்
அடங்கியே இருந்தேன். மீறல்களில் எனக்கு உடன்பாடு இல்லை.
அதே வேளையில் என் அப்பா வைத்திருந்த
ஓலைச்சுவடிகளையும் படிக்க கற்றுக் கொண்டிருந்தேன். எங்கள் கிராமத்தில் இருந்த அந்த
நூலகத்துக்கும் அடிக்கடி போய் வந்து கொண்டிருந்தேன். அந்த சிறிய வயதில் அந்த
நூலகத்துக்கு செல்லும் பெண் பிள்ளை நான் மட்டும்தான் இருந்திருப்பேன். அந்த
நூலகத்தின் பொறுப்பாளர் நாராயணன் மாமா என் கன்னத்தை அடிக்கடி கிள்ளி கொண்டே
இருப்பார். அவரின் இந்த செயல் எனக்கு எரிச்சலையே தந்தது. ஒருமுறை அவர் அப்படி
செய்யும்போது புத்தகத்தை கொண்டு அவர் முகத்தில் வீசி எறிந்து விட்டேன். ஒருவேளை
அவர் அப்படி செய்வது எனக்கு பிடித்திருக்குமேயானால்; நான் கூட அவருக்கு ஒரு முத்தம் கூட கொடுத்து இருப்பேன்.
அந்த அளவுக்கு நான் என்னை பக்குவப்படுத்தி இருந்தேன். பன்னிரண்டாம் வகுப்போடு என்
பள்ளிப்படிப்பை முடிவுக்கு கொண்டு வரும் திட்டம் என் அம்மாவிடம் இருந்தது. ஆனால்
ஆராய்ச்சி வரை நான் படிப்பை
தொடர்வதில் பிடிவாதமாய் இருந்தேன். ஒரு வழியாக
திருநெல்வேலியில் இருந்த வைஷ்ணவி கலைக் கல்லூரியில் தான் எனது கல்லூரி படிப்பை
நான் தொடர்ந்தேன்.. இரு பாலருமே சேர்ந்து படிக்கும் கல்லூரி அது. அங்கே நான்
சமூகவியல் துறையை தேர்ந்தெடுத்து இருந்தேன். நான் வீட்டில் இருக்கும் ஓய்வு
நேரங்களில் சோதிடத்தையும் என் அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டிருந்தேன் அதில்
உள்ள நம்பகத்தன்மையை தெரிந்து கொள்வதற்காகத்தான் நான் அதை விரும்பினேன். எங்கள்
வகுப்பறையிலும் அனல் பறக்கும் கேள்விகள் விவாதங்கள், சமூகம் தொடர்பாக தினம் தோறும் நடந்து கொண்டு தான்
இருக்கும். மற்றவர்களை வசீகரிக்கும் அளவிற்கு நான் ஒன்றும்; அவ்வளவு அழகான பெண் எல்லாம் கிடையாது. எனக்கு நான் அழகி
தான். அலங்காரம் செய்து கொள்வதிலெல்லாம் எனக்கு உடன்பாடு கிடையாது. பிறர் என்னை
பார்க்கும் போது அவர்களுக்கு நான் பெண்ணாக தெரிய வேண்டும் அவ்வளவுதான். எங்கள்
வகுப்பறையில் உள்ள ஒவ்வொருவரும் வாரத்தில் ஒரு நாள் ஒரு தலைப்பில் கருத்தரங்கத்தை
நடத்த வேண்டும். ஒரு நாள் என்னுடைய முறையும் வந்தது. பெண் ஏன் அடிமையானால்?
என்ற நூலை ஆதாரமாகக் கொண்டு, தீட்டும், கற்பும் என்ற தலைப்பில் அந்த கருத்தரங்கம் அமைந்தது. நான்
வைத்திருந்த கருத்து கோள் எல்லோரையுமே யோசிக்க வைத்தது.. பயன்கள் எல்லோரையுமே நான்
தொட்டுத்தான் பேசுவேன். ஆனால் நான் யாருடைய உணர்வையும் தூண்டும் வகையில் நடந்து
கொள்ளவில்லை. எது எப்படி இருந்தாலும் நான் அந்த குருவிக்காத்தான் ஓடையை இரு
நேரமும் தரிசிக்க தவறியதே இல்லை.
அது ஒரு நாள் மார்கழி மாத மாலை நேரம்.
பனித்துளிகள் மெதுவாய் விழத் தொடங்கியிருந்தன. பொதுவாக பசுமை நிறைந்த இடங்களில்
இருள் இன்னும் இறுக்கமாகவே இருக்கும் மேற்கிலிருந்து ஒரு இனிமையான நாதஸ்வர இசை.
அந்த வயல்வெளி காட்டுப் பூக்களின் வாசனையோடு இயற்கை போர்த்தியிருந்த பனிப்
போர்வையை கிழித்துக்கொண்டு, அலைபாயுதே கண்ணா
என்ற பாட்டு. அதைக் கேட்டு கிறங்கி தான் போயிருந்தேன்..
அது ஒற்றை
நாதஸ்வரமாய் யாரோ வாசிப்பது போல் தான் இருந்தது. என் அனுமானம் சரியாக
இருக்குமேயானால்; அது மேல கரை
கிராமத்தில் இருந்து தான் யாரோ வாசித்து இருக்க வேண்டும். இன்னும் சில பக்தி
பாடல்களையும் என்னால் கேட்க முடிந்தது. இருட்டுப் பூச்சிகளின் ரீங்காரம் ஆதிக்கம்
செய்யவே தொடர்ந்து என்னால் அதைக் கேட்க முடியவில்லை. என் தேடல் எல்லாம் அந்த
தெய்வீக இசையை நோக்கியே இருந்தது. திடீரென; கீச் கீச் கீச் என்ற ஒரு அபாய குரல் கேட்டது. நான் உடனே
திரும்பிப் பார்த்தேன், ஒரு மைனாவை ஒரு
பெரிய பாம்பு அந்த ஆலமரத்து கிளையில் கவ்விக் கொண்டிருந்தது. என்னால் ஒன்றும்
செய்ய முடியவில்லை. பலமுறை பாம்புகளை தவளைகள் பிடிப்பதை நான் நேரில்
பார்த்திருக்கிறேன். நான் பார்த்த இந்தக் காட்சி எனக்கு முதல் முறை தான். நான்
ஏற்கனவே கொஞ்சி மகிழும்போது பார்த்து இருந்த; அந்த ஜோடி மைனாக்களில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் என
நினைத்துக் கொண்டேன். அந்த இணை மைனா எவ்வளவு துடித்து போய்
இருக்கும். பாவம் பிரிவு எவ்வளவு கொடுமையானது?
7:00 மணி வரை நான் அங்கே நின்று இருக்கக்
கூடாது தான். ஏனோ விவசாயிகள் யாரும் பாம்பை அடிக்கும் பழக்கத்தை எங்கள் பகுதியில்
வைத்திருக்கவில்லை. என் அம்மா பாம்பை பார்க்கும் போதெல்லாம் கையெடுத்து
கும்பிடுவதை பலமுறை நான் பார்த்திருக்கிறேன். வலியது எந்த சூழ்நிலையிலும் தன்னை
காப்பாற்றிக் கொள்ளும்; என்பதை சமூகவியல்
கோட்பாட்டில் நான் படித்திருக்கிறேன்.. பாம்பை விட வலியது என்று ஒன்று
இருக்கத்தானே செய்கிறது.? மறுநாள் காலை
சனிக்கிழமை. நேற்று மாலையில் நான் கேட்டிருந்த நாதஸ்வர இசையை குறித்து என்
அப்பாவிடம் பேசிக் கொண்டிருந்தேன்.. அந்தக் கலைஞனை தான் தம்பி கல்யாணத்துக்கு
அழைக்க வேண்டும் என்று என் அப்பாவிடம் சொன்னேன். அதற்கு என் தம்பி ஏன் உன்
கல்யாணத்துக்கு அவனை கூப்பிட வேண்டியதுதானே? என்று சொன்னான். நான் கல்யாணம் பண்ண மாட்டேன் என்று
சொன்னதற்கு, அக்கா
முருகனுக்கு ஞானப்பழம் கொடுத்த காந்தாரிய போல ஆகப் போறா கல்யாணம் பண்ணாமல். என்று
என் தங்கை சொன்னால். அடுப்படியில் இதைக் கேட்டுக் கொண்டிருந்த என் அம்மா, அடக்கொடுமையே; வேதமும் தெரியல புராணமும் தெரியல அது அவ்வையார்.
காந்தாரிக்கு கண்ணு தெரியாது, அவா
திருதராஷ்டிரரின் மனைவி அவருக்குமே கண்ணு தெரியாது. என்று சொல்லவுமே எல்லோருமே
சிரித்துக் கொண்டோம்.
சில மாதங்களாகவே ஒற்றைத் தலைவலி என்னை படுத்திக்
கொண்டே தான் இருந்தது. அதே வேளையில் தூங்கி எழுந்தால் சரியாகிவிடுகிறது. மதியம்
சொதி குழம்பு சோறு சாப்பிட்டு முடித்து தூங்கி விட்டேன். எழுந்து பார்த்தேன் மணி
மாலை 4. தலைவலியும் ஓய்ந்திருந்தது அம்மா கொடுத்த காபியை குடித்தேன் மார்கழி
மாலைப் பொழுதுக்கு அது இதமாக தான் இருந்தது. வேகவேகமாக கோயிலுக்கு பூ தொடுத்து
அப்பா பூஜைக்கு கொண்டு போகும் அந்த வண்ண ஓலை பெட்டியில் வைத்தேன்.. நானும் தலைவாரி
என் தங்கை தொடுத்து வைத்திருந்த மல்லிகை பூவே தலையில் வைத்துக் கொண்டு, அந்த மேலக்கரை கிராமத்தை நோக்கி நடக்க
தொடங்கினேன். பாதையின் இருபுறமும் இருந்த காட்டுச் செடிகளில் உள்ள பூக்களும்,
துளசியின் வாசனையும் என் ஆன்மாவை
தூய்மைப்படுத்திக் கொண்டிருந்தது. மார்கழியில் தான் பூக்கள் அதிகமாக பூக்கும்.
எனவே தேனீக்களும் வண்டுகளும், வண்ணத்துப்பூச்சிகளும்
பூக்களில் உள்ள தேனை பருகி விட்டு ஒருவித போதை மயக்கத்தில் தான் அங்கும் இங்கும்
பறந்து கொண்டிருந்தன. அந்த மேலக்கரை கிராமத்தை நான் அடையவுமே அதை நாதஸ்வர இசை
என்னை வரவேற்பது போலவே இருந்தது.. நான் ஏற்கனவே நாதஸ்வரம் வாசிப்பவனை பற்றி அப்பாவிடம்
கேட்டு தெரிந்து கொண்டிருந்ததால்; அந்த இடத்தை நான்
சென்றடைவதில் அது எனக்கு உதவியாக இருந்தது. அது கோபாலசாமி கோயில். மார்கழி மாதம்
கண்ணனுக்கு உகந்த மாதம் என்பதால்; பெண்கள் கூட்டமே
அங்கு அதிகமாக இருந்தது. சிறிய கோயிலாக இருந்தாலும் அங்கிருந்த நந்தவனம் மிக
அழகாகவே இருந்தது. அந்த நாதஸ்வர காரன் யாரையும் சட்டை செய்யாமல், தன்னை மறந்தவனாய்; குறை ஒன்றும் இல்லை
மறைமூர்த்தி கண்ணா என்ற பாடலை, உருகி வாசித்துக் கொண்டிருந்தான்.. ஏன் இந்த
நாதஸ்வர காரன் இவ்வளவு பைத்தியக்காரனாய் இருக்கிறார்? இது நாதஸ்வர காரனின் பக்தி என்பதா? போதும் என்கிற மனநிறைவு என்பதா? அவனின் அறியாமை என்பதா? நான் ஏன் இத்தனை கேள்விகள் அவனை நோக்கி கேட்கிறேன் என்று
சொல்கிறேன் உங்களுக்கு. அவன் பிறவியிலேயே பார்வையில்லாதவன். அவன் அப்பாவும் இதே
கோயிலில் குழல் வாசிப்பவர். அவன் அப்பாவிடம் இருந்து இவனும் வாசிக்க கற்றுக்
கொண்டிருக்கிறான். சில வருடங்களுக்கு முன் அவன் அப்பாவும் இறந்து போனார் இவனுக்கு
அக்கா ஒருத்தி அவளும் திருமணமாகி வேறொரு ஊரில் இருக்கிறாள். அவன் அம்மாவோடு ஒரு
சிறிய வீட்டில் தான் இருக்கிறான் அவனுக்கும் திருமணமாகவில்லை. ஊர்க்காரர்கள்
அவனுக்கு கொடுக்கும் சொற்ப வருமானத்தாலும், அவன் அம்மா பூக்கட்டி விற்பனை செய்வதன் மூலமும், தான் இவர்களின் வாழ்க்கை கழிகிறது.. இவன்
ஒருவேளை குறையிலும் நிறைவு பெற்றிருப்பானோ? அவரவர் நியாயம் அவரவருக்கு.. நேரம் கடந்து இருப்பதை
உணர்ந்தவன் வாசிப்பதை நிறுத்தி இருந்தான். அந்த இளம் பணியிலும் அவன் வேர்த்து
நின்றான்.. அவன் காவி நிறத்தில் ஒரு வேட்டியையும், மஞ்சள் நிறத்தில் ஒரு சட்டையையும், ஒரு காவி நிற அங்க வஸ்திரத்தோடு, கழற்றில் ஒரு துளசி மாலையையும் நெற்றியில் ஒரு நாமத்தையும்
அணிந்திருந்தான். அவன் பார்ப்பதற்கு எனக்கு ஒரு ஞானியைப் போல. தான் தெரிந்தான்..
என்னுடைய கொலுசொலியும் நான் சூடி இருந்த மல்லிகை
வாசனையும், அவன் கவனத்தை
என்னை நோக்கி திருப்பியது. அவன் யார் என்று என்னை பார்த்து கேட்கும் முன்னரே;
என் பெயர் துளசி. துளசியா? உள் பிரகாரத்தில் குழுக்கள் இருப்பார் அவரிடம்
போய் கேளுங்க என்று அவன் எனக்கு பதில் சொன்னான். என் பெயர் அது என்று சொல்லிவிட்டு,
நல்ல வாசிப்பு மெய்மறந்து கேட்டேன். உங்களுக்கு
வெளி ஊரா? உள்ளூர் காரர்கள்
யாரும் இப்படி என்னை பாராட்டியது கிடையாது அதுதான் கேட்டேன். என்று அவன் எனக்கு
சொல்லி முடித்தான். நான் என்னைப் பற்றி முழுமையாக அவனுக்கு அறிமுகம் செய்து
கொண்டேன். அவனும் என் அப்பாவை நன்கு தெரிந்து வைத்திருந்தான். என்னிடத்தில்
தொடர்ந்து பேசுவதற்கு அவனிடம் எதுவும் இல்லாதவனாய் நின்றான். நான் நிறையவே அவனிடம்
பேசிக் கொண்டிருந்தேன். ஓரிரு வார்த்தைகளில் மட்டுமே அவன் பதில்கள் இருந்தன. ஆனால்
நான் பேசுவது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் வாழ்ந்த சூழ்நிலை அவனை
கடவுள் கோயில் இசை இவற்றைத் தாண்டி எதைப்பற்றியும் அறிந்து கொள்ளாதவனாய்
வைத்திருந்தது என்பதை நான் புரிந்து கொண்டேன். அவன் கையைப் பிடித்து கோயிலுக்கு
வெளியே அவனை அழைத்து வந்தேன். நான் அவன் கையைப் பிடிப்பதை அவன் கூச்சமாகவே
உணர்ந்தான். நான் அவனை அவன் வீடு வரை அழைத்து சென்றேன். நான் வீடு திரும்புவதை
உணர்ந்தவன் நாளைக்கும் வருவீங்களா என்று கேட்டான். எனக்கும் தினமும் வரவேண்டும்
என்றுதான் தோன்றியது. நானும் தினமும் வந்து கொண்டே தான் இருந்தேன்.
எனக்கு தேர்வு இருந்த காரணத்தினால்;
ஒரு பத்து நாட்கள் அவனை சந்திப்பதை தவிர்த்து
இருந்தேன். நான் படிப்பதற்காக என் வயலையும் அந்த இயற்கை சார்ந்த சூழலையும் என்
குழந்தை பருவத்தில் இருந்தே பயன்படுத்திக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு மாலைப்
பொழுதிலும் அவன் வாசிக்கும் நாதஸ்வர இசை என் காதில் கேட்டுக் கொண்டே தான்
இருந்தது. தேர்வு முடிந்து ஒரு நாள் அவனை நான் சந்திக்கப் போனேன். அவனும் என்னை
பெரிய அளவில் தேடியதாக தெரியவில்லை. ஆனால் முன்பை விட அவன் என்னிடத்தில் தயக்கம்
இல்லாமல் பேசத் தொடங்கியிருந்தான். அவனிடம் படிப்பு வாசனை இல்லாமல் போயிருந்ததால்;
கவிதைகளாலும், தத்துவங்களாலும் அவனை
என்னால் வசிகரிக்க முடியவில்லை. என் உடலைக் காட்டியும் அவனை என் வசப்படுத்த
முடியாது. அவன் எனக்கு சிக்கல் உள்ள நூலாகவே இருந்தான். ஏற்கனவே எனக்கு களப்பணி
அனுபவம் இருந்ததால் அவன் மொழியிலேயே பேசி பல கேள்விகளை கேட்டுக் கொண்டே இருந்தேன்.
பெண்களைப் பற்றி காதலைப் பற்றி காமத்தை பற்றி. அவனோ! பாவம் புண்ணியம் கடவுள்
இவற்றால் தன் ஆசைகளுக்கு வேலி போட்டு இருந்தான். பாவம் கடவுள் அவனை எவ்வளவு
கெடுத்து வைத்திருக்கிறார்? ஆனால் அவன் என்னை
தவிர்த்து விட விரும்பவும் இல்லை, என் வருடல்களை
நிராகரிக்கவும் இல்லை. நிச்சயமாக அவனை என் ஆசைக்கு இணங்க வைத்து அவனை ஏமாற்ற
விரும்பவில்லை. அவனை என் வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு என் மனம்
விசாலமாய் இருந்தது.
வாய்ப்பு உள்ளவர்களுக்கு மட்டும் தாம்பத்தியம்
என்னவோ வசப்பட்டு விடுகிறது. இவனைப் போன்று இயலாமையில் இருக்கக்கூடிய ஆண் பெண்
இவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள்? உடல்
குறைபாடுகளையும் மனக்குறைபாடுகளையும் கொடுத்த கடவுள்; பாலியல் உணர்வுகளையும் படைக்காமல் இருந்திருக்கலாமே?
ஜோடிகளோடு உலா வரும் கடவுளர்கள், என்னைப் பொருத்தவரை குற்றவாளிகள் தான். இவர்களை
நிராகரிக்கும் இந்த சமூகமும் நிச்சயமாக அப்படித்தான். நான் எனது தற்சார்பு நிலையை
பெற்ற பிறகு; நான் என்
வாழ்க்கையை அவனுடன் பகிர்ந்து கொள்வதில் உறுதியாகவே இருந்தேன்.
நான் எனது முதுகலை படிப்பை முடித்துவிட்டு
ஆராய்ச்சி படிப்புக்காக என்னை தயார் படுத்திக் கொண்டிருந்தேன். எனக்கும் தலைவலி
அதிகமாகிக் கொண்டே போனது. எழுத்துக்கள் எல்லாம் மங்கியதாய் தெரிந்தது.
மருத்துவரிடம் கேட்டதற்கு அதிகம் வாசிப்பதால் தான் இந்த பிரச்சனை என்று சொன்னார்.
எனக்கும் அவர் சொன்னது சரியாகவே பட்டது. கொஞ்ச நாள் நான் வாசிப்பதை நிறுத்தி
இருந்தேன். ஆனாலும் என் பார்வை குறைந்து கொண்டு போவதை நான் உணர்ந்தேன்.
திருநெல்வேலியில் உள்ள அரவிந்த் கண் மருத்துவர்கள் தான் எனக்கு அந்த உண்மையை
சொன்னார்கள். என் விழித்திரை பலவீனமாகி கொண்டு போவதை. இதை சரி செய்வதற்கான
மருத்துவம் இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே இருப்பதையும் அவர்களே தான் சொன்னார்கள்..
நான் எவ்வளவு தான் படித்திருந்தாலும்; இந்த இழப்பை ஏற்றுக் கொள்ளும் பக்குவமோ; துணிச்சலோ எனக்கு இல்லை.. விதியது வலியது தானே? ஊர்க்காரர்களின் ஜாதகத்தை கணிக்க தெரிந்திருந்த
என் அப்பாவுக்கு;
பாவம் என் ஜாதகத்தை கணிக்க தெரியவில்லை.. எனக்கு
இருந்த கவலை எல்லாம்! அந்த நாதஸ்வர காரன் கோவிந்தனின் வாழ்க்கை என்ன ஆகும்?
நல்ல வேலை நான் அவனிடம் எந்த உறுதி மொழியும்
தந்திருக்கவில்லை. இந்த அளவு குறை பார்வையோடு நான் வாழ்ந்தால் போதும் என்று நான்
கடவுளை பிரார்த்தனை செய்யாத நாட்களே இல்லை. பிரார்த்தனைகள் என்றைக்கும் தோற்றுப்
போவதில்லை தானே? பிரார்த்தனைக்கு
பலன் கிடைத்தது. எல்லோருக்கும் பொதுவாக விடியும் அந்த காலைப்பொழுது; எனக்கு மட்டும் விடியவே இல்லை. என்ன செய்வது?
காலத்தால் மட்டுமே காயங்களுக்கு மருந்து போட
முடியும். என் மனம் துயரத்தில் இருக்கும் போதெல்லாம் அந்த குருவி காத்தான் ஓடையும்,
புத்தகங்களும் தான் எனக்கு ஆறுதல் சொல்லிக்
கொண்டிருந்தன. அந்த இயற்கையை தரிசிப்பதற்கு கூட வேறொருவர் துணை எனக்கு வேண்டும்.
வாழ்க்கையில் தனிமை எவ்வளவு கொடுமையானது தெரியுமா?
என்னுடைய கல்லூரி நண்பர்கள் எல்லாம் அவ்வப்போது
என்னை பார்க்க வந்து கொண்டே இருந்தார்கள்.. அவர்கள் தான் சொன்னார்கள், பல்கலைக்கழகத்தில் பார்வையற்றோர் தொடர்பான ஒரு
கருத்தரங்கம் நடப்பதை. நானும் அங்கே போய் இருந்தேன். பார்வையற்றோருக்கான உயர்
கல்வி வாய்ப்புகள், தொழில்நுட்ப வசதி
வேலை வாய்ப்பு பற்றி எல்லாம் அங்கு விரிவாக சொல்லப்பட்டது.
அவர்களின் வழியாகவே பார்வையற்றோருக்கான ஒரு
மறுவாழ்வு மையத்தின் வழிகாட்டுதலும் எனக்கு கிடைத்தது. அவை எனக்கு கொஞ்சம்
நம்பிக்கையை வரவழைத்திருந்தது. நான் தனியே நடப்பதிலும் தொழில்நுட்பத்தை கற்றுக்
கொள்வதிலும் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். என்னுடைய இந்த
முயற்சி, கடவுளைப் போல என்னை
கைவிட்டு விடவில்லை. நான் சமூக ஊடகத்தில் பயணிக்கும் அளவிற்கு தேர்ச்சி
பெற்றிருந்தேன். நான் என்னை பார்வையற்றோர் பயணிக்கும் சமூக குழுக்களில் எல்லாம்
இணைத்துக் கொண்டிருந்தேன். பார்வையற்ற என் நண்பர்களுக்கு எல்லாமே தெரிந்திருந்தது.
அரசியல் ஆராய்ச்சி பாலியல் வரை இன்னும் என்னென்னவோ. சட்டம் படித்து ஆட்சிப்
பணியில் இருக்கும் பெண்களும் அங்கே இருந்தார்கள். அதற்காக அவர்களை நான் வானம் வரை
உயர்த்த விரும்பவில்லை சராசரி மனிதர்கள் தான் அவர்களும். என் தங்கை ஒருமுறை சொன்ன
வார்த்தையை நான் தீர்க்கதரிசனமாக இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அக்கா கல்யாணம்
ஆகாமலே; அவ்வையாராக போரால் என்று
சொல்லத் தெரியாமல் காந்தாரி என்று சொன்னதை.. உண்மையிலேயே நான் கண்களை கட்டிக்
கொள்ளாத காந்தாரி தான் இப்போது.
எனக்கான திருதராஷ்டிரன், ஏதோ ஒரு பார்வையற்றோர் பயணிக்க கூடிய; சமூக ஊடகக் குழுக்களில்; தொலைநோக்குப் பார்வையோடு ஒரு அறிஞனாய் என்னை தேடிக்
கொண்டிருப்பான்.
முற்றும்
தொடர்புக்கு,
9442715777
No comments:
Post a Comment