(அந்தகக்கவிப் பேரவையின் நான்காம் கூட்டத்தில் (27/11/2016) திருமதி. சரோஜா சகாதேவன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது)
நூல் அறிமுகம்:
அனைவருக்கும் வணக்கம்
அந்தகக்கவி பேரவையின் நோக்கம் இதன் செயல்பாடு ஆகியவற்றுக்காக முதலில் என்
மகிழ்ச்சியையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்றைய புத்தக மதிப்புரையில் நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தப்போவது “முட்டையின் பலமும் போராளிச் சிறுவனும்” என்னும் வரலாற்று நாவல். இது குழந்தைகள்
இலக்கியத்துக்கானது. இந்நூல் இரண்டு மையக்கருத்துகளைக் கொண்டது.
ஐந்து வயதில் தாயை இழந்து எட்டு வயதில் ஊருக்குள் ஏற்பட்ட தீ விபத்தால் தன்னுடைய வீட்டையும் இழந்து
உறவினர்களின் உதாசீனமும், வறுமையும் துரத்த தன் குடும்பத்தாரோடு ஊரைவிட்டு வெளியேறுகிறான். அடுத்த
இருப்பிடம் தேடிப்புறப்படும் நேரத்தில் மாட்டு வண்டியில் அமர்ந்திருக்கும்
சிறுவனின் மனதில் ஒரு வைராக்கியம் தோன்றுகிறது.
“இனி இந்த ஊருக்கே வரக்கூடாது. அப்படி வர நேர்ந்தால் நான்
ஓரு இன்ஜீனியர் துரையாக கோட்டும் சூட்டும்
அணிந்து தலையில் தொப்பி காலில் ஷீவுடன் ஜீப்பில்தான் ஊருக்குள் நுழைவேன்” என்று உறுதி கொள்கிறான். பல்வேறு இடர்பாடுகளைக் களைந்து
அந்த சிறுவனின் வைராக்கியம் நிறைவேறுகிறது.
அடுத்து, அச்சிறுவன்
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது அவனது ஆசிரியர் ‘முட்டையை செக்குத்தாக வைத்து யானையே மிதித்தாலும் உடையாது’ என்று கூறினார்.
ஆசிரியர் கூறியச் செய்தி சிறுவனின்
மூளையை முடுக்கி விடுகிறது. முட்டையின் பலத்துக்கான காரணம் எதுவாக இருக்க முடியும்?
தீவிரமாக யோசிக்கிறான். முட்டையின் ஓடா? இல்லை. காற்றறையா? இல்லை. உள் இருக்கும் திரவத்தின்
சக்தியா? அதுவும் இருக்காது. அப்படியானால்
முட்டையின் பலத்துக்கான காரணம் என்ன? தீவிரமாக நீண்ட நாட்கள் யோசித்துக்கொண்டே இருந்தான்.
தினம் தினம் வீட்டில் உள்ள முட்டைகளை
ஆசிரியர் கூறிய படி உள்ளங்கையில் செக்குத்தாக நிறுத்தி, உடைத்து உடைத்துப் பார்க்கிறான். கடைசியாக ஒரு முடிவுக்கு
வருகிறான்.
முட்டையின் பலத்துக்கான காரணம் அதனுடைய வடிவ அமைப்புதான் என்று முடிவு செய்கிறான்.
முட்டையின் வடிவத்தைப் பற்றிய செய்தி எதுவும் கிடைக்காததால் முட்டையின்
வடிவத்தை அதன் வளைக்கோட்டைத்தானே
கண்டுபிடிக்கிறான்.
பல வருட உழைப்பின் பயனாக முட்டையின்
வளைகோட்டைக் கணித ரீதியில் கண்டறிந்து அதற்கு எக்லிப்ஸ் (Egglipse) என்று பெயரிடுகிறான். மேலும் மேலும் ஆராய்ச்சி தொடர்ந்து
முட்டையின் வளைகோடு குறித்த அவனது கண்டுபிடிப்புகள் உலக அளவில் பாராட்டைப்
பெறுகிறது.
இவ்விரண்டு மையக்கருத்துகளையும் கொண்டு எழுதப்பட்ட இந்நாவல் சிறுவன் ஊரைவிட்டு
மாட்டு வண்டியில் வெளியேறுவதில் தொடங்கி அவனது வைராக்கியம் நிறைவேறும் விதமாக ஒரு
இன்ஜீனியராக ஜீப்பில் அந்த ஊருக்குள் நுழைவதாக முடிகிறது.
இந்நூல் சிறுவர்களுக்குத் தோல்வியைக் கண்டு துவண்டுவிடாத உத்வேகத்தையும், உழைப்பின் மேன்மையையும் பிரச்சனைகளைத் தைரியமாக
எதிர்கொள்ளும் விதத்தையும் புதிய கண்டுபிடிப்புக்கானத் தேடலையும் உருவாக்கும்
என்பதையும் சந்தேகம் இல்லை.
பெரியவர்கள் இந்நூலை வாங்கிப்
படிப்பதுடன் சிறுவர்களுக்கும் இதை அறிமுகப்படுத்த வேண்டும். என்று கேட்டுக்
கொள்கிறேன்.
No comments:
Post a Comment