(அந்தகக்கவிப் பேரவையின் எட்டாவது கூட்டத்தில் (16/04/2017) படிக்கப்பட்டது)
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
பாடல்களில் வாழ்வியல் சிந்தனைகள்
முன்னுரை
மக்கள் கவிஞர் என்று தமிழறிந்த அனைவராலும் போற்றப்படுகின்ற தகுதியும், அருங்குணங்களும் நிரம்பப் செய்தவர் கல்யாணசுந்தரம் அவர்கள்.
ஓரிரு சொற்களில், சொற்றொடர்களில் மிகப்பெரிய
உண்மைகளை, போதனைகளை அனைவர் மனதிலும்
ஆழப்பதியும் வண்ணம் இக்கவிஞரின் திரை இசைப்பாடல்கள் அமைந்துள்ளன. இசையோடு கேட்டு
மகிழ்வதற்கும் ஆழ்ந்து படித்து உணரும் வகையில் இவருடைய பாடல்கள் அமைந்துள்ளன.
வெல்லப்பிள்ளையாரில் எல்லாப்பகுதியுமே இனிப்பு என்பது போல் மக்கள் கவிஞர்
கல்யாணசுந்தரம் அவர்களின் அனைத்துப் பாடல்களுமே ஆழ்ந்த கருத்துகளையும் மிகுந்த
எழுச்சியையும் கொண்டவையாக உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கப்படுத்தான் காடு
என்ற கிராமத்தில் அருணாசலம்பிள்ளை, விசாலாட்சியம்மாள் தம்பதியருக்கு 1930, ஏப்ரல் 13ஆம் நாள் நான்காவது செல்வமாகப் பிறந்தவர்.
கவிஞர் திரையுலகில் ஐந்து
ஆண்டுகளே எழுதியிருப்பினும் மொத்தமாக 208 பாடல்களைப் பாடியவர். தந்தைபெரியாரின் பகுத்தறிவுக்
கொள்கைகளும், பொதுவுடைமைக் கருத்துகளிலும் கவனம் செலுத்தியவர், தன் குருவாகப் பாரதிதாசனை ஏற்றுக்கொண்டவர்.
விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சூழலில் மக்கள் நலனையே பெரிதும் போற்றிப்
பாடல்கள் எழுதியமையால் மக்கள் கவிஞர் என்றழைக்கப்பட்டார்.
திரையுலகில் புகழ்
பெற்றிருந்த எம்.ஜி.ஆர், சிவாஜி
கணேசன், ஜெமினி கணேசன்,
எஸ்.எஸ்.ராஜேந்திரன் போன்ற
நடிகர்களின் திரைப்படங்களில் இவருடைய பாடல்கள் இடம்பெற்று மக்களின் நெஞ்சங்களில்
நிலையான இடத்தைப் பெற்றது. கவிஞரின் சிந்தனைகள் வாழ்வியலை அடிப்படையகக் கொண்டிருப்பதனை
இக்கட்டுரை விரித்துரைக்கிறது.
அறிவுரை
சிறு குழந்தைகளைப்
பிறவிலேயே துணிச்சலோடு வளர்க்க வேண்டும்; சிந்திக்கும் திறனையும் வளர்க்கவேண்டும். தன்மான
மிக்கவர்களாய் வாழவேண்டும் என்ற அறிவுரையைக் குழந்தையிலேயே வெளிப்படுத்த விழைகிறார்.
சின்னப்பயலே சின்னப்பயலே
சேதிகேளடா நான்
சொல்லப்போகும் வார்த்தையை
நல்லா எண்ணிப்பாரடா!
என்று தொடங்கி தன்மான
உணர்ச்சியுடைய மானமுள்ள தமிழனாக, மறத்தமிழனாக
விளங்க வேண்டுமென்கிறார். இதனை,
“மனிதனாக வாழ்ந்திட வேணும்
மனதில் வையடா
(நீ மனதில் வையடா )
வளர்ந்து வரும்
உலகத்துக்கே நீ வலதுகையடா
(நீ வலது கையடா )
தனியுடைமைக் கொடுமைகள் தீர
தொண்டு செய்யடா
(நீ தொண்டு செய்யடா )
தானா எல்லாம் மாறும்
என்பது பழைய பொய்யடா
எல்லாம் பழையபொய்யடா"
என்று தனியுடைமை நீங்கி
பொதுவுடைமைச் சிந்தனை பரவ
வேண்டும் என்பதனை வலியுறுத்துகிறார்.
பொதுவுடைமை நாட்டம்
கொண்டது போல் பகுத்தறிவுச் சிந்தனையையும் தன்னுடைய ஒருபாடலிலேயே குறிப்பிடுகிறார்.
“'வேப்பமரம்
உச்சியில் நின்னு பேயெண்ணு ஆடுதுன்னு
விளையாடப்போகும் போது
சொல்லி வைப்பாங்க - உந்தன்
வீரத்தை முளையிலேயே கிள்ளி
வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின்
மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக்கூட
நம்பிவிடாதே - நீ
வீட்டுக்குள்ளே பயந்து
கிடந்து வெம்பிவிடாதே” –
பகுத்தறிவுத் தாக்கத்தினால்
வீர மிக்க தமிழனம், தமிழ் இன இளைஞர்கள் சோர்ந்து
விடக்கூடாது என்பதனை"
வேலையற்ற வீணர்கள் என்ற செற்றொடரால் பகுத்தறிவுச் சிந்தனை வளர்ச்சிக்குப்
பாதையமைக்கிறார். அரசிளங்குமரியில் இடம் பெற்ற இப்பாடல் 1961ஆம் ஆண்டு
திரைப்படத்தில் இடம் பெற்றாலும் இன்றளவும் மக்கள் மனதில் இடம் பெற்றிருப்பது
மக்கள் கவிஞரின் பகுத்தறிவுச் சிந்தனையால் விளைந்த அறவுரையும் அறிவுரையுமாகும்.
குற்றம் நீக்குதல்
எதனையும் ஈர்க்கும் பருவம்
இளமைப்பருவம். இப்பருவத்தில் நல்ல கருத்துகளைப் பதியமிட்டால் அது மனிதன் வாழ்வில்
உயரே உயரே சென்றாலும் குற்றம் செய்வதிலிருந்து விலகிச் செல்ல வழியமைக்கும்.
திருடாதே பாப்பா திருடாதே
வறுமை நிலைக்குப் பயந்து
விடாதே
திறமை இருக்குது மறந்து
விடாதே
சிந்தித்துப்பார்த்து
செய்கையை மாத்து
சிறிசாயிருக்கையில்
திருத்திக்கோ - தவறு
சிறிசாயிருக்கையில்
திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியம
நடந்திருந்தா - அது
திரும்பவும் வராமல்
பார்த்துக்கோ –
அடுத்தவர் பொருள்மீது ஆசை
கொள்வது பாவம். வறுமை நிலையை நீக்கிக் கொள்ளவே அடுத்தவர் பொருள்மீது ஆசைப்படுதல்
கூடாது; தவறுகள்
செய்யலாம் சந்தர்ப்பச் சூழலால் அது தவறு என்றால் உடனே திருத்திக்கொள்வதே அறிவுடைமை
என 1961 ஆம் ஆண்டு வெளிவந்த திருடாதே என்ற திரைப்படத்தின் பாடல் வழியே மக்கள் கவிஞர்
குறிப்பிடுகிறார்.
“பொய்
சொல்லக் கூடாது பாப்பா என்றும்
புறஞ் சொல்லல் ஆகாது
பாப்பா" என்ற பாரதியின் பாடலையும், 'மெய் சொல்லல் நல்லதப்பா“ என்ற புரட்சிக்கவிஞரின்
பாடலையும் உள்கட்டமைப்பாகவும் பட்டுக் கோட்டையார் பாடல் கொண்டுள்ளது.
முயற்சியே ஆக்கம்
ஆக்கமானது ஊக்கமுடையவனின்
வீடு நோக்கிச் செல்லும். இதனையே கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிரித்துக் கொண்டு
கொட்டும் என்ற பழமொழியும் தெளிவுறுத்துகிறது. முயற்சியே வெற்றிக்கு வழியமைக்கும் .
வெற்றியென்பது எளிதில் கிடைத்துவிடும் கடைச்சரக்கல்ல. உழைப்பே அதற்கு மூலதனமாகும்
என்பதனை துங்காதே தம்பி தூங்காதே என்ற பாடல் வழியே காட்டுகின்றார்.
“தூங்காதே
தம்பி தூங்காதே - நீயும்
சோம்பேறி என்ற பெயர்
வாங்காதே" என்று தம்பிகளுக்கு அறிவுரை வழங்கியவர், தூங்குவதால், சோம்பல்
கொண்டு திரிவதால் எத்தகைய இடர்ப்பாடுகளை அடைவர் என்பதனையும் குறிப்பிடுகிறார்.
“நல்ல
பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள்
நாட்டைக் கெடுத்ததுடன்
தானும் கெட்டார் - சிலர்
அல்லும் பகலும்
தெருக்கல்லாய் இருந்துவிட்டு
அதிஷ்டம் இல்லையென்று
அலட்டிக் கொண்டார்" என்கிறார்.
வெற்றியடைய வேண்டுமெனில்
உழைப்பு வேண்டுமென்கிறார். இதனை,
போர்ப்படைதனில் தூங்கியவன்
வெற்றியிழந்தான்
பள்ளியில் தூங்கியவன்
கல்வியிழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல்
இழந்தான் - கொண்ட
கடமையில் தூங்கியவன் புகழ்
இழந்தான் - இன்னும்
பொறுப்புள்ள மனிதனின்
தூக்கத்தினால் பல
பொன்னான வேலையெல்லாம்
தூங்குதப்பா” என்று 1958 ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடி மன்னனில் இவருடைய பாடல் இடம் பெற்று
தமிழகப்பட்டிதொட்டியெல்லாம் எதிரொலித்து மக்கள் கவிஞர் என்ற பட்டத்தைக் கொடுத்தது.
விவசாயம் தழைத்திடல்
இந்தியாவில் எண்பது
சதவீதம் பேர் கிராமங்களில் தான் வாழ்கிறார்கள். அவர்கள் விவசாயமாகிய
பயிர்த்தொழிலையே நம்பி இருக்கிறார்கள். விவசாய நிலங்களில் தன்னுடைய இரத்ததை
வியர்வையாக்கி பயிர் செய்பவர்கள தொழிலாளர்கள். அவர்களுக்கு ஊதியமாகக்
கொடுக்கப்படுவது சிறுதொகை. அவர்களின் முழு உழைப்பும் உண்டு கொழுத்திடும்
செல்வந்தர்களிடமே சேர்வது கண்டு மனம் கொதிக்கின்ற நிலையை நாடேடி மன்னன்
திரைப்படத்திலேயே ஆண், பெண்கூற்றாக
அமைத்துப் பாடலமைக்கிறார்.
விவசாயியின் செயல்,
“சும்மா
கிடந்த நெலத்தைக் கொத்தி
சோம்பலில்லாமே ஏர்நடத்தி
கம்மாக்கரையை
ஒசத்திக்கட்டி
சம்பாப்பயிரை பறிச்சு
நட்டு
தகுந்த முறையில்
தண்ணீர்விட்டு
நெல்லுவெளைஞ்சிருக்கு
வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு“
–
உழவர்களின் செயல்பாடு இவ்வகையில்
உள்ள நிலையில் விளைச்சல் பெருகுகிறது. இதனைக் கண்ட பெண் எவ்வளவு விளைந்தும்
நமக்குப் பயனில்லை என்கிறார்.
“காடுவெளைஞ்சென்ன
மச்சான் -நமக்கு
கையும் காலும்தான் மிச்சம்
என்கிறார்"
காரணம் உழைப்பு முழுதும் செல்வந்தரால்
உறிஞ்சப்படுவதுதான் என்ற அவலநிலையைக் கவிஞர் எடுத்துரைக்கிறார்.
பெண்ணின் உள்ளத்தைப்
புரிந்த ஆண்மகன் நம் உழைப்பு வீணாகாது, என்றாவது ஒருநாள் நமது எண்ணம் நிறைவேறும் என்கிறார்.
“மண்ணைப்
பொளந்து சொரங்கம் வச்சி
பொன்னை எடுக்க கனிகள்
செட்டி
மதிலு வெச்சு மாளிகை கட்டி
கடலில் மூழ்கி
முத்தையெடுக்கும்
வழிகாட்டி மரமான தொழிலாளர்
வாழ்க்கையிலே
பட்டதுயரிது மாறும் -
ரொம்ப
கிட்டநெருங்குது நேரம்“
என்கிற வகையில் ஆணின்
பாடல் அமைகிறது. பசியின் கொடுமை எத்தகையது என்பதனையும் அடுத்தப் பாடலில்
சுட்டிக்காட்டுகின்றார்.
“வாழை
செழிக்குது சோலை தழைக்குது
ஏழைகளுக்கதில் என்ன
கிடைக்குது
கூழைக்குடிக்குது
நாளைக்கழிக்குது
ஓலைக் குடிசையில்
ஒண்டிக்கிடக்குது"
என்று ஏழைகளின் வறுமைநிலையையும்
எடுத்துரைப்பவர், இதற்கெல்லாம்
விரைவில் விடைகிடைக்கும் என்னும் வகையில்,
“நானே போடப்
போறேன் சட்டம்
பொதுவில் நன்மை
புரிந்திடும் திட்டம்
நாடு நலம்பெறும் திட்டம்“
என்னும் வகுத்துக்
காட்டுகிறார்
உலகைத்திருத்துதல்
கள்ளம்,
கபடு,
திருட்டு,
புரட்டுகள் நிறைந்த
இவ்வுலகம் திருந்திட வேண்டும் மென்றே கனவைக் கவிஞர் காணுகிறார்.
“குறுக்குவழியில்
வாழ்வுதேடிடும்
குருட்டுஉலகமடா -இது
கொள்ளையடிப்பதில்
வல்லமைகாட்டும்
திருட்டு உலகமடா -தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா -
இதயம்
திருந்த மருந்து சொல்லடா
இருக்கும் அறிவை மடமை
மூடிய
இருட்டு உலகமடா - வாழ்வின்
ஏந்த நேரமும் சண்டை ஓயாத
முரட்டு உலகமாடா - தம்பி
தெரிந்து நடந்து கொள்ளடா“
என்று வாழும் வழிக்கு ஏற்ற
வழி எது என்று எடுத்துரைக்கிறார்.
மனித வாழ்க்கை
மனித வாழ்க்கை நிலையற்றது.
நிலையானது என எண்ணும் நெஞ்சம் திருந்திட தங்கப்பதுமை படத்தில் தத்துவக் கருத்துகளை
உள்ளடக்கி மனிதன் மனிதனாக வாழ வழி வகை காணுகிறார்.
“மனிதன் ஆரம்பமாவது
பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது
மண்ணுக்குள்ளே
ஆராய்ந்துபார்
மனக்கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே
நெஞ்சுக்குள்ளே"
ஆத்திரம் அறிவை
மட்டுப்படுத்தி
சீரழிக்கும் என்ற
வாழ்வியல் உண்மையை விளக்குகிறார்.
வெட்டிப்பேச்சு தவிர்த்தல்
வெறும் வார்த்தைகள்
மட்டும் சோறு போடாது. வீண்பேச்சு தவிர்த்தல் வேண்டும். இதனை 1958ல் வெளிவந்த
பதிபக்கதி பாடல் வழியே பொதுவுடைமைச் சிந்தனையை வளர்த்து தனிமனிதன் மேம்பட
வழியமைக்கிறார்.
“இந்த...
திண்ணைப்பேச்சு வீரரிடம் -
ஒரு
கண்ணாயிருக்கணும்
அண்ணாச்சி - நம்ம
ஒண்ணாயிருக்கணும்
அண்ணாச்சி
எந்நாளும் உலகில்
ஏமாற்றும் வழிகள்
இல்லாத நன்னாளை
உண்டாக்கணும்" என்கிறார்.
நிலையற்ற வாழ்க்கை
இவ்வுலகம் நிலையற்றது.
நிலையானது என்று இருமாப்புடன் வாழ்வது
வீண்மடமை என்பதனை கற்புக்கரசி
(1957) யில் வெளிப்படுத்துகிறார்.
“காயமே யிதுபொய்யடா -
இதில்
கண்ணும் கருத்தும் வையடா
நோயும் நொடியும்
வராமல்காத்து
நுட்பமாக உய்யடா!
ஆயுள் காலம் மனிதருக்கு
அமைப்பிலே ஒரு நூறடா!
அரையும் குறையும் போகாதவன்
அறிவும் செயலும்
ஆமடா" என்கிறார்.
படிப்பின் அவசியம்
உலக இன்பதுன்பங்கள்
ஆராய்ந்து செயல்பட அடிப்படையமைப்பது படிப்பாகும் என்பதனை 1960 ஆண்டு வெளியான
சங்கிலித் தேவன் திரைப்படப்பாடல் சுட்டிக் காட்டுகிறது.
“படிப்புத்
தேவை அதோடு உழைப்பும் தேவை - முன்னேற
படிப்புத்தேவை அதோடு
உழைப்பும் தேவை
உண்மைதெரியும் உலகம்
தெரியும் படிப்பாலே - நம்
உடலும் வளரும் தொழிலும்
வளரும் உழைப்பாலே"
என்று கல்வி ஒருவனை
அனைத்து நிலையிலும் உயர்த்தும் என்பதனை வலியுறுத்துகிறார்.
நீதியின் குரல்
சாதிகள் சமுதாயத்தில்
நீக்கப்பட வேண்டிய ஒன்று. சமுதாய வாழ்க்கையை, கூட்டு வாழ்க்கையும் சீர்குலைப்பது. எனவே,
சாதியொழிய
வேண்டும்மென்கிறார்.
இதனை 1959ஆம் ஆண்ட
வெளிவந்த புதுமைப் பெண் படப்பாடல் மூலம் வழிக்காட்டுகிறார்.
“நீதியின்
வெற்றியடா சேரியின் வெற்றி - அதை
நிரந்தரமாக்குது பார் பொது
ஜனசக்தி
ஜாதிகள் பேசி நம்மை தள்ளி
வச்சி வாழ்ந்தவங்க
சாக்கடைப் பூச்சிகளாய்
ஏழைகளை நினைச்சாங்க
தனக்கே ஊர்முழுதும்
சொந்தமென்று வளைச்சவங்க
சட்டங்கள் மாறிவரும் நேரம்
என்ன ஆனாங்க
எல்லாம் சரிசமமாப்
போனாங்க" என்கிறார்.
மேலும்,
“கும்பல்
சேர்த்து வம்புவளர்த்து
குடும்பத்தைக்
குலைக்குதுங்க - பெருங்
குழப்பமாகியே சண்டைகள்
மூட்டி
பொழப்பையும்
கெடுக்குதுங்க" என்று மட்டமான பேச்சுகள் வாயைக் கெடுக்கும் என்பதனை 1985ல்
வெளிவந்த மகனே கேள் திரைப்படப்பாடல் வழியே குறிப்பிடுகின்றனார்.
செய்யும் தொழிலே தெய்வம்
உழைக்காமல்
ஊர்சுற்றித்திரியும் கோயில் மாடுகள் போல வாழ்வதால் பயனில்லை. ஒருவர் எத்தொழிலைச்
செய்தாலும் கேவலம் இல்லை. உழைப்பே மனிதனை உயர்விக்கும். இதனை வலியுறுத்தும்
வகையில் ஆளுக்கொரு வீடு படத்தில் (1960) ஒரு அற்புதமான தொழில் நேர்மையைக்
கடைப்பிடிக்க வேண்டுமென்கிறார்.
“செய்யுந்தொழிலே
தெய்வம் - அந்த
திறமைதான் நமது செல்வம்
கையும் காலும் தான் உதவி -
கொண்ட
கடமைதான் நமக்குப் பதவி!
பயிரை வளர்த்தல் பலனாகும்
- அது
உயிரைக் காக்கும் உணவாகும்
வெயிலே நமக்குத்
துணையாகும் - இந்த
வேர்வைகளெல்லாம்
விதையாகும் - தினம்
வேலையுண்டு குலமானமுண்டு -
வரும்
காலமுண்டு அதை
நம்பிடுவோம்" என்று வருங்கால வாழ்க்கை வளமான
வாழ்க்கையாக அமையும் என்று
நம்பிக்கையூட்டுகிறார்.
உண்மை வெல்லும்
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
என்றார் பாரதியார். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்றொரு திரைப்படம் 1960 ஆம் ஆண்டு
வெளியானது. அத்திரைப்படத்தில் இடம் பெறும் பாடல்,
“உண்மையைச்
சொன்னவனை உலகம் வெறுக்குமடா
உதவி செய்ய நினைத்தால்
உள்ளதையும் பறிக்குமடா
உள்ளத்தைக் கல்லாக்கி
ஊமைபோல் வாழ்ந்து விட்டால்
நல்லவனென்றுன்னை நடுவில்
வைத்துபோற்றுமடா"
குன்றிலிட்ட விளக்காக
விளங்காது ஆமைதன் கூட்டுக்குள் ஒடுங்குவது போல் வாழந்தால் நாடே போற்றும். இதனையே
உலகம் விரும்புகிறது. நல்லவற்றிற்கும் நல்லவர்க்கும் இது காலமில்லை என்பதனை
இப்பாடல் தெளிவுபடுத்துகிறது.
காதல்
சமூக சீர்திருத்தக்
கருத்துக்களை தம் பாடல் வழி வெளிப்படுத்திய பட்டுக்கோட்டையார் காதல் பாடல்களின்
ஊடாகவும் ஒரு நாகரீகத்தையும், கண்ணியத்தையம் கடைபிடித்தே வந்துள்ளார்.
வாடிக்கை மறந்ததும் ஏனோ
என்ற கல்யாணப் பரிசு எனும் படத்தில் இடம் பெற்ற பாடலில் இந்த நாயகி –
நாயகனிடம் ‘நான் கருங்கல்லு சிலையோ காய்மலர் கொடியோ வரம்பு மீறுதல்
முறையோ” என்ற வரிகள் தமிழ்பண்பாட்டின் நாகரீகத்தை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
ஆடை கட்டி வந்த நிலவோ கண்ணில்
மேடைக் கட்டி ஆகும் எழிலோ என்ற பாடல் பட்டுக் கோட்டையாரின் கற்பனை திறத்திற்கு ஒரு
சிறந்த சான்று.
ஆன்மீகம்
பகுத்தறிவு கொள்கை கொண்ட
பட்டுக்கோட்டையார் ஆன்மீக பாடல்களை எழுதும் போது கூட சமூக பிரச்சனைகளையும்,
ஏழைகளின் அவலத்தையும்
சேர்த்தே எழுதியுள்ளார்.
அம்பிகையே மாரியம்மா
உன்னை நம்பி வந்தோம் ஒரு
காரியமா
இன்பம் இன்பம் என்ற சொல்லை
எங்கள் காது கேட்டதுண்டு
எங்கள் வீட்டுப்பக்கம்
எப்போதாவது வந்தது உண்டா சொல்லு
நிலையாமை
இந்த உலக வாழ்வு நிலை
இல்லாதது இந்த உண்மையை அறியாமல் மனிதர்கள் பணத்தின் பின்னாலும்,
பகட்டின் பின்னாலும்
ஒடுகிறார்கள் என்பதனை
பொறக்கும் போது பொறந்த
குணம் போக போக மாறுது என்ற பாடலில்
“வாழ்வின் கணக்கு புரியாம
ஒன்னு காசைத் தேடி ஒடுது
ஆனா காதோரம் நரச்சமுடி கதை
முடிவை காட்டுவது”
என்ற வரிகள் ஒவ்வொரு
மனிதனும் தன் வாழ்வில் உணர்ந்து கடைபிடிக்க வேண்டிய வரிகள்.
தொகுப்புரை
பட்டுக்கோட்டை கல்யாண
சுந்தரனாரின் பாடல்கள் வழி வெளிப்படும் வாழ்வியல் சிந்தனைகளை தகுந்த ஆதாரங்களுடன்
இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது. சமூக வாழ்வு,
அக வாழ்வு,
குழந்தைகள் பின்பற்ற
வேண்டியவ வாழ்வியல் நெறிகள் வர்க்க ரீதியிலான முரண்பாடு ஆகியவற்றை
பட்டுக்கோட்டையாரின் திரைப்பட பாடல்கள் வாயிலாக கொண்டு சேர்ப்பதே இக்கட்டுரையின்
தலையாய நோக்கமாகும்.
ஆய்வுக்கு
பயன்பட்ட நூல்கள்
பட்டுக்கோட்டை கல்யாண
சுந்தரனார் பாடல் தொகுப்பு
ஆசிரியர் பொன் செல்லமுத்து
மணிவாசகர் பதிப்பகம்.
வைரமுத்து வரை
முனைவர் பேராசிரியர்
சண்முக சுந்தரம்
காவியா பதிப்பகம்.
க. சங்கர் எம் . ஏ .
பகுதி நேர ஆய்வாளர்
தமிழ்த்துறை
அரசினர் ஆடவர் கல்லுரி தன்னாட்சி
நந்தனம்,
சென்னை -35.