Friday 31 August 2018

மானுடம் போற்றிய பாரதி


                                                                                                                                                மானுடம் போற்றிய பாரதி

 
17/12/17
ஜெ. முத்தம்மாள்
இளங்கலைத் தமிழிலக்கியம் மூன்றாமாண்டு

       எட்டயபுரத்தில் பிறந்து திருவல்லிக்கேணியில் செத்துப்போனார் என்பது அவரது வாழ்க்கை . மனிதனாய் பிறந்து – கவிஞனாய் வளர்ந்து - மானுடத்தை உயர்த்தும் பணியில் மரித்துப்போனார் என்பது அவரது வரலாறு.
       விஞ்ஞான வெளிச்சத்தில் உலகம் விடிந்து கொண்டிருந்த வேளையில் அவர் பெற்றெடுக்கப்பட்டார் . விஞ்ஞானம் மனிதனைச் சிங்காரித்துக் கொண்டிருந்தது .  மானுடத்தைப் பற்றிக் கவலைப்பட விஞ்ஞானிகள் மறுத்தப் போது ஞானிகள் கவலைப்பட்டார்கள் . உலகந்தழுவிய மானுடத்திற்காய்த் தமிழ் மண்ணிலிருந்து கவலைப்பட்ட கவி - பாரதி .
       இந்திய அரசியல் விடுதலை என்பது வரலாறு உச்சரித்துத் தீர வேண்டிய ஒரு விஷயம் . மானுட விடுதலை என்பதே மனித குலம் எய்த வேண்டிய இலட்சியம் .
       பாரதியின் எழுத்தெல்லாம் இந்த லட்சியத்தை நோக்கியே பயணப்படுகிறது . ஆதலின் , பாரதி எனும் நெருப்பு பழையதாகி விடுவதில்லை .
       " தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை தாழ்ந்ததால்
              இமைதிற வாமல் இருந்த நிலையில்
        தமிழகம் தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும்
              தலைவனை எண்ணித் தவங் கிடக்கையில்
        இலகு பாரதிப் புலவர் தோன்றினார் " .
அற்புதமிக்க தன் கவிதைகளால் உலக மக்களை ஒன்று திரட்டி இந்த ஜகத்திணையினையே திரும்பிப் பார்க்க வைத்தார் .
       " பாரதி உலகமே போற்றும் மகாகவி
        அகத்தில் அன்பும்
        பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர் " .
என்று பாரதியின் சிறப்பைப் பாவேந்தர் பாரதிதாசன் பாடுகிறார் .
       மண்ணுண்ட வாய்திறந்து கண்ணன் யசோதைக்கு அகிலம் காட்டியது போல இந்த பாரதியின் வாய்த்திறப்பில் தமிழன்னை இன்றளவும் கவிமுகந்து கொண்டிருக்கிறாள் . தென்றலாய் வீசி மனிதனை இதப்படுத்தி நயப்படுத்த முடியாத போது பாரதியின் படைப்புகள் புயலாக வீசி பழமையை விரட்டி புதுமையை நாட்டின .
       " எல்லோரும் ஓர் குலம்
        எல்லோரும் ஓர் நிலை
        எல்லோரும் இந்நாட்டு மன்னார் "
என்ற பாரதியின் சிந்தனை பொதுவான நிலைப்பாட்டில் மானுடர் அனைவரும் சமம் . அரசனையும் ஆண்டியையும் ஒரே தராசில் நிற்க! அது ஒரே மதிப்பில் இருவரையும் நிறுத்துகிறது .
       ஆதிக்கச் சமுதாயத்தில் கூட ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்கிற பாரதியின் ஆன்மீக சமூகத்தில் அடித்தட்டு மக்களுக்கும் புதிய தகுதியை உணர்த்திக் காட்டுகிறது . பாரதி காட்டுகிற மானுட நெறி புதியது , திடமானது  என்பதில் சந்தேகமில்லை . இறுகிய தரையில் நடப்படுகிற செடி ஆழமாக வேறூன்றச் செய்ய தரையை நன்கு தோண்டி வைப்பது போல பாரதியின் நெறி  வாழ்வில் ஆழமான பிடிப்புக் கொண்டது .
       அதனால் தான், அச்சம் தவிர் , ஆண்மை தவறேல் , ஏறு போல் நட , கொடுமையை எதிர்த்து நில் , புதியன விரும்பு என்று வீரமாகப் பேசுகிறார் பாரதி .
       பாரதியின் மானுட சிந்தனைகள் 20ம் நூற்றாண்டில் மட்டுமல்ல அதற்கடுத்த நூற்றாண்டிலும் விழிப்புணர்ச்சி தந்து கொண்டு இருக்கிற ஆக்கப்பூர்வமான அம்சங்கள் தாங்கியவை .
       புழுப்பூச்சிகளாய்க்  காலங்காலமாக அழுத்தப்பட்டுக் கிடந்தவர்கள் தங்களுக்கும் சுதந்திரமாக மூச்சி விடும் உரிமை உண்டு என்பதனையும் , அது பெரு மூச்சாய் இல்லாமல் திருப்தி தருகின்ற சுத்த இதய சுவாசமாக இருக்க வேண்டும் என்பதையும் ஜனநாயகத்தை உணரச் செய்தார் .
       சுதந்திரப் போராட்டம் அன்னிய ஆட்சிக்கு எதிரானது மட்டுமன்றி , ஆண்டாண்டு காலமாக நிலவி வரும் ஏற்றத்தாழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட சமுதாய அமைப்புக்கு எதிரானதுமாகும் என்று காந்திஜியைப் போல் பாரதியும் கருதினார் . பெண்கள் உரிமைக்காக  போராடினார் . பெண்களிடம் காட்டப்படும் பாராபச்சத்திற்கு எதிராகப் போராடினார் .
       " இதுவரை  கத்தியும் , துப்பாக்கியும் ,
        சிறைச்சாலையும் , தூக்கு மேடையும்
        பயன்படுத்தி மனிதர் ஒருவரை ஒருவர்
        நெறிப்படுத்த முயன்றதெல்லாம் வீண் முயற்சியே .
        வீட்டுப் பெண்டிர்களே தமது தாலாட்டுப் பாடல்களாலும்
        செவிவழி கதைகளாலும் மனித குலத்தை
        மேம்படுத்தியதைப் போல்
        வேறெந்த ஆயுதமும் செயல்பட்டதில்லை ".
என உணர்ச்சியுடன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் .
       ஒரு நாட்டில் ஆண்மக்களைப் போலவே பெண் மக்களும் உரிமைப் பெற்று வாழ்தல் வேண்டும் . பெண்ணடிமை கொண்ட நாடு அடிமைக் குடில் என்றும் வீழ்ந்தே கிடக்கும் என்கிறார் பாரதி . 
        தேசபக்தி, பெண்ணுரிமையைப் பற்றி பாடிய பாக்கள் பெரிதும் எமது உள்ளத்தில் இன்பமூட்டிக் கொண்டிருக்கும் . தமிழ் நாட்டில் தோன்றிய புலவருள் பெண்ணுரிமைக்குப் போராடிய வீரருள் தலை சிறந்து விளங்கியவர் பாரதியாராவார் .
       " ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
        அறிவில் ஓங்கி இவ்வையந் தழைக்குமாம் " .
எனப் பெண்ணடிமை தீருமட்டும் பேசும் இத்திருநாட்டில் மண்ணடிமை தீருதல் எனப் பெண்ணுரிமையை ஏத்தினார் .
       " போற்றிப் போற்றி ஓராயிரம் போற்றி நின்
        பொன்னடிக்கேப் பல்லாயிரம் போற்றிகாண் ".
பெண்மை வாழ்கவெனக் கூத்திடுவோமடா என்றும். பெண்களின் கல்விஅறிவுக்காகச் சட்டங்களைச் செய்திடவும் கனவு கண்டார் பாரதி .
       " ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
        றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
        வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
        விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் "
       " பட்டங்களாள்வதும் சட்டங்கள் செய்வதும்
        பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்
        எட்டு மாறிவிநிலாணுக் கிங்கே பெண்
        இளைப்பிள்ளை காணென்று கும்மியடி "
       " வேதம் படைக்கவும் நிதிகள் செய்யவும்
        வேண்டி வந்தோமென்று கும்மியடி
        சாதம் படைக்கவும் செய்திடுவோம் தெய்வச்
        சாதி படைக்கவும் செய்திடுவோம் "
       " சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
        தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
        நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
        நித்தமும் சண்டைகள் செய்வார் "
என்று 20ஆம் நூற்றாண்டின் நிலையைக் கூறினார் பாரதி .
       இப்போது இருக்கும் நிலை என்ன ? அந்தச் சாதிப் பிரிவுகளும் நீதி என்ற பெயரில் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் . அந்த நிலை மாறுவதற்காகத் தான் மீண்டும் பாரதி ,
       " சாதிக் கொடுமைகள் வேண்டாம் - அன்பு
        தன்னிற் செழித்திடும் வையம் !
என வலியுறுத்துகிறார் .
       " மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
        வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
        வானுலகு நீர்த் தருமேல் மண்மீது மரங்கள்
        வகைவகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்குமன்றோ  "
அதனால் எதற்கும் அஞ்சாமல் , உடலை வறுத்தாமல் மானுடர்களாகிய நாம் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்த வேண்டும் என பாரதி கூறுகிறார் . இந்த உலகம் உயர்ந்திட வேண்டுமென்றால் மனிதர்களெல்லாம் கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும் . இதனையே
       " வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
        வாழும் மனிதர்க்கெல்லாம்
        பயிற்றி பலகல்வி தந்து - இந்த
        பாறை உயர்த்திட வேண்டும் "
என்கிறார்.
       " இறந்தும் உயிர் வாழ்தல் வேண்டில் பரந்து
        கெடுக்க உலகயியற்றி யான் " என்று வள்ளுவர் கூறிய கோப - சாப நிலையை மாற்றி அதனை ,
       " இனியொரு விதி செய்வோம் - அதை
        எந்நாளும் காப்போம் !
        தனியொருவனுக்குக் குணவில்லையெனில்
        ஜகத்தினை அழித்திடுவோம் ! "
என்று ஆவேசத்துடன் பாடினார் .
       ஆட்சியாளர்கள் ஐந்தாண்டுத் திட்டங்களும் , அரசியல் கட்சிகள் நடத்தும் கொள்கைப் போராட்டங்களும் பாரதி காண விரும்பிய நவபாரதத்தை - புதிய தமிழகத்தை - உருவாக்கியாக வேண்டும் .
       அதுவே அமரகவி பாரதியாருக்கு நாம் அளிக்கும் காணிக்கையாகும் .
       " தனியொருவனுக்கு உணவில்லையெனில்
        ஜகத்தினை அழித்திடுவோம் "
என்று பாரதி சொன்னது ஒட்டுமொத்தமான இந்த உலகினை அல்ல . தனியொருவனுக்கு உணவு இல்லாமல் இறந்திடும் நிலையை தான் காரணமாகக் காட்டுகிறார்.
       அதற்காகத் தான் " இனியொரு விதி செய்வோம் அதை எந்நாளும் காப்போம் " என மனிதர்களின் வாழ்க்கை நடைமுறைக்குச் சாத்தியமான திட்டத்தை வெளிப்படையாக தெரிவிக்கிறார் .
       மானுடர்களாகிய நமக்கு எல்லாரும் ஓரினம், சுதந்திரம், புதுமைப் பெண், பெண்கல்வி , சாதிப் பிரிவு , மனித வாழ்வு நெறி , தனி மனித  உரிமை என இத்தகைய பல கோணங்களில் மானுடத்தை போற்றிய பாரதியை நாமும் போற்றுவோம் .
      
                          நன்றி

Tuesday 14 August 2018

அந்தகக்கவிப் பேரவையின் 24ஆம் மாதக் கூட்டம் 19/08/2018

அன்புடையீர்,
அந்தகக்கவிப் பேரவையின் இருபத்து நான்காம் மாத நிகழ்வு 19/08/2018 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சென்னை அரும்பாக்கத்தில் உள்ள கோலப்பெருமாள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும். நிகழ்ச்சி மாதம் ஒரு ஆளுமை, தமிழ்ச்சுவை, நூல் அறிமுகம், ஆய்வுக் கட்டுரை மற்றும்  ஆய்வுக் கட்டுரை மீதான விவாதம் என்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாதம் ஒரு ஆளுமை:

“காலத்தை வென்ற கலைஞர்” திரு. மு. ராமன், பட்டதாரி தமிழ் ஆசிரியர், அரசு
மேல்நிலைப் பள்ளி, மதுரவாயில், சென்னை.

நூல் அறிமுகம்:

"சப்பரம்எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் அவர்கள். அறிமுகம் - திருமதி. நிஷா, முனைவர் பட்ட ஆய்வாளர், மாநிலக்கல்லூரி, சென்னை

ஆய்வுக்கட்டுரைகள்:

“எட்டுத்தொகையில் பறவைகள்” முனைவர் பட்ட ஆய்வாளர் ராமன் அவர்கள்,
பச்சையப்பன் கல்லூரி, சென்னை.

“சேரன் திரைப்படங்களில் சமூக சிந்தனை” முனைவர் பட்ட ஆய்வாளர் அம்பிகா
அவர்கள், மாநிலக்கல்லூரி சென்னை.

நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள   விருப்பமுள்ளவர்கள் கொடுக்கப்பட்டுள்ள எண்களில் 17/08/2018க்குள்  தொடர்புக்கொண்டு தங்கள் வரவை உறுதிசெய்துக்கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

ஆவணி மாத நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்

திருமதி. வத்சலா
95 51 62 83 27

தலைவர்
செ.பிரதீப்
94457 49689. 93833 99383.

செயலாளர்
மு.ராமன்
94443 67850.


நன்றி.

http://anthakakavi.blogspot.in