Saturday, 15 August 2026

நன்றி நவில நா ஒன்று போதாதே

அந்தகக்கவிப் பேரவையின் பதினோராம் ஆண்டு விழா மற்றும் நூல் வெளியீட்டு விழாவிற்குத் தங்களது பேராதரவினை வழங்கி ஒத்துழைத்து, விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை வழங்கிய பார்வையற்றோரின் முன்னோடி திரு. க. தியாகராஜன் அவர்களுக்கும், இந்திய நீதித் துறை உச்சநீதிமன்றத் துணைச் செயலர் முனைவர் ந. விசாகமூர்த்தி இ.ச.ப அவர்களுக்கும், சிறுவர் இலக்கிய எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் விழியன் அவர்களுக்கும், தலைமையாசிரியர் திருமதி. முத்துமாரி தேவி அவர்களுக்கும், பார்வையற்றோரின் வாசிப்பாளர் மருத்துவர் சியாமளா அவர்களுக்கும், பார்வையற்றோரின் தன்னார்வலர் மற்றும் கல்வியாளர் சாமுவேல் அவர்களுக்கும் எங்களது நன்றிகளைக் காணிக்கையாக்குகிறோம்.

கூண்டிலேற்ற முடியாத குற்றவாளிகள் முதன்மையான சட்டங்களை முன்வைத்து என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்குத் தலைமையேற்றுச் சிறப்பித்த வழக்கறிஞர் ப.சு. பாரதி அண்ணா அவர்களுக்கும், கருத்தாளர்களாகச் சிறப்பான கருத்துக்களை முன்வைத்து உரை வழங்கிய முனைவர் உ. மகேந்திரன் அவர்களுக்கும், திருமதி. மு. முத்துச்செல்வி அவர்களுக்கும், முனைவர் எஸ். வரதராஜ் அவர்களுக்கும், முனைவர் மா. சிவக்குமார் அவர்களுக்கும், முனைவர் கு. முருகானந்தன் அவர்களுக்கும், திரு. தே. பாலநாகேந்திரன் அவர்களுக்கும் எங்களது நன்றிகளை உவகையுடன் உரித்தாக்குகிறோம். மேலும், இந்தப் பொருண்மையில் நம்மைச் சிந்திக்கச் செய்த "கூண்டிலேற்ற முடியாத குற்றவாளிகள்" நூலின் ஆசிரியர் முனைவர் மு. முருகேசன் அவர்களுக்கு எங்களது சிறப்பான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏறக்குறைய 35 ஆண்டுகளாகப் பார்வையற்றோரின் வாசிப்பாளராக, தன்னார்வலராகச் சேவையாற்றி வரும் திருமதி. பிரேமா ரவி அவர்களுக்கும், எழுத்தாளர் சரோஜா சகாதேவன் அவர்களுக்கும் மற்றும் விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த அனைத்துத் தன்னார்வலர்களுக்கும், விழா தொடங்கியது முதல் நிறைவு வரை எல்லாவற்றையும் மிக நேர்த்தியாகச் செய்து தங்களது முழு ஒத்துழைப்பையும் வழங்கிய திருமதி. நர்த்தனா அவர்கள் மற்றும் அவரது குழுவினர் அனைவருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றியை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

வெளியிடப்பட்ட பேரவையின் தமிழ்வனம் பாகம் 3 மற்றும் குழந்தைகளைச் சிந்திப்போம் புத்தகங்களைச் சிறப்பாக வடிவமைத்துப் பதிப்பித்த ஜீவா பதிப்பகத்திற்கும், முனைவர் வத்சலா அவர்களின் விவசாயத்தில் அறிவியல் அன்றும் இன்றும் மற்றும் முனைவர் லட்சுமிநாராயணன் அவர்களின் பாவேந்தரின் விதை வீரியம் புத்தகங்களைச் சிறப்பாக வடிவமைத்து வெளியிட்ட வத்சலா பதிப்பகத்திற்கும், அரிய கட்டுரைகளை வழங்கிச் சிறப்பித்த சான்றோர் பெருமக்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் எங்களது உளமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

விழா அழைப்பிதழை ஒலி வடிவில் உருவாக்கி வழங்கிய பேராசிரியர் திவாகர் அவர்களுக்கும், வெளியிடப்பட்ட புத்தகங்களின் முகப்பு அட்டைப்பட ஒலி விவரணையை உருவாக்கி வழங்கிய தன்னார்வலர் திருமதி. நர்த்தனா அவர்களுக்கும், பார்வையற்றோருடைய படைப்புகளை விற்பனை செய்யும் வகையில் அமைக்கப்பட்ட அரங்கை மிகச் சிறப்பாக நிர்வகித்த கார்த்திக் அவர்களுக்கும், படைப்புகளை வழங்கிய படைப்பாளர்களுக்கும் நன்றி நவிலக் கடமைப்பட்டுள்ளோம்.

விழா சிறப்பாக நடைபெற நிதி உதவி வழங்கிய அனைத்து கொடையாளர்களுக்கும், தாமாக முன்வந்து மாலை சிற்றுண்டி மற்றும் பார்வையற்றோருக்கான அன்பளிப்பு வழங்கிய மருத்துவர் ஷியாமலா அவர்களுக்கும், இரவு உணவு வழங்கிய கல்வியாளர் சாமுவேல் அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்கிக்கொள்கிறோம்.

விழாவிற்கு வந்து பங்கேற்றுச் சிறப்பித்த தமிழ் ஆர்வலர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், பிற துறை சார்ந்த நண்பர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என விழாவில் பங்கேற்றுத் தங்களது பேராதரவை வழங்கிய அனைவருக்கும் அந்தகக்கவிப் பேரவையின் நெஞ்சார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறோம்.

விழாப் பதிவேட்டின்படி சிறப்பு விருந்தினர்கள் உள்ளிட்ட அனைவரையும் சேர்த்து 153 நபர்கள் பங்கேற்றார்கள் என்பதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைந்தோம். பேரவையின் தொடக்கம் முதல் தற்போது வரை எங்களுக்குப் பேராதரவு வழங்கி வரும் அனைவருக்கும் எங்களது உளமார்ந்த நன்றிகளை உவகையுடன் உரித்தாக்குகிறோம்.

நன்றி.

அந்தகக்கவிப் பேரவை. 

No comments:

Post a Comment