Showing posts with label மாணவர் கட்டுரை. Show all posts
Showing posts with label மாணவர் கட்டுரை. Show all posts

Friday, 31 August 2018

மானுடம் போற்றிய பாரதி


                                                                                                                                                மானுடம் போற்றிய பாரதி

 
17/12/17
ஜெ. முத்தம்மாள்
இளங்கலைத் தமிழிலக்கியம் மூன்றாமாண்டு

       எட்டயபுரத்தில் பிறந்து திருவல்லிக்கேணியில் செத்துப்போனார் என்பது அவரது வாழ்க்கை . மனிதனாய் பிறந்து – கவிஞனாய் வளர்ந்து - மானுடத்தை உயர்த்தும் பணியில் மரித்துப்போனார் என்பது அவரது வரலாறு.
       விஞ்ஞான வெளிச்சத்தில் உலகம் விடிந்து கொண்டிருந்த வேளையில் அவர் பெற்றெடுக்கப்பட்டார் . விஞ்ஞானம் மனிதனைச் சிங்காரித்துக் கொண்டிருந்தது .  மானுடத்தைப் பற்றிக் கவலைப்பட விஞ்ஞானிகள் மறுத்தப் போது ஞானிகள் கவலைப்பட்டார்கள் . உலகந்தழுவிய மானுடத்திற்காய்த் தமிழ் மண்ணிலிருந்து கவலைப்பட்ட கவி - பாரதி .
       இந்திய அரசியல் விடுதலை என்பது வரலாறு உச்சரித்துத் தீர வேண்டிய ஒரு விஷயம் . மானுட விடுதலை என்பதே மனித குலம் எய்த வேண்டிய இலட்சியம் .
       பாரதியின் எழுத்தெல்லாம் இந்த லட்சியத்தை நோக்கியே பயணப்படுகிறது . ஆதலின் , பாரதி எனும் நெருப்பு பழையதாகி விடுவதில்லை .
       " தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
              இமைதிற வாமல் இருந்த நிலையில்
        தமிழகம் தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும்
              தலைவனை எண்ணித் தவங் கிடக்கையில்
        இலகு பாரதிப் புலவர் தோன்றினார் " .
அற்புதமிக்க தன் கவிதைகளால் உலக மக்களை ஒன்று திரட்டி இந்த ஜகத்திணையினையே திரும்பிப் பார்க்க வைத்தார் .
       " பாரதி உலகமே போற்றும் மகாகவி
        அகத்தில் அன்பும்
        பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர் " .
என்று பாரதியின் சிறப்பைப் பாவேந்தர் பாரதிதாசன் பாடுகிறார் .
       மண்ணுண்ட வாய்திறந்து கண்ணன் யசோதைக்கு அகிலம் காட்டியது போல இந்த பாரதியின் வாய்த்திறப்பில் தமிழன்னை இன்றளவும் கவிமுகந்து கொண்டிருக்கிறாள் . தென்றலாய் வீசி மனிதனை இதப்படுத்தி நயப்படுத்த முடியாத போது பாரதியின் படைப்புகள் புயலாக வீசி பழமையை விரட்டி புதுமையை நாட்டின .
       " எல்லோரும் ஓர் குலம்
        எல்லோரும் ஓர் நிலை
        எல்லோரும் இந்நாட்டு மன்னார் "
என்ற பாரதியின் சிந்தனை பொதுவான நிலைப்பாட்டில் மானுடர் அனைவரும் சமம் . அரசனையும் ஆண்டியையும் ஒரே தராசில் நிற்க! அது ஒரே மதிப்பில் இருவரையும் நிறுத்துகிறது .
       ஆதிக்கச் சமுதாயத்தில் கூட ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்கிற பாரதியின் ஆன்மீக சமூகத்தில் அடித்தட்டு மக்களுக்கும் புதிய தகுதியை உணர்த்திக் காட்டுகிறது . பாரதி காட்டுகிற மானுட நெறி புதியது , திடமானது  என்பதில் சந்தேகமில்லை . இறுகிய தரையில் நடப்படுகிற செடி ஆழமாக வேறூன்றச் செய்ய தரையை நன்கு தோண்டி வைப்பது போல பாரதியின் நெறி  வாழ்வில் ஆழமான பிடிப்புக் கொண்டது .
       அதனால் தான், அச்சம் தவிர் , ஆண்மை தவறேல் , ஏறு போல் நட , கொடுமையை எதிர்த்து நில் , புதியன விரும்பு என்று வீரமாகப் பேசுகிறார் பாரதி .
       பாரதியின் மானுட சிந்தனைகள் 20ம் நூற்றாண்டில் மட்டுமல்ல அதற்கடுத்த நூற்றாண்டிலும் விழிப்புணர்ச்சி தந்து கொண்டு இருக்கிற ஆக்கப்பூர்வமான அம்சங்கள் தாங்கியவை .
       புழுப்பூச்சிகளாய்க்  காலங்காலமாக அழுத்தப்பட்டுக் கிடந்தவர்கள் தங்களுக்கும் சுதந்திரமாக மூச்சி விடும் உரிமை உண்டு என்பதனையும் , அது பெரு மூச்சாய் இல்லாமல் திருப்தி தருகின்ற சுத்த இதய சுவாசமாக இருக்க வேண்டும் என்பதையும் ஜனநாயகத்தை உணரச் செய்தார் .
       சுதந்திரப் போராட்டம் அன்னிய ஆட்சிக்கு எதிரானது மட்டுமன்றி , ஆண்டாண்டு காலமாக நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட சமுதாய அமைப்புக்கு எதிரானதுமாகும் என்று காந்திஜியைப் போல் பாரதியும் கருதினார் . பெண்கள் உரிமைக்காக  போராடினார் . பெண்களிடம் காட்டப்படும் பாராபச்சத்திற்கு எதிராகப் போராடினார் .
       " இதுவரை  கத்தியும் , துப்பாக்கியும் ,
        சிறைச்சாலையும் , தூக்கு மேடையும்
        பயன்படுத்தி மனிதர் ஒருவரை ஒருவர்
        நெறிப்படுத்த முயன்றதெல்லாம் வீண் முயற்சியே .
        வீட்டுப் பெண்டிர்களே தமது தாலாட்டுப் பாடல்களாலும்
        செவிவழி கதைகளாலும் மனித குலத்தை
        மேம்படுத்தியதைப் போல்
        வேறெந்த ஆயுதமும் செயல்பட்டதில்லை ".
என உணர்ச்சியுடன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் .
       ஒரு நாட்டில் ஆண்மக்களைப் போலவே பெண் மக்களும் உரிமைப் பெற்று வாழ்தல் வேண்டும் . பெண்ணடிமை கொண்ட நாடு அடிமைக் குடில் என்றும் வீழ்ந்தே கிடக்கும் என்கிறார் பாரதி . 
        தேசபக்தி, பெண்ணுரிமையைப் பற்றி பாடிய பாக்கள் பெரிதும் எமது உள்ளத்தில் இன்பமூட்டிக் கொண்டிருக்கும் . தமிழ் நாட்டில் தோன்றிய புலவருள் பெண்ணுரிமைக்குப் போராடிய வீரருள் தலை சிறந்து விளங்கியவர் பாரதியாராவார் .
       " ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
        அறிவில் ஓங்கி இவ்வையந் தழைக்குமாம் " .
எனப் பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமை தீருதல் எனப் பெண்ணுரிமையை ஏத்தினார் .
       " போற்றிப் போற்றி ஓராயிரம் போற்றி நின்
        பொன்னடிக்கேப் பல்லாயிரம் போற்றிகாண் ".
பெண்மை வாழ்கவெனக் கூத்திடுவோமடா என்றும். பெண்களின் கல்விஅறிவுக்காகச் சட்டங்களைச் செய்திடவும் கனவு கண்டார் பாரதி .
       " ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
        றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
        வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
        விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் "
       " பட்டங்களாள்வதும் சட்டங்கள் செய்வதும்
        பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
        எட்டு மாறிவிநிலாணுக் கிங்கே பெண்
        இளைப்பிள்ளை காணென்று கும்மியடி "
       " வேதம் படைக்கவும் நிதிகள் செய்யவும்
        வேண்டி வந்தோமென்று கும்மியடி
        சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வச்
        சாதி படைக்கவும் செய்திடுவோம் "
       " சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
        தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
        நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
        நித்தமும் சண்டைகள் செய்வார் "
என்று 20ஆம் நூற்றாண்டின் நிலையைக் கூறினார் பாரதி .
       இப்போது இருக்கும் நிலை என்ன ? அந்தச் சாதிப் பிரிவுகளும் நீதி என்ற பெயரில் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் . அந்த நிலை மாறுவதற்காகத் தான் மீண்டும் பாரதி ,
       " சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு
        தன்னிற் செழித்திடும் வையம் !
என வலியுறுத்துகிறார் .
       " மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
        வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
        வானுலகு நீர்த் தருமேல் மண்மீது மரங்கள்
        வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்குமன்றோ  "
அதனால் எதற்கும் அஞ்சாமல் , உடலை வறுத்தாமல் மானுடர்களாகிய நாம் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்த வேண்டும் என பாரதி கூறுகிறார் . இந்த உலகம் உயர்ந்திட வேண்டுமென்றால் மனிதர்களெல்லாம் கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும் . இதனையே
       " வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
        வாழும் மனிதர்க்கெல்லாம்
        பயிற்றி பலகல்வி தந்து - இந்த
        பாறை உயர்த்திட வேண்டும் "
என்கிறார்.
       " இறந்தும் உயிர் வாழ்தல் வேண்டில் பரந்து
        கெடுக்க உலகயியற்றி யான் " என்று வள்ளுவர் கூறிய கோப - சாப நிலையை மாற்றி அதனை ,
       " இனியொரு விதி செய்வோம் - அதை
        எந்நாளும் காப்போம் !
        தனியொருவனுக்குக் குணவில்லையெனில்
        ஜகத்தினை அழித்திடுவோம் ! "
என்று ஆவேசத்துடன் பாடினார் .
       ஆட்சியாளர்கள் ஐந்தாண்டுத் திட்டங்களும் , அரசியல் கட்சிகள் நடத்தும் கொள்கைப் போராட்டங்களும் பாரதி காண விரும்பிய நவபாரதத்தை - புதிய தமிழகத்தை - உருவாக்கியாக வேண்டும் .
       அதுவே அமரகவி பாரதியாருக்கு நாம் அளிக்கும் காணிக்கையாகும் .
       " தனியொருவனுக்கு உணவில்லையெனில்
        ஜகத்தினை அழித்திடுவோம் "
என்று பாரதி சொன்னது ஒட்டுமொத்தமான இந்த உலகினை அல்ல . தனியொருவனுக்கு உணவு இல்லாமல் இறந்திடும் நிலையை தான் காரணமாகக் காட்டுகிறார்.
       அதற்காகத் தான் " இனியொரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம் " என மனிதர்களின் வாழ்க்கை நடைமுறைக்குச் சாத்தியமான திட்டத்தை வெளிப்படையாக தெரிவிக்கிறார் .
       மானுடர்களாகிய நமக்கு எல்லாரும் ஓரினம், சுதந்திரம், புதுமைப் பெண், பெண்கல்வி , சாதிப் பிரிவு , மனித வாழ்வு நெறி , தனி மனித  உரிமை என இத்தகைய பல கோணங்களில் மானுடத்தை போற்றிய பாரதியை நாமும் போற்றுவோம் .
      
                          நன்றி

Friday, 19 May 2017

வானம் வசப்படும் - மாணவர் கட்டுரை

(அந்தகக்கவிப் பேரவையின் எட்டாவது கூட்டத்தில்  (16/04/2017) படிக்கப்பட்டது)

கு.பாரதி,
தமிழ்த்துறையில் இளங்கலை மூன்றாமாண்டு,
சோகா இகெதா  கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி. 

முன்னுரை:
நம்முடைய எண்ணங்கள், செயல்பாடுகள், முயற்சிகள், நேர்மையான உழைப்பு  மனோதிடம் இவை யாவும் வானத்தையே எட்டும் அளவுக்கு உயர்ந்து காணப்படவேண்டும். இதனை பாரதியார்,

மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்படவேண்டும்’’ 

எனப் பாடியுள்ளார். இத்தகைய  வானகத்தையே தனது இலட்சியப் பாதையால் வசமாக்கிக்கொள்ளுதல்  பற்றி இக்கட்டுரையில்  காண்போம்.

வானம் வசப்படுவதற்கான வழிகள்:
நம் மனதில்  தோன்றும்  எண்ணங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். நாம் என்றுமே புதுமைகளைப் படைத்துக்கொண்டே இருக்கவேண்டும். மனிதனின் மனதினை  மாற்றி சரியான  முறையில் கொண்டுச்செல்ல மதியாகிய  வெள்ளம் உள்ளத்தில் பெருக்கெடுக்க வேண்டும். கண்களில் எப்போதும் நேர்மையான  சிந்தையே  பிரகாசிக்க வேண்டும்.  பிறரிடம்  கருத்துக்களைப்  பகிர்ந்திட  கனிவான  சொற்களையே  பயன்படுத்திட  வேண்டும். இதையே  வள்ளுவர்,

அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப்  பெறின்’’ .

என, முக மலர்ந்து இன்சொற்கள் கூறுதல் ஈகையைவிட நல்லதாகும் என  வள்ளுவர் கூறியுள்ளார். ஒரு செயலில் முழுமையான  வெற்றி  கிட்டுவதற்கு  தொடர்ந்து முயன்று அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டால்  வானத்தையேவசப்படுத்தலாம். நம்மை  நாமே நெறிபடுத்தி   சரியான   பாதையில்  வழிநடத்திடும் பக்குவங்கள் நம்மிடையே தோன்றிட வேண்டும். நம்மால்  பிறருக்கு  முயன்றிடும் வகையில் பயனுள்ள செயல்பாடுகளை அளித்திட வேண்டும். அவ்வாறு  செய்யும்   செயல்கள் மேலாக  உயர்ந்து  செல்வதற்கு  நாம் துணிச்சலாக  எழுந்து   சரியான  வாய்ப்பினை  பயன்படுத்தி முன்வரல்   வேண்டும். 

இதனை வள்ளுவர்,

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்’’

கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப்   பயன்படுத்திக்கொண்டு செய்தற்கரிய செயல்களைச் செய்யவேண்டும் என வள்ளுவர்  குறிப்பிடுகிறார். நம்முடைய சிந்தனைகள் அனைவருக்கும்  பொருந்தும் வகையில்  மேலோங்கி சிந்திக்க  வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு  எண்ணங்களும்   உயர்வாக   சிந்திக்க நம்மிடையே  உந்துதல்கள் பிறக்க வேண்டும். இவ்வாறு செய்வதினால்  வானத்தை  வசப்படுத்தும்  அளவுக்கு  நம்மால்  உயர்ந்திட  முடியும்.

தனிமனிதபண்புகள்:
இந்த  உலகில்  அன்பு,   அறிவு, துணிவுபணிவுகனிவு, உண்மைதருமம்முயற்சி, உழைப்புஇலக்கு என இவை யாவையும்  சரியான  முறையில்   செலுத்தினால்  ஞாலம்  நம்   கையில். எனவே நம் எண்ணம் சிறந்த முறையில் தோன்றி அதனால் பிறக்கின்ற சொற்கள் பயனுள்ளதாய் வெளிப்பட்டுசெயல்பாடுகளாய்  அவை   உயர்ந்த நிலையில்   காணப்படவேண்டும்.

      விண்ணை நோக்கி பாய்ந்திட 
       விண்ணுலக  மனிதனாக மாறி
       வேண்டிய வானத்தை வசப்படுத்திட வேண்டும்

அதற்காக உலகத்தோடு போராட தயக்கத்தை முற்றிலுமாய் தகர்த்துவிட்டு   தைரியமாய் முன்வந்தால் வானளவு உயர்ந்துமுன்னேறி  செல்லலாம். தாய்மையின்   வடிவாக   உலகத்தை  மதித்து  அன்பான  உள்ளத்தோடு  அனைவரிடம்  பழகிட உலகத்தால்  போற்றப்படுகிற  புகழினை   அடையலாம்.  இதனை வள்ளுவர்,

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு

என வலுயுறுத்துகிறார். இவ்வாறு ஒவ்வொரு தனிமனிதனும் சிறந்த பண்புகளைக்  கடைப்பிடிக்க  வேண்டும் .வாய்மையால் வளர்ந்து உலகத்தில் வான்மழையாக  வாய்மையினைப் பொழியவேண்டும். இந்த உலகில் வாழும் நாம் துணிவாக   எழுந்து சிகரத்தை அடைய ஓய்வில்லாமல் பயணித்துககொண்டே இருக்கவேண்டும்.

வானத்தை  வசப்படுத்தும்  இளையத் தலைமுறைக்குரியத்   தலைமைப்  பண்புகள்:
இளைஞர்கள் நாட்டின் முதுகெலும்பாக திகழ்கின்றனர். எனவே இளைஞர்கள்   நினைத்தால் வானத்தையே வசப்படுத்தி விடலாம். இளைஞர்கள் தங்கள்   எதிர்காலத்தைக் குறித்துத் திட்டம் தீட்டிக்கொள்ளவேண்டும். அவர்கள் எதிர்காலம்   அவர்கள் நிர்ணயிப்பதே என்பதை சரியான முறையில் அதை தீர்மானிக்கவேண்டும். இளைஞர்கள் கல்வி, அறிவு, விடாமுயற்சி, துணிச்சல், சாதிக்க வேண்டும் என்கிற  இலட்சியக் குறிக்கோள், காலந்தாழ்த்தாமை, திட்டமிட்டு ஒருங்கிணைக்கும் தன்மை  போன்ற பல்வேறு குணங்களைப் பெற்றிருத்தல் அவசியமாகும். சாதிக்கும்  மனப்பான்மை  கொண்ட  இளைஞனுக்கு    எடுத்துக்கொண்ட   எச்செயலும்  வெற்றியை  ஈட்டித்தரும் .  இதனையே  நாலடியார்,

எவ்வம் உழந்தக் கடைத்தும் குடிப்பிறந்தார்
செய்வர் செயற்பா லவை

சாதனையாளர்கள் துன்பத்தால் வருந்திய காலத்திலும் செய்யத்தக்கனவற்றை  செய்து கொண்டே இருப்பர் என்பதனை இவ்வரிகள் உணர்த்தி நிற்கின்றன. .தலைமைப் பண்பினைக் கொண்டிருப்பவனிடம்  அறிவுத்திறனை  உள்ளுக்குள்ளேயே  அடக்கி  வைத்திருக்கும்  மனோதிடம்  காணப்படும்.
ஆற்றும் துணையும் அரிவினை உள்ளடக்கி
ஊக்கம்  உரையார்  உணர்வுடையார்  ஊக்கம் 
உறுப்பினால் ஆராயும் ஒண்மை உடையார்
குறிப்பின்கீழ்ப் பட்ட துலகு

என நாலடியார் மனோதிடம் கொண்டவர்கள் தங்களையும் தங்களைச்  சார்ந்தவர்களையும் வழிநடத்தும் இயல்புடையவர்கள் என்கிறது. இவையனைத்தையும் கொண்டு செயலாற்றும் திறன் பெற்றவன் வானத்தையே  வசப்படுத்தும் நிலையை  எய்திவிடுவான். மேலும் இளைஞர்களுக்கு   முன்மாதிரியாக  திகழும் வானத்தை  வசப்படுத்தியவர்களான  அப்துல்கலாம்நீல் ஆம்ஸ்ட்ராங், ஹெலன் கெல்லர், சுதந்திரப் போராட்ட வீரர்கள்  என இளைஞர்கள் இவர்களை நினைவில் கொள்ளவேண்டும். இவர்கள் ஒவ்வொருவரும்    சாதிப்பதற்கு  பல தடைகளைக் கடந்து, முன்னேறி வந்துள்ளனர். உதாரணமாக  முப்புலன் இழந்த ஹெலன் கெல்லர் தன்னிடம் இருந்த குறைகளை எண்ணாது   தன்னால் சாதிக்க முடியும் என்னும் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும், மனோதிடத்துடனும் பல வெற்றிகளை அடைந்து உயர்ந்த இடத்தைப்  பிடித்துள்ளார்.  அதுப்போல பல தடைகள் நம் முன்னால் வந்தாலும் அதை எதிர்த்து   சாதிக்கமுடியும் என்னும் தன்னம்பிக்கையுடன்  மனோதிடம் கொண்டுத்  தொடர்ந்து   செயல்பட்டு  உயர்ந்திட  வேண்டும். எனவே இத்தகையவரின் சாதிக்கவேண்டும்   என்ற தலைமைப் பண்பினையும் அவர்கள் அடைந்த உயர்ந்த நிலையினையும்    எண்ணி இளைஞர்கள் தங்கள் தலைமைப் பண்பையும் மனோதிடத்தையும்   வளர்த்து எதிர்காலத்தை நோக்கி துணிவுடன் செயல்பட்டால் அவர்கள் உயர்ந்த நிலையை அடைந்து வானத்தை வசப்படுத்த முடியும்.

புதுமைப்பெண்கள்:
பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் ஒவ்வொரு பெண்களும் வெகுண்டெழுந்தால்  நிச்சயமாய் ஒவ்வொரு பெண்ணுக்கும் வானம் வசப்படும்.

எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கு பெண்
இளைப்பில்லைக் காண் என்று  கும்மியடி

என பெண்ணின் சிறப்பை பாரதி பாடியுள்ளார். அடுப்பூதும் பெண்களுக்கு   படிப்பெதற்கு  என்ற நிலைமாறி பெண்கள் இன்று பல துறைகளில் முன்னேறி    உயர்ந்து வருகின்றனர். சங்க காலம் தொட்டு இன்று வரை வானத்தை வசப்படுத்திய  சாதனைப் பெண்கள் பலருண்டு. சங்க காலத்தில்  பெண்கள் சுதந்திரத்துடன் செயல் பட்டு வந்திருக்கின்றனர் என்பதற்கு பல இலக்கியச்சான்றுகள் உள்ளன. பெண்கள்  போர்களப் பாசறையிலும் இருந்துள்ளனர் என்பதை,

குறுந்தொடி முன்கைக் கூந்தல் அம்சிறப்புயத்து
இரவு பகல் செய்யும் திண்பிடி ஒள்வாள் 
விரவு வரிக்கச்சின் பூண்ட மங்கையர்
நெய்யுமிழ்சரையர் நெடுந்திரி கொளீஇக்
கையமை விளக்கும் நந்துதொறு மாட்ட

என முல்லைப்பாட்டு காட்டுவதிலிருந்து சங்ககாலப் பெண்கள் குடும்பப் பொறுப்போடு தொழிலறிவினைப்  பெற்று  குடும்பத்தைப் பேணியதோடு  போர்களம்  புகுந்து வாள் கொண்டு போரிடவும் செய்திருக்கின்றனர் என்பது  தெளிவடைகிறது. பெண்களுக்கு  மனஉறுதியும் சாதிக்கவேண்டும்  என்ற  எழுச்சியும், தைரியமும் மிக  அவசியம்.  அந்தப்படி ஜான்சிராணி இலக்குமிபாய், முத்துலட்சுமிரெட்டி, பிரதமர் இந்திரா, கல்பனா சாவ்லா, பி.டி.உஸா, சானியாமிர்ஸா, பி.வி.சிந்து என இவர்கள்    தன்னம்பிக்கையுடன் அறிவினை வளர்த்துக்கொண்டு சாதிக்கவேண்டும் என தனது இலட்சியங்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். இவ்வாறு  வானம் வசப்படவைத்த வீராங்கனைகளை முன் உதாரணமாக  வைத்து  ஒவ்வொரு  பெண்ணும் சாதிக்க வேண்டும் என்ற துணிவுடன் முன்வந்து  கல்வி, விளையாட்டு, அறிவியல் என பலதுறைகளில் தனது இலட்சியக்குறிக்கோளினை உறுதியாய்   பற்றிக்கொண்டுவிடாமுயற்சியுடன் செயல்பட்டால் ஒவ்வொரு பெண்களும் புதுமைப்பெண்களாய்  வானத்தை  வசப்படுத்தமுடியும் .

உந்துதலால் நல்லதையே சிந்திக்க வேண்டும்
       உண்மையாக செயல்தனையே  நடத்திடவும் வேண்டும்
அந்நியத்தை  அழித்திடவே அருமையாக உழைப்போம்
       அனுதினமும் சுறுசுறுப்பாய் அனுபவத்தைப் பெறுவோம்
கந்தகமாய் அறிவினையே ஈர்த்திடவும் செய்வோம்
       கடினமாகசெயல்களிலே ஈடுபாடு கொள்வோம்
சிந்தியவை வேர்வைதான் சிகரத்தை  அடைவோம்
       சீக்கிரமாய் பயணித்து வானத்தையே தொடுவோம்’.


வானம்  வசப்படாததற்கான  சமூகத்தடையும்  நீக்கும் வழிமுறைகளும்:
இன்றையச் சூழலில் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு  வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் இதனால் குழந்தைகளை கவனிக்கமுடியாத  நிலை, வாழ்வியல் விழுமியங்களை குழந்தைகளுக்குப் போதிக்க வீட்டில் யாரும் இல்லை, நண்பர்கள் உற்றார் உறவினருடன் கூடி வாழும் நிலை இல்லை ,இளைஞர்கள் நவீனத் தொழில்நுட்ப வசதிகளை தவறாகப் பயன்படுத்தி தங்கள் திறமையை வீணடித்தல். எ.கா mobile, internet போன்றவை. வீட்டிலும் வேலைச்செய்யும் இடத்திலும் பெண்களின்  உள்ளார்ந்த  திறமைகள் முடக்கப்படுதல் இவ்வாறு  பல  தடைகள்  உள்ளன .

நீக்கும்  வழிமுறைகள்:
குழந்தைகள், தாத்தா, பாட்டி என கூடி வாழ்ந்தால் கோடி நன்மை பயக்கும். வயதானவர் துணையுடன் இருந்தால் குழந்தைகள் ஒழுக்க நெறியுடன் கல்வி  பெறுவர். இளைஞர்கள் நேர மேலாண்மையைக் கருத்தில் கொள்ள ஆக்கப் பணிகளில் ஈடுபடவேண்டும். பெண்களின் சுமைகளை எல்லாவிடங்களிலும் பகிர்ந்துக்கொள்ளுதல் வேண்டும்.ஆண்  பெண் சரிநிகர் சமானம் என வலியுறுத்தி  இருவரும் விட்டுக்கொடுத்து வாழும் மனப்பான்மை கொண்டிருத்தல் வேண்டும்.  நவீனத் தொழில்நுட்பங்களைக் கொண்டு சரியான முறையில் பயன்படுத்தி சாதித்தல்  வேண்டும்.இவையே பல தடைகள்  வந்தாலும் வானம் வசப்பட  வழிவகுக்கும்.  

முடிவுரை:
பாரதியின்  வாக்குப்படி,
மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென்பட வேண்டும்

என்ற கூற்றிற்கிணங்க ஒவ்வொருவரும் சிறந்த எண்ணம், துணிச்சல், மனோதிடம், சாதனை குணம், விடாமுயற்சி என்பவைகளைக் கைக்கொண்டால் வானம் அளவு உயர்ந்து  மண்ணுலகத்திலே விண்ணகத்தை வசப்படுத்தலாம்.

ஞானத்தைப் பெருக்கிடவே ஞாலத்தில் பிறந்தோம்
       ஞாயிற்றின்  ஒளியாக உலகெங்கும் சுடர்வோம்
ஈனத்தை ஒழித்திடவே இனமாக எழுவோம்
       இன்மையினை வெறுத்திடவே வன்மையினை விதைப்போம்
ஊனத்தை உடைத்திடவே ஊன்றுகோலாய் இருப்போம்
       உற்சாகஉள்ளத்தை உரிமையுடன்  பகிர்வோம்
வானவர்கள் வாழ்கின்ற உயரத்தை அடைவோம்

       வாழ்க்கையிலே வானத்தை  வசப்படுத்தி விடுவோம்’’