எட்டாம் ஸ்வரம்
முனைவர். இரா. பெரியதுரை.
இந்த மனிதமானது, பொது
புத்தியிலும், ஒத்த
சிந்தனையிலும், கூட்டு
முயற்சியிலும் தான் வாழ பழக்கப்பட்டு இருக்கிறது. புரட்சிக்காரர்களையும் தனித்த
சிந்தனைகளை கொண்டவர்களையும்,
அங்கீகரிப்பதில்
இன்னும் தவறுகளை செய்து கொண்டே தான் இருக்கிறது. சிலுவை மரங்கள் தளிர்த்து கொண்டே
தான் இருக்கின்றன. புரட்சிப் பூக்களும் கூட எரியூட்டப்பட்டுக் கொண்டுதான்
இருக்கின்றன. ஆனாலும் புரட்சி பூக்கள் தடைகளை தாண்டி மலர்ந்து கொண்டே தான்
இருக்கின்றன.
அப்படி புரட்சியில்
பூத்த ஒரு மலரின் தேடல்தான் இந்தக் கதை. நீங்கள் இந்த கதையை வரம்பு மீறல், அவத்தம், அவசுரம், என்று கருதி
புறம் தள்ளினாலும்; நான் மீட்டும்
எட்டாம்சரத்தில் அமைந்த புதிய கீதை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.
சொர்க்கத்துக்கு
வழியையும், வயிற்றுக்கு
உணவையும் கொடுத்து, கடவுளின் பிழையை
நியாயப்படுத்திக் கொண்டிருப்பது தான் அந்த அன்பு இல்லம். தரையில் தவழ்ந்து கொண்டு
வானத்தைப் பார்ப்பவர்களையும், வானத்தைப் பார்க்க வாய்ப்பு இல்லாமல்; தரையில் கால்களை
உரசிக்கொண்டு கைகளை முன்னாள் நீட்டியபடி தடைகளைத் தொட்டு உணர்ந்து நடந்து
செல்பவர்களையும், இயற்கை மீட்டும்
ஏழு ஸ்வரங்களை கேட்க முடியாதவர்களையும், சிந்தனைகளை உதறித் தள்ளி தனித்து வாழ்பவர்களையும், பாதுகாத்தும்
பராமரித்தும் வரும் கடவுளின் பிள்ளைகளை நான் அந்த இல்லத்துக்கு செல்லும்போதெல்லாம்
வணங்கத் தவறியதே இல்லை.
காரணம் இவர்களின்
வாழ்வாதாரமாவது உறுதி செய்யப்படுகிறது என்பதுதான். அருள் சகோதரி ஜூலியட்
வெர்ஜினியா தான் அந்த அன்பு இல்லத்தின் தலைவி. வெண்ணிற ஆடையில் அவர்களின் முகம்
மலர்ந்த சிரிப்பு இருக்கிறதே பார்ப்பதற்கு ஆயிரம் மல்லிகை மலர்கள் ஒரே நேரத்தில்
மலர்ந்து சிரிப்பது போல இருக்கும். அவரவரின் குறைபாட்டின் தன்மைக்கு ஏற்ப தனித்தனி
இல்ல கட்டிடங்கள். அந்த இல்லங்களுக்கு நடுவில் இறைவனும் வந்து இளைப்பாறுவதற்கு ஒரு
அழகிய சிற்ற ஆலயமும் இருந்தது. பல நாட்கள் அந்த ஆலய வருகை பதிவேட்டில், அந்தக் கடவுளின்
வருகை பதிவு செய்யப்படாமல் இருந்திருக்கின்றது. அந்தக் கடவுள் வருகை தராத
நேரத்தில் இந்த உடல் மனக்குறைபாடுகளை கொண்டவர்களின் நேரம் என்பது துயரம் நிறைந்த
தருணங்களாகவே கழிந்திருக்கின்றன. நூற்றாண்டை கடந்த சில ஆல மரங்களும், தென்னை மரங்களும், மாமரங்களும், மலர் செடிகளும், எனது கண்களையும்
மனத்தையும் குளிர்விக்கும் வகையில் அமைந்திருந்தன. அந்த அன்பு இல்லத்தில் 40
வயதுகளை தாண்டிய ஆண் பெண் இருபாலருமே இருந்தனர். அவர்கள் எல்லோருமே; இந்த
சமூகத்தாலும் அவர்களின் குடும்பத்தாலும் நிராகரிக்கப்பட்டவர்களாகவே இருந்தனர்.
நான் எனது 25 வயது வரை இப்படி ஒரு சமூகம் இருப்பதை எப்படி கண்டுகொள்ளாமல் கடந்து
போய் இருக்கிறேன்? இதுவரை என்
போன்றவர்களுக்கு வாழ்க்கையின் மகிழ்ச்சியான பக்கங்களை படிப்பதற்கு மட்டுமே
வாய்ப்பு கிடைத்திருக்கிறது போலும். நான் அப்போது சமூகப் பணியில் முதுகலை இரண்டாம்
ஆண்டில் படித்துக் கொண்டிருந்தேன். சமூகப்
பணியில் இரண்டாம் ஆண்டு படிப்பவர்கள் ஒவ்வொருவருமே; ஒவ்வொரு சமூகத்தைப் பற்றியும் ஆய்வு செய்து
ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அடிப்படையில் தான் நான் இந்த அன்பு
இல்லத்தில் உள்ள இந்த சமூகத்தினரை ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்டிருந்தேன் என்
கல்லூரி நிர்வாகத்தினரால். தொடக்கத்தில் அந்த அன்பு இல்லத்தில் இருந்த
ஒவ்வொருவரின் செயல்பாடுகளும்; வினோதமாகவே தெரிந்தன எனக்கு. சிலரின் உருவங்களைப்
பார்க்கும்போது வேற்றுக்கிரகவாசிகளை போல எனக்குத் தெரிந்தார்கள். அருள் சகோதரி
ஜூலியட் எல்லோரைப் பற்றியும் என்னிடத்தில் சொன்னார்கள். அவர்களிடம் எப்படி நடந்து
கொள்ள வேண்டும் என்ற அறிவுரைகளும் எனக்கு வழங்கப்பட்டது. அந்த அன்பு இல்லத்தில்
சிலரின் இருப்பிடத்திற்கு நான் செல்வது தடை செய்யப்பட்டு இருந்தது. சில மனவளர்ச்சி
குன்றியவர்களிடம் நான் கவனமாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டு இருக்கவும்
செய்தேன்.. மனக்குறைபாடுகள் கொண்டவர்களை தவிர; மச்ச உடல் குறைபாடுகள் கொண்டவர்களை அணுகுவதில் எனக்கு எந்த
சிரமமும் இருக்கவில்லை.
ஆரம்பத்தில்
அனைத்து உடல் குறைபாடுகள் கொண்டவர்களை குறித்து நான் ஆய்வு செய்ய விரும்பினேன்.
அது நிறைய காலம் பிடிக்கும் என்பதால்; என் நெறியாளர் ஒரு பிரிவினரை மட்டுமே ஆய்வு செய்யச்
சொன்னார். அதன்படி பார்வையற்றோர் வாழ்வியலை நான் ஆய்வு செய்ய முடிவு செய்தேன்.
மற்ற உடல் குறைபாடுகள் கொண்டவர்கள் என்னை பார்க்கும் போதெல்லாம் சிரிப்பார்கள்
வணக்கம் வைக்கவும் செய்வார்கள். ஆனால் பார்வையற்றோருக்கு மட்டும் என்னை
அங்கீகரிக்க என் குரல் தேவைப்பட்டிருந்தது. காலப்போக்கில் அதுவும் அவர்களுக்கு
தேவைப்படவில்லை. என் கொலுசொளியை கேட்டும், என் வாசனை திரவியத்தை நுகர்ந்தும், நான் தூரத்தில்
வரும் போதே; என் பெயரை சரியாக
சொல்லிவிடுவார்கள். மூன்று மாதங்களில் அந்த எளிய மனிதர்களின் வாழ்வியல் அனுபவங்கள்
என்னை வெகுவாக யோசிக்க வைத்திருந்தது. அவர்களிடம் ஆழமான இறை நம்பிக்கை இருந்தது, கண்ணீர் கலந்த
கதைகளையும் அவர்கள் சொல்லத்தான் செய்தார்கள். பலர் எல்லா வேலைகளையும்
நேர்த்தியாகவே செய்திருந்தார்கள். சிலருக்கோ தமது சொந்த வேலையை செய்வதற்கு கூட
மற்றவர்களின் உதவி தேவைப்பட்டிருந்தது. அப்படி ஒரு பெரிய வரை அந்த
விடுதிக்காப்பாளர், முகத்தை சரியாய்
கழுவச் சொல்லி அடித்தே விட்டார். அவர் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் என்னை நிலை
குலைய வைத்து விட்டது. எந்த மறுப்பும் சொல்லத் தெரியாத அவரின் நிலை மறு
கன்னத்தையும் காட்டும் பார்வையற்ற ஒரு இயேசுவைப்போல தெரிந்தது எனக்கு.
அங்கே இருந்த
பார்வையற்ற அக்காக்களுக்கும் நேர்த்தியாக சேலை கட்ட தெரிந்திருந்தது. தம்மை சரிவர
பராமரித்து கொள்ளத் தெரியாதவர்களுக்கும் கூட; சில அக்காக்களும் அவர்களுக்கு உதவி செய்து கொண்டு
இருந்தார்கள். சிலர் மாறுபட்ட திறமைகளையும் பெற்றிருந்தார்கள். சிலர் பல குரலில்
பேசினார்கள், என்னைப் போலவே
கூட வேணி அக்கா பேசி காட்டினார்கள். விலங்குகள்
பறவைகள் போலவும் சிலருக்கு ஒலி எழுப்ப தெரிந்து இருந்தது. அந்த இல்லத்தை
பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும், நன்கொடையாளர்களுக்கும், இவர்கள் அதிசய பிறவிகளாகவும், காட்சிப் பொருட்களாகவும் காண்பிக்கப்பட்டனர்.
சிலர் பல குரலில் பேசி காட்ட நிர்பந்திக்கப்பட்டனர். அவர்களிடம் கேள்வி
கேட்பதற்காக எனக்கு ஒரு வினா பட்டியலும் தரப்பட்டிருந்தது. அந்த வினா பட்டியலில்
நிறைய கேள்விகள் இருந்தன அவர்களிடம் கேட்பதற்காக. நிர்வாகத்துக்கு எதிராக
எல்லோருமே பேச பயந்தனர். இல்லத்தை விட்டு வெளியே அனுப்பி விடக்கூடாது என்ற
பயத்திலேயே அவர்கள் காலம் கழித்தனர். வேதாகம வசனங்களும், ஜெப
குறிப்புகளும், கிறிஸ்தவ
பாடல்களும், அவர்களின்
இதயங்களை நிரப்பு இருந்தன. இதை அவர்கள் விரும்பி செய்கிறார்களோ? இல்லை விருப்பம்
இல்லாமல் செய்கிறார்களோ? அந்த ஆண்டவனுக்கே
வெளிச்சம். இவை போன்ற நிறுவனங்கள் இல்லை என்றால் இவர்களுடைய வாழ்க்கை என்ன ஆகும்? அங்கே இருந்த
எல்லோருமே என் நெஞ்சுக்கு நெருக்கமானவர்களாகவே இருந்தனர். ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும், ஏமாற்றங்களும்
அவர்களின் பதில்களில் இருந்து வெளிப்பட தான் செய்தன. அவர்கள் எல்லோருமே வெளியே
சிரித்து கொண்டிருந்தனர். உள்ளே? சித்தரிக்கிடந்தனர். அவர்கள் தங்களின் வாழ்வாதாரம் எந்த
இடையூறுகளும் இல்லாமல் செல்வதற்காகவே; தங்களின் ஆசைகளையும், நியாயமான உணர்வுகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு, தேவதைகளைப்
போலவும், தேவ தூதர்களைப்
போலவும் எனக்குத் தெரிந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும், அண்ணன்மார்
அக்காமார் என்றுதான் அழைத்துக் கொண்டார்கள். இதுவும் கூட அவர்களின் உணர்வுகளின்
பரிமாற்றத்திற்கு, இடையில்
போடப்பட்ட வேலியாக கூட இருக்கலாம்.
" "
கணபதி அண்ணாச்சிக்கு மட்டும்தான் அந்த இல்லத்தில் உள்ள எல்லா இடங்களுக்கும் தனியே
போக தெரிந்திருந்தது. அந்த அன்பு இல்லத்தின் நுழைவாயில் தான் அவருடைய இருப்பிடம்.
இல்ல வாசிகளை அவ்வப்போது குடும்பத்தில் இருந்து யாராவது பார்க்க வருவதும் உண்டு.
அப்படி யாரையாவது பார்க்க வருபவர்களிடம் சம்பந்தப்பட்ட வரை கொண்டு வந்து அவர்கள்
நேர் நிறுத்தி விடுவார். ஆனால் அவரை இதுவரை யாரும் பார்க்க வந்ததே கிடையாது. நான்
என்னுடைய களப்பணியை முடித்துப் போகையில், வளர்மதி பாப்பா; நீயாவது என்னைய மாசத்துல ஒரு முறை பார்க்க வருவியா? அப்படி கேட்ட
அவரின் வார்த்தைகளில் நிராதரவு வெளிப்பட்டது.. அந்த அன்பு இல்லத்தில் உள்ள எல்லா
உடல் குறைபாடுகள் கொண்டவர்களையும் குறித்த எல்லா விவரங்களையும் அவர் நன்கு
தெரிந்து வைத்திருந்தார். அதே வேளையில் அவர் ஞானமாகவும் நிதானமாகவும் பேசினார்.
அந்த இல்லத்தில் உள்ள சிலருக்கு அடிக்கடி வலிப்பு வந்து கொண்டே இருக்கும். அப்படி
அவர்களுக்கு வெட்டு வரும் நேரங்களில் எல்லாம். அவர்களுக்கு உதவியாகவே கணபதி
அண்ணாச்சி இருந்திருக்கிறார்.. அவர் 18 ஆண்டுகளாக இந்த இல்லத்திலேயே
தங்கியிருக்கிறார். தனது 20 வயதிலேயே அவர் இங்கே வந்ததாக என்னிடத்தில் சொன்னார்.
சென்ற மாதத்தில் அவருக்கு 38 வது பிறந்தநாள் அந்த இல்லத்தில் கொண்டாடப்பட்டது
எளிமையாக. அவர் பிறந்த நாளுக்காக என்னிடத்தில், ஒரு நான்கு முழ வேட்டியையும், ஒரு முழுக்கை சட்டையையும் கேட்டிருந்தார்.
நானும் அதை அவருக்கு மகிழ்ச்சியாகவே வாங்கி கொடுத்தேன்.. சட்டையின் நிறத்தை
மட்டும் அவர் என்னிடத்தில் கேட்டு தெரிந்து வைத்திருந்தார்.. ஆனால் இதை அவர்
யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கண்டிப்பாக என்னிடத்தில் சொல்லியிருந்தார். நான்
அருள் சகோதரி ஜூலியட்டை தவிர வேறு யாரிடமும் சொல்லவில்லை. கணபதி அண்ணாச்சி அந்த
இல்லங்களில் உள்ள நிர்வாக மாற்றத்தையும், நிறைய பேருடைய மரணங்களையும், மற்றவர்கள் படும் துயரங்களையும், சில கிசுகிசு
செய்திகளையும் அவர் என்னிடத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த கிசுகிசு செய்திகளை
சொல்லும்போது மட்டும் அவர் முகத்தில் வரும் வெட்கத்தையும் அவர் உடலில் ஏற்படும்
கூச்சத்தையும் பார்க்க வேண்டுமே அப்பப்பா, பெண் தோற்றுவிடுவாள் அப்படி இருக்கும். அவர் ஒருமுறை
என்னிடத்தில் கேட்டார்; நீதான் நல்ல
வளர்ந்து இருக்கிறாயே; உனக்கு யார்
வளர்மதி என்று பெயர் வைத்தது? அவர் இப்படி கேட்டது எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. நான்
வளர்ந்திருப்பது உங்களுக்கு எப்படி தெரியும் என்று கேட்டேன். என் உயரத்தை விட
சற்று உயரத்திலிருந்து உன் குரல் கேட்கிறதே அதை வைத்து சொன்னேன் என்றார்..
புரிதலின்
அடிப்படையிலான திறன்களை வளர்த்துக் கொண்டிருந்தால்தான்; இயற்கையையும், தடைகளையும், மனிதர்களையும், பார்வையற்றோரால்
எதிர்கொள்ள முடியும் என்பதை,
அவரின் இந்த
வார்த்தைகளின் மூலம் நான் தெரிந்து கொண்டேன். இத்தகைய மதிநுட்பங்கள் சில
நேரங்களில் பார்வையற்றவரை ஏமாற்றி விடுவதும் உண்டு அதையும் நான் நேரில்
பார்த்திருக்கிறேன்.. ஒரு நாள் அந்த மேசையில் வைத்து நான் எழுதிக் கொண்டிருந்தேன்.
அங்கே வந்த கணபதி அண்ணாச்சி கையில் வைத்திருந்த அவர் பெட்டி சாவியை அந்த மேசையின்
ஒரு பகுதியில் வைத்திருக்கிறார். அதை நான் கவனித்து இருக்கவில்லை. அங்கிருந்து
அவர் கிளம்பும்போது அவரின் பெட்டி சாவியை சட்டை பையில் தேடிப் பார்த்தார். சாவிப்
பையில் இல்லாததால்; மேசையில் வைத்தது
அவர் நினைவுக்கு வந்திருக்கிறது. மேசையின் எல்லா இடத்தையும் துலாவி பார்த்தார்.
அவர் சாவி வைத்த இடத்தை தவிர. நான் அவர் மேசையை தொட்டுப் பார்த்துக்
கொண்டிருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன். மேசையை இரண்டு தட்டுகள் தட்டினார்.
சாவி அதிர்வதைக் கேட்டு சரியாக எடுத்துக் கொண்டார். எல்லோருக்கும் இருக்கும்
இயல்பான மறதியும் கூட; பார்வையற்றோருக்கு
இருப்பது, எவ்வளவு சிரமத்தை
கொடுத்து விடுகிறது? அவர்களுக்கு.
பார்வையற்றோர் தடையில்லாமல் இயங்குவதற்கு நினைவாற்றல் எவ்வளவு முக்கியம்? என்பதை அந்த
சம்பவத்தின் மூலம் நான் தெரிந்து கொண்டேன்..
கணபதி அண்ணாச்சி
திறந்த மனதோடு எல்லாவற்றையும் என்னிடத்தில் பேசியதாலும்; பார்வையற்றோரின்
வாழ்வியல் நிகழ்வுகளை ஓரளவு புரிந்து வைத்திருந்ததாலும், அங்கு
இருந்தவர்களில் கணபதி அண்ணாச்சியையே நான் சிறந்த
தகவலாளியாக கருதினேன்.. அவரின் அந்தரங்கம் முதல் எல்லாவித கேள்விகளையும்
என்னால் அவரிடம் கேட்க முடிந்தது. நான் மனதாலும், உடலாலும், எந்தவித கூச்சமும் இல்லாமல் பழகினேன் அவரிடத்தில். அவருக்கு
பாலியல் தேவைகள் நிறையவே இருந்தன. அதே நேரத்தில்; அவரின் ஏழ்மையும், இயலாமையும், வாழ்க்கையை
குறித்த பயமும், அவரின் நியாயமான
பாலியல் தேவைகளை நீர்த்துப்போக செய்திருந்தன. தேவைகளை சமமாக பங்கிட்டு கொடுத்தால்
தானே அவர் கடவுள்? உணர்வுகளை
படைத்து, உரிமைகளை
பறிப்பவன் எப்படி கடவுளாக இருக்க முடியும்? பாலியல் உணர்வுகளை தூண்டும் சோதனைகளை எதிர்கொள்வது, என்பது எவ்வளவு
கொடுமையானது? மனிதன் தனிமையாய்
இருப்பது நல்லதல்ல; என்பதை உணர்ந்த
கடவுள் அவனுக்கு ஏவாளை துணையாக கொடுத்தார். சக்தியை சிவனோடு இணைத்தார். இப்படி
இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லாமே ஜோடி ஜோடியாக இருக்கும்போது; கணபதி அன்னாச்சி
போன்ற எளியவர்களை மட்டும் தகுதியற்றவர்கள் ஆக்கி ஏன் தள்ளி வைக்க வேண்டும்?. ஆடுகள் இணை
சேரும் போது எழுப்பும் உணர்ச்சியின் முனகல் பல நேரங்களில் கணபதி அண்ணாச்சியை
சோதனைக்கு உட்படுத்தி இருக்கிறது. இப்படி பறவைகளும் விலங்குகளும் எழுப்பும் மோகக்
குரலை கேட்பதற்கு அவர்களுக்கு காதுகள் இருக்கின்றனவே? வாய்ப்பு
உள்ளவர்களும், வலிமை
படைத்தவர்களும், மட்டும் தான்; இந்தப்
பிரபஞ்சத்தை சுகிக்க முடியுமா?
இத்தகைய
கேள்விகளுக்கு ஆன்மீகமும்,
தத்துவங்களும், மழுப்பலான
பதில்களையே வைத்திருக்கின்றன. அப்பாவி பெண்களின் நிலைமையை என்னவென்று சொல்வது? இந்த அவலைகளின்
பலவீனத்தை பயன்படுத்தி தான் அவர்களின் கற்பு கயவர்களால் சூறையாடப்படுகிறது..
ஆய்வறிக்கையை
குறித்த நேரத்தில் முடிக்க வேண்டிய நான்; குழம்பித்தான் போயிருந்தேன். நான் தீர்க்கமாய் ஒரு முடிவு
செய்தேன். கணபதி அண்ணாச்சி இடம் என்னை முழுமையாய் கையளிப்பது என்று. அவர் என்னை
என்ன செய்கிறாரோ செய்துவிட்டு போகட்டும். திருமணத்துக்கு முன்னால் சேர்ந்து
வாழ்வதை அனுமதிக்க கூடிய இந்த அநாகரீக சமூகம், நாங்கள் இணை சேருவதை அங்கீகரிக்காமல் போகலாம். அதைப் பற்றி
எனக்கு கவலை இல்லை. நான் ஒளிந்து வாழ விரும்பவில்லை.. நான் மிகவும்
பரிசுத்தமானவள். கணபதி அண்ணாச்சியை பொறுத்தவரை அவர் உயிரோடு இருக்கும் வரை இந்த
பாலியல் ஆசை நிறைவேறாமலே போகக் கூடும். பாவம் கணபதி நிறைவேறாத ஆசையோடு மரணிக்கக்
கூடாது.. இதனால் எனக்கு என்ன தீமை ஏற்பட்டு விடப் போகிறது?
உங்களின்
அனுமானங்கள் மட்டுமல்ல நான்.
அதற்கும் கீழாகவோ; இல்லை,
அதற்கும் சற்று
மேலாகவோ கூட இருக்கலாம். ஏனென்றால்! நீங்கள் அளக்கும் அளவுகோல் அல்ல; நான்.
என் பெயர் வளர்மதி.
அன்று மதியம் என்
வீட்டில் உள்ளவர்களுக்கு கணவதியை அறிமுகம் செய்ய வேண்டும் என்று, அருள் சகோதரி
ஜூலியற்றிடம் அனுமதி பெற்றுக்கொண்டு கணபதியை என் வீட்டுக்கு அழைத்து வந்தேன். என்
வீட்டில் நிச்சயமாக அந்த நேரத்தில் யாரும் இல்லை தான்.
அவனுக்கு என்
உடலும், மனமும், எட்டாம்
சுரத்தில் மோகனம்பாடி முழு சம்மதத்தை தெரிவித்திருந்தது..
அன்று மாலை வானம்
மேகங்கள் அற்று, வானம் மிகத்
தெளிவாக தெரிந்தது எனக்கு.
அவன் மனமும் அதே
தெளிவை பெற்று இருக்கும். இனிமேல் இயற்கை எந்த ஒலியையும் எழுப்பி விட்டுப்
போகட்டும்..
முற்றும்.
தொடர்புக்கு,
9442715777
No comments:
Post a Comment